Skip to main content

பாதுகாப்பு தேடி காவல்நிலையம் சென்றால் அங்கே அவர்களுக்கே பாதுகாப்பில்லை - மருத்துவர் ஷாலினி வேதனை!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

kl;


சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் மருத்துவர் ஷாலினி அவர்கள் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்தார். இதுதொடர்பாரக அவர் பேசியதாவது, "பலரும் இங்கே செந்தமிழில் பேசினார்கள், என்னால் அப்படி எல்லாம் பேச முடியாது. எனக்குத் தெரிந்த சென்னை தமிழில்தான் பேசுவேன். ‘நடுவுல கொஞ்சம் அறிவியலைக் காணோம்’ என்றதும் இவர்கள் எதைப் பற்றி பேசப் போகிறார்கள் என்று நீங்கள் சற்று குழம்பி கூட போக வாய்ப்பிருக்கிறது. என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும்போது அன்றாடம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி நீங்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்று கூறி என்னை அழைத்தார்கள். அப்போது நீங்கள் ‘நடுவுல கொஞ்சம் அறிவியலைக் காணோம்’ என்ற தலைப்பையே வைத்துக்கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கூறினேன். அதற்கும் பெண்களுடைய தற்போதைய நிலைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை நாம் பேச வேண்டும். அதற்கு முன் பெண்களுடைய தற்போதைய நிலை என்னவாக இருக்கிறது என்பதைப் பற்றியும் நாம் பேச வேண்டும். இங்கே பேசியவர்கள் பலரும் கூறினார்கள் பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று. நான் தற்போது ஒன்று கூற விரும்புகிறேன். உலகில் கர்ப்பமாக இருக்கும் எந்தப் பெண்ணும் 5 மாதம் ஆனவுடன் மருத்துவரிடம் சென்று தனக்கு எந்த குழந்தை பிறக்கும் என்று தெரிந்துகொள்ளலாம். அதற்கு தடை ஏதும் இல்லை. ஆனால் இந்தியாவில் அப்படி  மருத்துவர் பதில் கூறினார் அவர் சிறைக்குச் செல்ல வேண்டும். 

 

ஏனென்றால் பெண் குழந்தைகளுக்கு சமூகத்தில் காட்டப்படும் பாகுபாடு. பெண் குழந்தைகளை சமூகம் சுமை என்று நினைக்கிறது. பெண் குழந்தைகள் செலவு வைப்பார்கள் என்ற எண்ணம் எல்லாம் சமூகத்தில் புரையோடி இருக்கிறது. அவர்கள் படித்தாலும் சம்பாதித்து யாரோ ஒருவருக்கு கொடுக்க போகிறது. அதற்கு நாம் எதற்கு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகம் மக்கள் மனதில் இருக்கிறது. இந்த முதலீடு திரும்ப கிடைக்கப் பெறாது என்று நினைக்கிறார்கள். சரி, பெண்கள் படித்து வேலை செய்யும் இடங்களில் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தால் அங்கும் நம்மால் இருக்க முடியவதில்லை. மீ டூ தொல்லைகள் தொடர்கிறது. அதைப் பற்றி வெளியே சொன்னால், ‘தற்போது ஏன் கூறுகிறீர்கள்’ என்று கேட்கிறார்கள், எப்போது ஒரு பிரச்சனையைப் பற்றி சொல்ல வேண்டும் என்று தெரியாமல் பெண்கள் குழம்பிப் போய் உள்ளார்கள். அதற்குக் கூட அவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. உடனே சொன்னாலும் பிரச்சனை, லேட்டா சொன்னாலும் பிரச்சனை. போலீஸ்காரர்களிடம் சொல்லலாம் என்று பார்த்தால் போலீஸ்கார அம்மாவுக்கே பிரச்சனை. இப்போது இதை எங்கே போய் சொல்வது. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். ஏன் நாம் இந்த மாதிரியான இக்கட்டான நிலையில் இருக்கிறோம், நமக்கு என்ன பிரச்சனை என்று பார்க்க வேண்டும். நாம் அறிவியலை இடையில் மறந்துவிட்டோம் என்பது மட்டுமே காரணமாக இருக்கும். அது எப்போதிலிருந்து காணாமல் போய்விட்டது என்று பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் எல்லா மனித குலங்களும் அறிவியல் ரீதியாகத்தான் யோசிக்கிறார்கள். பிறகு அதில் மாற்றங்கள் வந்துவிடுகிறது. ஆனால், அது பெண்களுக்கு எதிராக இருக்கக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.

