Skip to main content

முதல்வர் பார்வை எங்கள் பக்கம் திரும்புமா? - ஏக்கத்தில் தி.மு.க தொண்டர்கள்!

Published on 28/08/2021 | Edited on 28/08/2021

 

dmk workers longing to convey their issues to party leaders stalin

 

100 நாட்களைக் கடந்துள்ள தி.மு.க ஆட்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் ஒருபக்கம், நிறைவேற்றிய வாக்குறுதிகளால் மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு மறுபக்கம், கட்சி எல்லைகளைக் கடந்து பொதுமக்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. மக்களிடம் பாஸ் மார்க் வாங்கியிருக்கும் தி.மு.க. ஆட்சியை சொந்தக் கட்சிக்காரர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

 

“10 வருஷம் ஆட்சியில் இல்லை, எதிர்க்கட்சியாக பல போராட்டங்கள் நடத்தியது தலைமை. 2014 நாடாளுமன்றம், 2016 சட்டமன்றம், 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் செலவுகள் செய்தோம், கட்சி கரைந்து போகாமல் தொண்டர்களை ஊக்கப்படுத்திக்கொண்டேயிருந்தோம். தேர்தல் களத்தில் கடுமையா உழைச்சோம். செலவு செய்தோம். வெற்றி பெற்ற பிறகு, வெற்றிவிழாவோ நன்றி அறிவிப்பு கூட்டமோ நடத்த முடியலை. தலைவரை சந்திக்கும் வாய்ப்பும் அமையலை. தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடைவெளி விழுந்திருக்கு'' என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

 

"புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு மா.செ.வாக இருப்பவர் அமைச்சர் ரகுபதி, வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் கே.கே. செல்லப்பாண்டியன். ஆலங்குடி எம்.எல்.ஏ.வான அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்து ராஜா இப்படி நான்கு அணிகள் செயல்படுது. புதுக்கோட்டை நகரத்தில் எந்த பணியாக இருந்தாலும் என்னைக் கேட்காம அதிகாரிகள் செய்யக்கூடாது என உத்தரவு போட்டுள்ளார் எம்.எல்.ஏ. இரண்டு வாரத்துக்கு முன்பு நகர நிர்வாகி வீரமணி, டெண்டர் படிவம் கேட்டப்ப, எம்.எல்.ஏ. சொன்னால்தான் தருவோம்ன்னு சொல்ல, அவர் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். அதிகாரிகள் தரப்பிலும் அமைச்சர்களைவிட எம்.எல்.ஏ. தரப்புதான் செல்வாக்கு காட்டுது.

 

வடக்கு மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை தனித் தொகுதி வருது. அங்கு சி.பி.எம். எம்.எல்.ஏ. ஆனால், அந்த தொகுதியில் எந்த அரசு நிகழ்ச்சி நடந்தாலும் மா.செ.வான என்னை அழைக்கணும் அப்படின்னு உத்தரவு போடறார் செல்லப்பாண்டியன். அவரோட மாவட்டத்துக்குள்ளதான் விராலிமலை தொகுதி வருது. அங்க என்னைக் கூப்பிடணும் அப்படின்னு எந்த உத்தரவும் போடல. காரணம், அங்க எம்.எல்.ஏ.வா இருக்கறது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். இப்பவும் அவருக்குப் பயந்துக்கிட்டு இருக்காங்க. கட்சிக்காரங்க எந்தப் பிரச்சனையையும் இந்த 4 பேரில் யாருகிட்ட கொண்டு போனாலும் மற்றவர்கள் எங்களை விரோதியா பார்க்கறாங்க. இதுபற்றி கட்சித் தலைமையின் கவனத்துக்கு கொண்டு போக நினைக்கிறோம். வாய்ப்பே அமையலை” என்கிறார்கள் புதுக்கோட்டை நிர்வாகிகள்.

