Skip to main content

என்னை ஏன் இப்படி செய்தார்கள்? - 13 வயதுக் குழந்தையின் கேள்வியால் பிறந்த மீ டூ #metoo இயக்கம்

Published on 15/10/2018 | Edited on 15/10/2018

'நம் சமூகத்தில் பாலியல் விழிப்புணர்வும் அதுதொடர்பான சரியான கல்வி முறையும் இல்லை, அதனால்தான் பெண்களுக்கு எதிரான பல வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகமாக நடக்கின்றன' என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. 'வெறும் கல்வி மட்டும்போதாது பெற்றோர்களும் சரியான முறையில் தங்களின் பிள்ளைகளுக்கு பாலியல் தொடர்பான புரிதலை ஏற்படுத்த வேண்டும்' என்பது இன்னும் சிலரின் கருத்தாக இருக்கிறது. இது இரண்டுமே மறுக்கமுடியாதது என்றாலும், இன்றைய சூழலில் சமூகம்தான் குழந்தைகளை வளர்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. நம்மை சுற்றி சமூகத்தில் ஒரு தவறு நிகழ்கிறது என்றால் அதைத் தடுப்பதற்கான வழி, முயற்சி, தண்டனை என்பது அந்தத் தவறுகளை முதலில் வெளியே சொல்வதுதான். ஒரு குற்றத்தை வெளியே சொல்லும்போதே அதற்கான பாதி நீதி கிடைத்துவிடுகிறது. ஒரு காலம் வரையில் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவதை வெளியே சொல்ல வேண்டும் என்றால் காவல் நிலையம், நீதிமன்றம் என்று செல்லவேண்டும். அதனால் மானம் மரியாதையை எல்லாம் போய்விடும் என்றே சில தலைமுறைகள் நமக்கு முன் மடிந்துவிட்டது. ஆனால், இன்றைய நவீன உலகில் சமூக வலைதளம் மூலமாக எந்தத் தவறையும் எளிதாக ஆவணம் படுத்தமுடிகிறது. அப்படி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஆவணம் செய்ய எளிதாக இருக்கும் வழிதான் மீ டு (#me too) எனும் ஹாஷ் டேக். இந்த ஹாஷ் டேக் எப்படி வந்தது, இதை யார் முதலில் ஆரம்பித்தது, உலகளவில் இருந்து இந்தியா தமிழகம் என்று இது எப்படி பயணப்பட்டது என்பதை பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். 

 

mm

 

2006-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க வம்சாவழியான அமெரிக்கப் பெண்ணான 'தரானா புக்' எனும் சமூக செயற்பாட்டாளர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை வைத்து ஒரு ஆவணம் செய்வதற்காக முதன்முதலில் இந்த மீ டு எனும் ஹாஷ் டேக்-ஐ உபயோகம் செய்துள்ளார். ஏன் இந்த சொற்தொடரை உபயோகம் செய்ய வேண்டியதாய் இருந்தது என்பதையும் விளக்கியிருக்கிறார். ஒரு பதிமூன்று வயது குழந்தை ’நான் வன்கொடுமைக்கு ஆளானேன் இதற்கெல்லாம் காரணம் என்ன, ஏன் இப்படி நடக்கிறது’ என்று 'தரானா புக்’கிடம் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளிக்க முடியாமல் சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு பிறகு அந்தக் குழந்தைக்கு ’மீ டு’  (எனக்கும் இப்படித்தான்) என்று பதில் அளித்துள்ளார். அதனால் அந்த சொற்தொடர்தான் இதற்கு சரியானது என்று முடிவு செய்துள்ளார். அதன் பின் நியூயார்க் நகரத்தில் மீ டு இயக்கத்தை அவர் துவங்கினார். அதன் பின் இந்த ஹாஷ் டேக் சமூக வலைதளங்களில் 10 அக்டோபர் 2017-ல் இருந்து வைரலானது. முதலில் ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்னஸ்டேய்ன் என்பவர் மீது 80-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் செய்துள்ளனர். அதன் பின் இந்தியாவில் ராயா சர்கார் எனும் சட்டக்கல்லூரி மாணவி கடந்த ஆண்டு அவரின் கல்வி நிறுவனத்தில் பெண்களுக்கு எதிராக நேர்ந்த வன்கொடுமைகளை வெளிக்கொண்டுவந்தார். ஆனால் தற்போது பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, இயக்குனரும் நடிகருமான நானா படேகர் மீது தெரிவித்த பாலியல் வன்கொடுமைக்குப்பின் மீ டு ஹாஷ் டேக் இந்தியா முழுக்க பிரபலமாகியிருக்கிறது. 

