Skip to main content

10 ஆயிரம் கொடுத்தால் முதியோர் ஓய்வூதியம்! அ.தி.மு.க.வினர் பட்டியல் போட்டு வசூல்... குமுறி குமுறி அழுத மூதாட்டி!

Published on 24/12/2020 | Edited on 24/12/2020
DMK salem gramasaba meeting  Old age pension if you pay 10 thousand will get ADMK
                                                           உடையாப்பட்டி


தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருபெரும் கட்சிகளும் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ள நிலையில், இந்த வின்டர் சீசனிலும் தமிழகத் தேர்தல் களம் சூடாகிக் கிடக்கிறது. விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், கைவினைஞர்கள், பணிக்குச் செல்லும் பெண்கள் என இந்தமுறை தி.மு.க. ரொம்பவே அடித்தட்டு மக்களை நோக்கிய தனது பிரச்சார வியூகத்தை வகுத்திருப்பதோடு, துறை வாரியாகவும் நுட்பமாக அணுகி கலந்துரையாடலை நடத்திக் கொண்டிருக்கிறது.



கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட கிராமசபைக் கூட்டங்கள் தி.மு.க.வை மக்களிடத்தில் நெருக்கமாகக் கொண்டு சேர்த்தது. அதனால் இந்த முறையும் டிச.23ஆம் தேதி முதல் கிராமசபைக் கூட்டங்களை நடத்த முடுக்கிவிட்டிருக்கிறார் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். பொங்கலுக்கு முன்பாக 16 ஆயிரம் கிராமங்களில் கூட்டம் நடத்தும் திட்டத்துடன் களமிறங்கி இருக்கிறார்கள். சேலத்தில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், கிழக்கு, மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் சிவலிங்கம், செல்வகணபதி ஆகியோர் துவக்க நாளிலேயே கிராமசபைக் கூட்டங்களை அமர்க்களமாக நடத்திக்காட்டினர்.


சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையில், உடையாப்பட்டியில் டிச.23ல் கிராமசபைக் கூட்டம் நடந்தது. வழக்கத்தை விடவும் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒவ்வொரு கிராமசபைக் கூட்டத்திலும், 'அ.தி.மு.க.வை நிராகரிப்போம்' என்று அச்சிட்ட பதாகை வைக்கப்பட்டது. கட்சிக்காரர்கள் கூட்டத்தைத் திரட்டி வந்திருந்தது, ஒரு பாதி என்றாலும், மாற்றத்தை விரும்பும் மக்களும் ஆர்வத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற பதாகையில் கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆர்வத்துடன் கையெழுத்துப் போட்டனர். 


யார் யார் அரசைக் குறை சொல்கிறார்கள்? அவர்கள் கட்சிக்காரர்களா? சாமானியர்களா? நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன? என ஒன்றுவிடாமல் உளவுத்துறையினர் வீடியோவில் பதிவு செய்தனர். கூட்டத்திற்கு வந்தவர்களின் பெயர், ஊர் விவரம் முதல்கொண்டு நுட்பமாகச் சேகரித்துக் கொண்டது காவல்துறை.


அதிகாரிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் (75) என்ற மூதாட்டி, ''என் புருஷணும், மகனும் செத்துப்போய்ட்டாங்க. என்னைச் சாப்பிட்டியானு கேட்கக்கூட ஒரு நாதியில்லீங்க. இந்த ஊர்ல வசதியானவங்களையா தேடித்தேடி போய், அ.தி.மு.க.காரங்க முதியோர் உதவித்தொகை வாங்கித் தர்றாங்க. எனக்கும் உதவித்தொகை வேணும்னு கேட்டேன். வாய் கூசாம 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டாங்க. கஞ்சிக்கே வழி இல்லாமதானேப்பா உதவித்தொகை கேட்கிறேன், பத்தாயிரத்துக்கு எங்க போவேன்னு சொன்னேன். அ.தி.மு.க.காரங்க கண்டுக்கவே இல்ல. அவங்க நல்லாருக்க மாட்டாங்க. என்ன மாதிரி நாதியத்தவங்களாம் உசுரோட இருக்கறதா சாவறதானே தெரியல'' என்றவர் மேற்கொண்டு பேச முடியாமல் கண்ணீர்விட்டுக் குமுறி குமுறி அழுதார். 