 

தி.மு.க. வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகியும், மூத்த வழக்கறிஞருமானவர் நம்மிடம், "வழக்கறிஞர்களின் சீனியாரிட்டி, உழைப்பு போன்றவற்றைக் கவனத்தில் கொள்ளாமல், மாவட்ட அரசு வழக்கறிஞருக்கு (பி.பி) சிபாரிசு செய்ய 10 லட்சம், கவர்மென்ட் ப்ளீடருக்கு (ஜி.பி) 5 லட்சம், அடிஷனல் பி.பி, ஜீ.பிக்கு 5 முதல் 3 லட்சம்வரை கேட்கிறார்கள். தென் மாவட்டங்களில் பி.பிக்கு 25 லட்சம், ஜீ.பிக்கு 15 லட்சம் வரை கேட்கறாங்க, அமைச்சர்கள் - மா.செ.க்கள்னு டீல் பேசுறாங்க. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மீது போடப்பட்ட பல வழக்குகளில் ஆஜராகி வாதாடியது, தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் ஆஜரானது, தேர்தல் வழக்குகளில் ஆஜரானது, இதெற்கெல்லாம் கட்சி வக்கீல்கள் ஃபீஸ்கூட வாங்கவில்லை. அப்படி உழைத்தவர்களுக்குப் பதவி கொடுங்கன்னு கேட்டால், டீல் பேசுனா எப்படி? இதை, புகார்களைக் கவனிக்கும் கட்சியின் முதன்மைச் செயலாளர் அமைச்சர் நேரு, அமைப்புச் செயலாளர் பாரதி ஆகியோர் பிஸியா இருக்காங்க. கழக சட்டத்துறையிலும் சொல்ல முடியல. தலைவர் கவனத்துக்கு இதை யாராவது கொண்டு போய் முற்றுப்புள்ளி வைக்கணும்'' என்றார்.

 

நம்மிடம் பேசிய திமுகவின் முக்கிய நிர்வாகியொருவர், "எங்க மாவட்டத்தில் ஒரு காண்ட்ராக்ட்டுக்கான டெண்டர் படிவம் வாங்கப் போனேன். தகவல் தெரிந்து சம்பந்தபட்ட துறையோட அமைச்சரின் பி.ஏ. என்னோட லைன்ல வந்து 10% பேசினார். சின்ன வேலைதானே என்றால், எல்லாத்துக்கும் ஃபிக்சட் ரேட் என்கிறார். கட்சியைப் பலமா வளர்த்து வச்சிருக்கிற சீனியர் ஒன்றிய நிர்வாகியான எங்கிட்ட இப்படி சொல்றீங்களேன்னு கேட்டதுக்கு, எதுக்கு டெண்டர் எடுக்கறிங்க, கட்சி வேலையை மட்டும் பார்க்க வேண்டியதுதானேன்னு கேட்டார். வந்த கோபத்தை அடக்கிக்கிட்டேன். அந்த டெண்டரில் வேற சிலரையும் கலந்துக்குங்கன்னு அமைச்சர் தரப்பே சொல்லியிருக்கு. அவுங்கள பின்வாங்க வைக்க 3 லட்ச ரூபாய் செலவாச்சி. இது என்ன நியாயம்?

 

dmk workers longing to convey their issues to party leaders stalin

 

அதிமுக ஆட்சியில யாருக்கு டெண்டர்ங்கறதை அமைச்சர் முடிவுசெய்து, அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லிடுவார். அதுக்கப்பறம் எத்தனை பேர் கேட்டாலும் சம்பந்தபட்டவங்களுக்கே தரப்படும். அமைச்சர், அதிகாரிகளுக்கான கமிஷனோட முடிஞ்சிடும். இப்போ கட்சிக்காரன் டெண்டர் போட்டான்னா அவனுக்கு எதிரான ஒப்பந்தக்காரங்களைத் தூண்டிவிடறாங்க. கட்சிக்காரனைவிட காண்ட்ராக்டர்களுக்குத்தான் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லாரும் முக்கியத்துவம் தர்றாங்க. 10 வருஷம் கஷ்டப்பட்டு, போராட்டம் நடத்தி, சிறை சென்று, தேர்தல் வேலை பார்த்து, பூத்துல உட்கார்ந்து சண்டை போட்டு, அடிவாங்குன, வழக்குகள் வாங்கி கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலையற என்னையப் போய் ஒ.செ, ந.செ, கி.செ.க்கள் வேண்டாம்னு புறக்கணிக்கறது எந்தவிதத்திலங்க நியாயம்?

 

அமைச்சர்களைத் தேடி அலுவலகத்துக்கோ, வீட்டுக்கோ போனால், இப்ப அவங்களைச் சுற்றி இருப்பவங்க துரத்துறாங்க. ஒன்றிய - நகர நிர்வாகிகளுக்கே இந்த நிலைமைன்னா, சாதாரண தொண்டர்களோட நிலைமை என்னன்னு யோசிச்சிக்குங்க. இதையெல்லாம் வெளிப்படையா சொல்ல முடியலை'' என்றவரிடம், கட்சித் தலைவரிடம் முறையிட முடியவில்லையா என்றோம்.