 

தமிழகத்தில் பாடகி சின்மயி முதலில் யூட்யூப் விமர்சகர் பிரஷாந்த் மெசேஜ் மூலமாக தொந்தரவு செய்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து பாடலாசிரியர் வைரமுத்து ஸ்விஸர்லாந்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியின்போது பாலியல் தொந்தரவு தந்ததாக புகார் செய்தார். அதன்பின் மீ டு ஹாஷ் டேக் தமிழகத்தில் பிரபலமானது. இது வெறும் சினிமாத்துறை மட்டுமின்றி விளையாட்டுத்துறை பத்திரிகைத்துறை என்று இந்த ஹாஷ் டேக்-ன் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. உதாரணத்திற்கு முன்னாள் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா 2009-ல் தனக்கு நேர்ந்த வன்கொடுமை பற்றி பகிர்ந்து இருக்கிறார். பத்திரிகைத்துறையில் பணிபுரிந்து தற்போது ப.ஜ.க.வின் எம்.பி. ஆக இருக்கும் எம்.ஜெ.அக்பர், அவர் பத்திரிகைத்துறையில் பணியாற்றியபோது வன்கொடுமை செய்ததாக தற்போது புகார் வந்துள்ளது. இதற்கு எதிர்மறையாக எப்போதோ நடந்த வன்கொடுமைகளைப் பற்றி இப்போது பேசுவதற்கு காரணம் என்னவென்று பா.ஜ.கவின் உதித்ராஜ் மற்றும் பலர் கேள்விகளை எழுப்பினர். ‘பாதிக்கப்பட்டபோது வெளியே சொல்வதற்கு ஏற்ற வகையில் ஏதும் இல்லை. ஆனால் இப்போது சமூகவலைதளம் எனும் ஒரு ஆயுதம் இருக்கிறது’ என்று பதில் அளித்துள்ளனர். இந்நிலையில் பெண்களுக்கு ஆதரவாக பிரபல நடிகையான ஐஸ்வர்யாராய் ’பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைகளை தைரியமாக வெளியே சொல்ல சமூகவலைதளம் பெரும் உதவிகரமாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்களில், இதற்கு ஆதரவாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி ’பெண்கள் தெரிவிக்கும் பாலியல் வன்கொடுமைகளை கவனத்தில்கொண்டு அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். 

 

mm

 

இத்தனை காலமாய் பெண்கள் தங்கள் மனதில் வைத்துப் புழுங்கிய நிலை மாறி வெளியே வந்து சுவாசிக்கின்றனர், பேசுகின்றனர். அதை முற்றிலுமாக கொச்சைப் படுத்தி நிராகரிக்காமல் உண்மையை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிய வாய்ப்பான இந்த 'மீ டூ'வை தவறாகப் பயன்படுத்தி இத்தனை காலமாக இடித்துத் திறக்கப்பட்ட இந்த இரும்புக் கதவை பெண்களே மூடிவிடக்கூடாது.    

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“எறிகணைகள், கிழவியின் கூடையை உடைக்கின்றன” - வைரமுத்து 

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
vairamuthu about israel iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் இன்னும் நீடித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்தது. மேலும் உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும் என அறிக்கை வெளியிட்டுருந்தது. 

vairamuthu about israel iran issue

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இஸ்ரேல் - ஈரான் இடையே நடக்கும் தாக்குதல் குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, 

“இஸ்ரேல் மீது ஈரானும்
ஹமாஸ் மீது இஸ்ரேலும்
விசிறியடிக்கும் எறிகணைகள்,
பாப்பாரபட்டியில்
ஈயோட்டிக்கொண்டு
பலாச்சுளை
விற்றுக்கொண்டிருக்கும்
பஞ்சக் கிழவியின்
கூடையை உடைக்கின்றன

உலகப் பொருளாதாரம்
பின்னல் மயமானது

உலகு தாங்காது

நிறுத்துங்கள் போரை
ஐ.நாவால் முடியாது;
அவரவர் நிறுத்தலாம்” என பதிவிட்டுள்ளார். 

ஏற்கெனவே கடந்த ஆண்டு இஸ்ரேல் - காசா தாக்குதல் குறித்து, “யுத்த களத்தில் நம் தமிழ்ப் பாடல் ஒலிக்கட்டும்” எனக் குறிப்பிட்டு 'புத்தம் புது பூமி வேண்டும்...'(திருடா திருடா) என்ற பாடலை மேற்கோள்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.