Skip to main content

தி.மு.க.வில் இளரத்தம்! சவால் களத்தில் உதயநிதி!

Published on 20/07/2021 | Edited on 23/07/2021

 

 DMK Uthayanidhi on the challenge field

 

தி.மு.க.வில் ரொம்ப காலத்திற்குப் பிறகு, மீண்டும் ஓர் இளைய பட்டாளம் களம் இறங்கியிருக்கிறது. சென்னையில் உள்ள மொத்த தொகுதிகளையும் தி.மு.க. வென்ற நிலையில், அருகருகேயுள்ள மூன்று தொகுதிகளான ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, எழும்பூர் தொகுதிகளில் எம்.எல்.ஏ.வாகியிருப்பவர்கள் இளந்தலைமுறையினர். 

 

 DMK Uthayanidhi on the challenge field

 

ஆயிரம்விளக்கு தொகுதியில் குஷ்புவை எதிர்த்து வெற்றி பெற்ற டாக்டர் எழிலன், கரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில் தனது தொகுதியில் களமிறங்கி நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். கலைஞர் குடும்பத்தினருக்கு வாக்குரிமை உள்ள தொகுதியின் எம்.எல்.ஏ.வாக முன்னோடியான  செயல்பாடுகளை மேற்கொண்ட அவர், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை-எளிய மாணவர்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளில் உரிய இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தரும் முகாம் ஒன்றை  முன்னெடுத்துள்ளார். ஆயிரம்விளக்குத் தொகுதியின் குடிசைப் பகுதிவாசிகளின் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் செயல்பாடு இது என்பதால் மற்ற தொகுதியிலும் இதனைப் பின்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க.வுக்குள்ளேயே இருக்கிறது.

 

 DMK Uthayanidhi on the challenge field

 

குடிசைப்பகுதிகள் - குடிசைமாற்றுவாரியக் குடியிருப்புகள் நிறைந்த தொகுதி, எழும்பூர். இங்கிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர் வழக்கறிஞர் பரந்தாமன். தொகுதி மக்களின் கோரிக்கைகளை நேரிலும், ஆன்லைன் மூலமும் பெற்று அவற்றை நிறைவேற்றுவது தொடர்பாக  அதிகாரிகளிடம் தொடர்ச்சியான  ஆலோசனைகளை மேற்கொள்கிறார். மாவட்ட செயலாளரும்  அமைச்சருமான சேகர்பாபுவின் ஆலோசனைப்படி கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை வார்டுதோறும் நேரில் சென்று மேற்கொண்டவர் எம்.எல்.ஏ. பரந்தாமன். தொகுதிக்கான  கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் எடுத்துச்  செல்கிறார்.

 

 DMK Uthayanidhi on the challenge field


 
கலைஞரின் பேரன், முதல்வரின் மகன் என்ற தகுதியுடன் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி தனது தொகுதியின் ஒவ்வொரு  பகுதிக்கும் நேரில் சென்று குறைகளைக் கேட்டு வருகிறார். தொகுதி போலவே அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும் குறுகலாகத்தான் இருக்கிறது. ஆனால், அங்கே நாள்தோறும் மனுக்களுடன் திரண்டு வரும் பொதுமக்களை சந்திக்கிறார். 

 

மீனவர் பகுதிகள், ஆற்றங்கரையோர மக்கள் என குடிசைகளிலும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளிலும் வசிக்கும் ஏழை மக்கள் அதிகமுள்ள தொகுதி இது. அந்தக் குடிசைகளுக்கு நேரில் சென்று மக்களின் வாழ்க்கை நிலையை அறிந்த உதயநிதி, அனைவருக்குமான குடியிருப்புகளைக் கட்டித் தரவேண்டுமென்ற கோரிக்கையை சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். சிதிலமைடந்துள்ள குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளில் ஏற்கனவே இருப்பவர்களுக்கும், இன்னமும் குடியிருப்புகள் கிடைக்காதவர்களுக்கும் புதிய குடியிருப்புகளைக் கட்டித்தரும்போது, குறைந்தபட்சம் ஒரு பெட்ரூம் வசதியுடனும் கிச்சன், பாத்ரூம், ஹால் ஆகியவை போதுமான அளவிலும் இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார் உதயநிதி.

