Skip to main content

கனிமொழிக்கு எதிராக கலகம்! ராஜினாமா மூடில் கனிமொழி! 

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
Kanimozhi

 

கனிமொழியின் செல்வாக்கை குறைப்பதற்காக இளம் மகளிர் அணியை திமுகவில் உருவாக்க உதயநிதி தீவிரம் காட்டி வருவது கனிமொழி ஆதரவாளர்களை கொந்தளிக்க வைக்கிறது.

 

கரோனா நெருக்கடிகளையும் மீறி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் முகமாக அரசியல் பணிகள் திமுகவில் நடந்து வருகின்றன. ஷூம் மீட்டிங் மூலம் திமுக மா.செ.க்களிடமும், நிர்வாகிகளிடமும் அடிக்கடி விவாதித்து வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

 

இந்த நிலையில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, திமுகவில் இளம் பெண்கள் அணி ஒன்றை தனியாக உருவாக்க திட்டமிட்டு அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகிறார் என்கிறார்கள் திமுக மகளிர் அணியினர்.

 

இது குறித்து விரிவாக நம்மிடம் பேசிய மகளிர் அணியினர், ‘’உதயநிதியை இளைஞரணிக்கு செயலாளராக நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, இளம் பெண்கள் அணி உருவாக்க வேண்டும் என திட்டமிட்டனர்.

 

ஆனால், கட்சியில் உள்ள மகளிர் அணியின் வலிமையை பலகீனமாக்கவும், மகளிர் அணியின் செயலாளராக உள்ள கனிமொழியின் செல்வாக்கை குறைக்கவுமே இந்த இளம் மகளிர் அணி உருவாக்கப்படுவதாக சர்ச்சைகள் வெடிக்கும் என யோசித்து, உதயநிதியின் அந்த முயற்சிக்கு ஸ்டாலின் தடை போட்டார். இதனால், திட்டமிடப்பட்ட வேகத்திலேயே உதயநிதியின் புதிய முயற்சி முடக்கி வைக்கப்பட்டது.

 

முடக்கப்பட்ட அந்த முயற்சியைத்தான் மீண்டும் கையிலெடுத்திருக்கிறார் உதயநிதி. இதற்கு திமுக தலைமையின் ஒப்புதலும் தற்போது கிடைத்துள்ளது. இதனால், இளம் மகளிர் அணியை துவக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகின்றனர். திமுக மகளிர் அணியில் கனிமொழிக்குள்ள வலிமையும், மக்களிடம் உருவாகியுள்ள கனிமொழிக்கான செல்வாக்கும் இளைஞரணியால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் கனிமொழி செல்வாக்கை உடைக்கவும் திமுக மகளிர் அணியை முதியோர் அணியாக மாற்றவுமே இந்த திட்டம். உதயநிதியின் இளம் பெண்கள் அணி வெளிப்படையாக உருவாகும்போது திமுகவில் அதிருப்திகளும் வெளிப்படையாக வெடிக்கும். அது, தேர்தல் அரசியலில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்!‘’ என்கின்றனர்.

 

திமுகவின் சீனியர் மா.செ.க்கள் இருவரிடம் இது குறித்து நாம் பேசியபோது, “கனிமொழியின் அரசியல் வளர்ச்சி இளைஞர் அணிக்கு ஏனோ எட்டிக்காய் கசப்பாக இருக்கிறது. கட்சியில் இளைஞரணிக்கு இருக்கும் முக்கியத்துவம் வேறு எந்த ஒரு அணிக்கும் கொடுக்கப்படுவதில்லை. இளைஞர் அணியை போலவே மகளிர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட அனைத்து அணிகளும் கடுமையாகவே உழைக்கின்றன. ஆனால், பலனை மட்டும் இளைஞரணி பெரிதாக அறுவடை செய்து கொள்கிறது.

 

கட்சியில் ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி மட்டுமே தெரிய வேண்டும் என்பது இளைஞரணியின் நோக்கம், கனிமொழி அதற்கு தடையாக இருக்கிறார். அதனால் கனிமொழிக்கு போட்டியாக அரசியல் செய்வதை வழக்கமாக்கி கொண்டார் உதயநிதி. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சனையின்போது அவர்களை சந்தித்து பேசினார் கனிமொழி. சில நாட்களிலேயே உதயநிதியும் டெல்லிக்கு சென்று அவர்களை சந்தித்தார்.

 

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணத்திற்கு நீதி கேட்டு கனிமொழி எடுத்த நடவடிக்கைகள் பல தரப்பினரின் பாரட்டைப் பெற்றது. வியாபாரிகள் குடும்பத்தை சந்தித்து திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட கட்சி நிதியையும் அவர்களுக்கு கொடுத்து ஆறுதல் படுத்தினார் கனிமொழி. அடுத்த நாளே உதயநிதியும் சாத்தான்குளத்துக்கு சென்று வியாபாரிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொன்னார். இப்படி எந்த இடங்களிலெல்லாம் கனிமொழி உயர்ந்து தெரிகிறாரோ அதையெல்லாம் உடைக்க உதயநிதி முயற்சிக்கிறார்.

 

இந்த மாதிரி செயல்பாடுகள் உதயநிதிக்கு எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கும் என யோசித்தே, கனிமொழி பொறுப்பிலுள்ள மகளிர் அணியை பலகீனமாக்க இளம் பெண்கள் அணியை உருவாக்க நினைக்கின்றனர். ஏற்கனவே சீனியர்கள் பலர் சில பல விசயங்களில் அதிர்ப்தியடைந்து வருகிறார்கள். இந்த நிலையில், கனிமொழிக்கு எதிராகவே அரசியல் செய்ய நினைப்பது கட்சிக்குத்தான் பலவீனம்” என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

 

கனிமொழிக்கு நெருக்கமான சி.ஐ.டி.காலனி தரப்பில் விசாரித்தபோது, “கலைஞரின் மகள்தான் கனிமொழி.  ஆனால், கலைஞர் குடும்பத்தினரே அவரை அழிக்க நினைப்பதுதான் ஜீரணிக்க முடியவில்லை. கனிமொழியின் அரசியல் வளர்ச்சி திமுகவுக்குத்தான் உதவப்போகிறது. இதனை ஏன் இளைஞரணியினர் உணர மறுக்கின்றனர். கலைஞர் இருந்தவரை இத்தகைய போக்குகள் இருந்ததில்லை.

 

கட்சியின் தலைவர் ஸ்டாலின் இடும் கட்டளைகளை செயலாற்றி வருபவர் கனிமொழி. உதயநிதியின் உத்தரவுகளை ஏற்க வேண்டிய அவசியமெல்லாம் கனிமொழிக்கு கிடையாது. ஸ்டாலினுக்காக எதையும் பொறுத்து கொள்வார். ஆனால், உதயநிதியின் ஆதிக்கம் கனிமொழியை அழிக்க நினைப்பதாக இருந்தால், கனிமொழியின் முடிவு வேறு விதமாக இருக்கும். அதேசமயம், உதயநிதி உருவாக்க துடிக்கும் இளம் பெண்கள் அணி திட்டம் கனிமொழியை காயப்படுத்தியிருக்கிறது. அவரும் மகளிர் அணியினரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இளம் பெண்கள் அணி வெளிப்படையாக உருவாக்கப்பட்டால் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளார் கனிமொழி” என விவரிக்கின்றனர்.

 

இது குறித்து கருத்தறிய திமுக இளைஞரணி நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, யாரும் கருத்து சொல்ல முன்வரவில்லை.

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.