 

 

Next Story

'மக்கள் பண்பு கொண்ட தலைவர்தான் தேவை... 56 இன்ச் மார்பு இல்லை" - மருத்துவர் ஷாலினி!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

fhj


அரசியல் தலைவர்கள் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்வதும், மக்களைச் சந்திப்பதும் வாடிக்கையான ஒன்றாக இருந்தாலும், தற்போது அரசியல்வாதிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பொதுமக்களால் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு தமிழகம் வந்த ராகுல்காந்தி, தமிழகத்தில் சில மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். மேலும் யூடியூப் சேனல் வைத்திருக்கும்  நபர்களுடன் பிரியாணி சமைத்து உண்டார். இந்த பிரச்சாரம் பலரால் பாராட்டப்பட்டாலும், சிலர் விமர்சனமும் செய்கிறார்கள். அரசியல்வாதிகளின் இந்தப் போக்கு ஆரோக்கியமானதா, அவர்கள் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது குறித்து பல்வேறு கேள்விகளை மனநல மருத்துவர் ஷாலினியிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,

 

எப்போதுமே தேர்தல் வரும் நேரத்தில் இந்த மாதிரியான சிந்தனைகள் எல்லோருக்கும் வருவதுண்டு. பாஜக மோசமான கட்சி என்றால் அதற்காக காங்கிரஸை ஆதரிக்க முடியுமா? காங்கிரஸ் நல்ல கட்சியா என்ற கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது. மேலும் பாஜக இந்துத்துவா என்றால் காங்கிரஸ் மென்மையான இந்துத்துவா என்று சொல்லப்பட்டு வருகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

 

அப்படி என்றால் அதையும் எதிர்க்க வேண்டும்தான். நாம் ஒன்றும் காங்கிரஸ் கட்சியிடம் சரணாகதி அடையப் போவதில்லை. முடிந்தால் காங்கிரஸ் கட்சியை நம்முடைய கோட்பாடுகளுக்கு கொண்டு வர முயற்சிப்போம். எரியிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்க்கிற நிலைமையில் நாம் இருக்கிறோம். எந்தக் கொள்ளி நமக்கு பாதுகாப்பாக இருக்கிறது, நம் வாழ்க்கை தரத்தைப் பாதுகாப்பதாக இருக்கிறது என்பதைப் பார்த்து நாம் அந்த கொள்ளியை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியதுதான். சர்வாதிகார தன்மையில் இருக்கிறவர்களை நம்பி நாம் பயணிக்க முடியாது. அடுத்த முறை மாறிவிடுவார்கள் என்று நாம் யாரையும் நம்ப முடியாது. தொடர்ச்சியாக அவர்களின் செயல்பாடு மதத்தை நோக்கியதாக இருக்கும்போது அவர்களை மக்கள் எப்படி பார்ப்பார்கள். 

 

இருக்கிற கொள்ளியில் பெட்டர் கொள்ளியை நாம் தேர்தெடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது நமக்கு ஏற்படுகிறது. ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். எனவே மக்கள்தான் நம்மை யார் வழிநடத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். எங்களுக்கு வேண்டியது பெண்கள் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய ஒரு நபர். அந்த வகையில் ராகுல் காந்தி டிக் வாங்குகிறார். ஒரு சின்ன பெண் அவருடன் புகைப்படம் எடுக்க அவரின் வண்டியில் ஏறும்போது அந்தக் குழந்கையின் உயரத்துக்கு குனிந்து, அந்த பெண்ணின் ஆடையை சரி செய்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். இந்த மாதிரியான மக்கள் பண்பு கொண்ட ஒருவர்தான் வேண்டும். 56 இன்ச் மார்பு எல்லாம் எங்களுக்கு வேண்டாம்.

 

அந்த ராகுல் காந்தியையே ஒரு குழந்தை என்ற குற்றச்சாட்டைத்தானே பாஜக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது?