 

கரோனா நேரத்தில், தடுப்பூசி விழிப்புணர்வை வீடுவீடாக சென்று மேற்கொண்ட உதயநிதி, தன்னிடம் கோரிக்கைகள் வைக்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம், அவர்களுக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகளில் குறிப்பிட்ட சதவீதத்தை தனது தொகுதிவாசிகளுக்கு இலவசமாக வழங்கவேண்டும் எனக் கேட்டு, அதிகளவில் தடுப்பூசிகள் போடச் செய்தார். 

 

 DMK Uthayanidhi on the challenge field

 

“கலைஞர்  இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும் முதல்வராகவும் இருந்திருக்கிறார். அப்போதுகூட கட்சி நிர்வாகிகள் இந்தளவு நேரில் வந்ததில்லை. ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் வந்ததில்லை. அ.தி.மு.க. சார்பில் இருந்த கவுன்சிலர்களும் எட்டிப்பார்க்கவில்லை. உதயநிதிதான் இப்ப ஒரு இடம் விடாமல் வருகிறார்” என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

 

தொகுதி விசிட்டில், ‘சேப்பாக்கம் மாடல்’ என்ற ட்ரெண்டை உருவாக்கிவிட்ட உதயநிதியிடம் பிற தொகுதிகவாசிகளும் மனுக்களை அனுப்புகிறார்கள். அவை முறைப்படி, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் அதற்குரிய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு, நடவடிக்கைகள் குறித்து உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

 

சென்னையில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல தொகுதிகளிலும் தி.மு.க.வில் இம்முறை இளையவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்களில் பலரும் களப்பணியை முதன்மையாகக் கொண்டு, தொகுதி மக்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறார்கள்.

 

தி.மு.க. தொடங்கப்பட்டபோது, அண்ணா உள்பட எல்லாருமே இளைஞர்கள்தான். காலப்போக்கில், அது சீனியர்களின் கட்சி ஆனது. அந்த நிலையில்தான், கட்சியில் இளையரத்தம் பாயவேண்டும் என்ற நோக்கத்துடன் 1980ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மதுரை  ஜான்சி ராணி பூங்காவில் தி.மு.க.வின் இளைஞரணியைத் தொடங்கி வைத்தார் கலைஞர். அதனை 30 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பேற்று நடத்தியவர் மு.க.ஸ்டாலின்.

 

இளைஞரணி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தி.மு.க.வுக்கு  இன்னும் அதிகமாக இளரத்தம்  தேவைப்படுகிறது. தமிழகத்தில் வளர்ந்து வரும் புதிய இயக்கங்கள் ஏற்படுத்தும் போட்டிச் சூழலால், திராவிட இயக்கத்தின் கொள்கை அடிப்படையில் இளைஞர்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியாக தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில், மேற்கு மண்டலத்தில் அது பெரும் தோல்வியை சந்தித்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் உள்ள புதிய சவால்களை உணர்த்துவதாக உள்ளது.

 

இந்த சவால்களை எதிர்கொண்டு, 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக தி.முக. ஆட்சி என்ற ஸ்டாலினின் திட்டம் நிறைவேறவேண்டும் என்றால், திராவிட அரசியல் கொள்கையுடனான இளைய தலைமுறையை உருவாக்கினால் மட்டுமே சாத்தியமாகும். அந்தப்  பொறுப்பும் இப்போது உதயநிதியின் இளைஞரணியின் தோளில்தான். அவரது பயணப்பாதையை உற்றுநோக்குகிறார்கள் திராவிட இயக்கத்தாரும் எதிர்த்தரப்பாரும்.

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.