 

"முதல்வர் முழு நேரமும் மக்களுக்காக உழைக்கிறார். கட்சிக்காரங்களை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கொஞ்சம் முயற்சி செய்தால் சந்திக்க முடிஞ்சது, நாலு வார்த்தையாவது பேச முடிஞ்சது. அறிவாலயத்துக்குப் புகார் மனு அனுப்பினால், யார் மீது புகார் அனுப்புறோமோ, அவுங்களே அந்தக் கடிதத்தைக் கொண்டு வந்து நம்ம மூஞ்சி மேல வீசியதைக் கடந்த காலத்தில் அனுபவிச்சிட்டேன். இப்ப என்ன நிலைமைன்னு தெரியாததால புகார் மனு அனுப்பவில்லை'' என்றார் வருத்தமாக.

 

"கட்சிப் பேச்சாளர்களுக்கு கரோனா முதல் அலையிலிருந்தே பெரும் பாதிப்பு வந்துவிட்டது. பொதுக் கூட்டங்கள் இல்லை. தேர்தல் நேரத்திலும் முன்புபோல கூட்டங்கள் நடக்கவில்லை. இப்போது ஜூம் மீட்டிங்குகளுக்கு கூட வழியில்லை. பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டங்களை ஆன்லைனில் நடத்தினாலாவது தங்களுக்கு உதவியாக இருக்கும். தலைமைதான் ஆலோசிக்கணும்'' என்கிறார்கள்.

 

"கலைஞர் முதல்வராக இருந்தபோது அறிவாலயத்தில் கட்சிக்காரர்களை சந்திப்பார். கட்சி வில்லங்கங்கள் அவரது கவனத்துக்குப் போகும். பேராசிரியர், ஆற்காடு வீராசாமி போன்ற சீனியர்களும் பிரச்சனைகளைக் கவனிப்பாங்க. அப்ப தளபதி மூலமாகவும் கலைஞரிடம் பிரச்சனைகளைக் கொண்டு போகலாம். இப்போது, முதல்வர் ஸ்டாலினுக்கு அதுபோன்ற சீனியர்கள் இல்லை. அவரே ஆட்சியையும் கட்சியையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. கட்சி நிலவரத்தை விரிவா சொல்ல முடியவில்லை. அமைச்சர்களிடமும் அதிகாரிகள் வட்டம்தான் சுற்றி வருது. கட்சிக்காரங்க நெருங்க முடியலை. அதிகாரிகளோ அ.தி.மு.க ஆளுங்களாகவே செயல்படுறாங்க. அதிகாரிகள் வட்டத்தைத் தாண்டி அவுங்க சாதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் வட்டம், குடும்ப வட்டம் சுத்துது. இதெல்லாம் ஆட்சி வந்த பிறகு உருவாகியிருக்கிற வட்டம். அவர்களுக்கு கட்சிக்காரர்களின் அருமை தெரியலை. ஏதோ அவங்க வீட்டு வேலைக்காரங்க மாதிரி நினைக்கிறாங்க. என்னங்க பண்ணுறது'' என்றார்கள்.

 

வேட்டி என்பது கட்சி. பதவி என்பது தோளில் போடும் துண்டு. துண்டைவிட வேட்டி முக்கியம். வேட்டியில் உள்ள ஒவ்வொரு இழையும்தான் தொண்டர்கள். மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் முதல்வரான மு.க. ஸ்டாலின், கட்சித் தலைவராக நிர்வாகிகள் - தொண்டர்களின் ஏக்கத்தைப் போக்கும் நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் முதல்வரின் சுமையைப் பகிர்ந்துகொண்டு வெற்றிக்கு உதவியதுடன், தன்னுடைய சேப்பாக்கம் தொகுதியில் மக்கள் குறைகளை நிவர்த்தி செய்யவும், கட்சி நிர்வாகிகள் - தொண்டர்களின் பிரச்சினையை உணர்ந்து செயல்படும் இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் ஒரு டீம் அமைத்தாவது கட்சித் தொண்டர்களின் கோரிக்கையை கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் உள்ளது.

 

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்பதுபோல ‘உடன்பிறப்புகளுடன் தலைவர்’ என்ற வகையில் சந்திப்பு அமைந்தால் தலைமைக்கும் தொண்டர்களுக்குமான இடைவெளி குறையும்.

 

- தமிழ், செம்பருத்தி

 

 

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.