 

பாஜக மட்டுமல்ல, வெளிநாட்டில் கூட இந்த மாதிரியான நடவடிக்கைகள் தொடர்கிறது. அதாவது ஒருவரை இவர் இப்படிதான், இவருக்கு ஒன்றும் தெரியாது, அவருடைய அறிவு இவ்வளவுதான் என்று அவரது மதிப்பை குலைக்கும் நோக்கில் எதிராளிகள் செயல்படுபவாா்கள். அதுவே பெண்ணாக இருந்தால் அவரின் கற்பு நெறியைப் பற்றி தவறாகப் பேசுவார்கள். இது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் சிலர் இந்த மாதிரியானடிவேலைகளை செய்து வருகிறார்கள். எனவே மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். மறுபடியும் தவறானவர்களைத் தேர்வு செய்யக் கூடாது. ராகுலுக்கு என்ன டெஸ்ட் வைத்து அவரை தோற்றுப் போய்விட்டார் என்று கூறுகிறார்கள்? அதில் எதுவும் உண்மையல்ல. சொல்லப்போனால் அவர் முன்னேறிக் கொண்டுதான் வருகிறார். தான் தோல்வி அடையவே இல்லை என்று சொல்லும் நபர்தான் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பொய் சொல்கிறார். நாம் சொல்வதைக் கேட்கும் மனிதர்களை சற்று உயர்த்தி விடுவதுதான் நம்முடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவியாக இருக்கும். 

 

ராகுல் காந்தி மட்டும் காங்கிரஸ் இல்லை. கட்சியில் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். அப்படி இருக்கையில் நாம் அவரை எப்படி நம்ம முடியும்? 

 

ராகுல் காந்தி மட்டும் காங்கிரஸ் இல்லை, உண்மைதான். ஆனால் ராகுல் காந்தி நம்மை பயன்படுத்திக் கொள்ளவில்லை. நாம்தான் அவரை பயன்படுத்திக் கொள்கிறோம். அவருக்கு இடமே இல்லை என்றாலும் நாம்தான் ஒரு இடத்தை ஏற்படுத்திக் தர விரும்புகிறோம். இந்தப் பையனுக்கு மனித பண்பு நம்மை ஆள்பவர்களை விட அதிகம் இருக்கிறது என்று மனதில் தோன்றுகிறது. இரக்க சுபாவம் இருக்கிறது, இவருக்கு நாம் ஒரு பொறுப்பை கொடுத்தால் அவர் நம்மைப் பாதுகாப்பார் என்ற எண்ணம் தோன்றுகிறது. எனவே நம்முடைய பாதுகாப்பை சார்ந்தே அவரின் மீது நம்பிக்கை பிறக்கிறது. 

 

Next Story

"இந்தி செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு மொழி; ஆனால் தமிழ் அப்படியா.."?- மருத்துவர் ஷாலினி காட்டம்!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020
kl;

 

 

கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு டேக் "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக இளைஞர்களால் இந்த கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அதையே டீ சர்ட்டில் ப்ரிண்ட் செய்து பிரபலங்கள் அணிந்து வந்தது அந்த வாக்கியத்துக்கு மேலும் வலு சேர்த்தது. லட்சக்கணக்கான ஹேஸ்டேக்குகள் ட்விட்டரை அதிர வைத்தன. சினிமா பிரபலங்கள் ஆரம்பித்து பாமரன் வரையில் டீ சர்ட் அணிந்து இந்தி திணிப்புக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் இது சரியான முறைதானா, இந்த எதிர்ப்பு மத்திய அரசின் காதுகளில் விழுமா போன்ற பல்வேறு கேள்விகளை நாம் மருத்துவர் ஷாலினியிடம் முன்வைத்தோம்.நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு 'இந்தி தெரியாது போடா' என்று ட்விட்டரில் இளைஞர் ட்ரெண்ட் செய்தனர். பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதை நீங்களும் கவனித்திருப்பீர்கள். இதை தமிழின் மீது இருக்கின்ற பாசம் அல்லது இந்தி திணிப்பின் மீது இருக்கின்ற வெறுப்பு என்று பார்க்க வேண்டுமா இல்லை, இது ஒரு பேஷன் என்ற அளவில் பார்க்க வேண்டுமா?

 

அந்த காலத்தில் இருந்தே தமிழகத்தில் மொழி திணிப்பில் ஒரு வழக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது அப்பர், மாணிக்க வாசகர் காலம் தொட்டே இருந்து வருகின்றது. அந்த வகையில் இதைதான் படிக்க வேண்டும், எழுத வேண்டும், பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தும்போது அதனை ஆதிகாலம் முதலே அனைவரும் எதிர்த்தே வந்துள்ளனர். அந்த திணிப்பு உணர்வுக்கு எதிரான மனநிலை தமிழக மக்களுக்கு எப்போதுமே இருந்திருக்கின்றது. நாம் சும்மா இருக்குகின்ற போது நம்மை சீண்டுகிறார்கள் என்றால் நாம் இன்னும் எழுச்சியோடு அதற்கான எதிர்வினைகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். தற்போது நடந்துகொண்டிருப்பது கூட அந்த எண்ணத்தின் வெளிப்பாடாகத்தான் நான் பார்க்கிறேன்.  10, 20 தலைமுறைக்கு முன்பு வட இந்தியாவில் வாழ்த்தவர்களில் பலர் தமிழ் பேசினார்கள். அவர்களுக்கு எல்லாம் தற்போது எந்த உணர்வும் ஏற்படவில்லை. ஏனென்றால் அவர்கள் கலாச்சாரத்தோடு தொடர்பில்லை. நாம் தொடர்ச்சியாக அந்த தொடர்பில் இருந்து கொண்டிருக்கின்றோம். அதனால் நமக்கு திணிப்பு என்றதுமே கோபம் வருகின்றது. 

 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மனப்பான்மையும் தமிழகத்தில் இருந்து வருகின்றதே? 

 

நீங்கள் சொல்லும் இந்த கலாச்சாரம் எப்போது வரும் என்றால் நாங்கள் நன்றாக செழிப்பாக இருக்கிறோம், நீங்கள் யாரும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது, நாங்கள் சாப்பிட்டுவிட்டோம், நீங்களும் கொஞ்சம் சாப்படுங்கள் என்று சொல்ல தோணும். ஆனால் அந்த சூழ்நிலையை நாம் இதுவரை அடையவில்லை. அதற்கான போதுமான தடைகளை அடிக்கடி அவர்கள் வேண்டுமென்றே உருவாக்குகிறார்கள். இந்த 3500 வருட தமிழக வரலாறு ஒரு சாதாரண மாணவனுக்கு கூட தெரியும் என்பதால் எங்களிடமா நீங்கள் வந்து வாலாட்டுகிறீர்கள் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் இருக்கும். இந்தி மிக குறுகிய காலத்திற்கு முன்பு உருவாகிய மொழி. பாரசிகம் தான் இங்கே அதிக ஆண்டுகள் பேசப்பட்டு வந்த மொழியாக நமக்கு தெரிகின்றது. ஏனென்றால் அவர்கள் இங்கு வந்து ஆட்சி செய்தார்கள். அதன் காரணமாக பெரும்பாலானவர்கள் அந்த மொழியினை கற்றுக்கொண்டனர். தற்போது அந்த உருது மொழியுடன் சமஸ்கிருதத்தை மிக்ஸ் செய்து இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று சொல்கிறார்கள். இந்தியே ஒரு செயற்கையாக உருவாக்கப்பட்ட மொழி, அதுவும் பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய மொழி. அதற்கு வயது 200 என்ற அளவில் தான் இருக்கிறது. எனவே யார்கிட்ட உங்க ஆட்டத்தை காட்டுகிறீர்கள் என்று நாம் கேட்கிறோம். 

 

நாம் அவர்களின் திணிப்பை கூட பெரிய அளவில் சீரியசாக எடுத்துக்கொண்டதாக நினைக்கவில்லை. ஒரு சிறுவனிடம் விளையாடும் பெரியவர்களை போலவே நாம் எடுத்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு அது எப்போது புரியும் என்று தெரியவில்லை. அந்த எண்ணம் அவர்களுக்கு வராத காரணத்தால்தான் தற்போது டீ சர்ட் வரை இந்த விஷயம் போய் நிற்கிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுடன் இதை ஒப்பிடும்போது, கோடிக்கணக்கான மக்கள் இந்த டீ சர்ட்டை போட்டு எதிர்ப்பை தெரிவிக்கின்ற போது அதனால் வரும் எதிர்வினைகள் அதிகம். பல இடங்களில் அதன் தாக்கம் எதிரொலிக்கும். இந்த கால இளைஞர்கள் இதனை கையில் எடுத்துள்ளார்கள் என்றுதான் நாம் பார்க்க வேண்டும். ஒன்றோடொன்று பொருத்தி பார்க்க வேண்டாம். அந்தெந்த கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப போராட்ட வழிமுறைகள் மாறுபடுகின்றது. இந்த கணினி யுகத்தில் இந்த மாதிரியான எதிர்ப்புணர்வு வெளிகாட்டப்படுகின்றது என்ற அளவில்தான் இதனை பார்க்க வேண்டும்.