உடையாப்பட்டி செல்வம் (50) என்பவர், ரேஷன் பொருள் விநியோகம் தொடர்பான பிரச்சனை குறித்துப் பேசினார். ''ரேஷன் அரிசி இலவசமாகப் போடுகிறார்கள். அந்த அரிசி வாங்க ஒரு நாள் ரேஷன் கியூவில் நிற்க வேண்டியதா இருக்கு. அப்புறம் சர்க்கரை, மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில் வாங்க ஒவ்வொரு நாள் போகணும். மாசத்துல ரேஷன் பொருள் வாங்கவே குறைந்தபட்சம் நாலு நாள் மெனக்கெடணும். 


ரேஷனில் 200 மதிப்புள்ள பொருள்களை வாங்க நாங்க நாலு நாள் கூலியை இழக்க வேண்டியதாக இருக்கு. எல்லாப் பொருள்களையும் ஒரே நாளில் போடணும். அதுவும் எல்லா கார்டுக்கும் அரிசி, பருப்பு கொடுக்கறதில்ல. 60 சதவீத கார்டுக்கு மட்டும்தான் ரேஷன் பொருள்கள் கிடைக்குது. மீதமுள்ள 40 சதவீத அரிசியும் பருப்பும் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டுக்குப் போகுதானு தெரியலீங்க'' எனப் பிரித்து மேய்ந்தார்.


கக்கன் காலனியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவர், “கடந்த தி.மு.க. ஆட்சியின்போது ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பப்பட்டது. வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டத்தையே நிறுத்திவிட்டது. எங்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள் வீடற்றுதான் இருக்கிறோம். அ.தி.மு.க. அரசில் சமூகநீதி என்பதெல்லாம் கண்துடைப்புதான்,'' என்றார்.


எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த அமுதா (40), ''எங்கள் பகுதியில் 400 குடும்பத்தினர் வசிக்கிறோம். எல்லோரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். இப்பவும் நாங்கள் அவசர உபாதைகளைக் கழிக்க வேண்டுமானால் இருட்டுகட்டும் வரை காத்திருக்க வேண்டியதிருக்கு. எங்கள் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாததால், இருட்டு கட்டியதும் ரோடு ஓரமாகத்தான் 'அவசரத்துக்கு' ஒதுங்கப் போறோம். அதுவும் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் வயது வந்த பெண்பிள்ளைகள் கழிப்பறைகள் இல்லாததால், படும் அவஸ்தைகளைச் சொல்லி மாளாதுங்க. கடந்த பத்து வருஷத்துல 100 முறை மனு கொடுத்தும் பிரயோஜனம் இல்ல'' என்றார் சலிப்பாக.

 

gramasaba meeting
                                                         கன்னங்குறிச்சி



இங்கு இப்படி என்றால், டிச.24ல், கன்னங்குறிச்சி பேரூராட்சியில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில், மக்களே அ.தி.மு.க.வை நிராகரிக்க வேண்டும் என சங்கல்பம் செய்ததும் நடந்தேறியது.


''கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், 32 லட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி அல்லல் படுகின்றனர். வேலையில்லாத விரக்தியில் 1,000 பட்டதாரிகள் தற்கொலை செய்துகொண்ட அவலமும் நடந்திருக்கு. வறுமை, கடன் சுமையால் 16 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மக்கள் நலன் குறித்து சிந்திக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மின் கட்டணம், பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டார். 


கரோனா காலத்தில் கூட மக்கள் நலன் மீது அக்கறை இல்லாமல் ஊழல் செய்வதிலேயே குறியாக இருந்த அ.தி.மு.க. அரசாங்கத்தை என்ன பண்ணனும்?'' என எம்.எல்.ஏ. ராஜேந்திரன் கேட்க, கூட்டத்திற்கு வந்த மக்கள் கோரஸாக அ.தி.மு.க.வை நிராகரிக்கணும் என்று முழங்கினர். 20 முறைக்கும் மேலாக அவர் கேள்விஎழுப்ப, மக்களும் ஆளுங்கட்சியை நிராகரிப்போம் என்றும், தி.மு.க.வை ஆதரிப்போம் என்றும் முழங்கினர். இப்படியான கேள்விகள் வாயிலாக அவர் தி.மு.க.வை மக்களுடன் கனெக்ட் செய்தார். 



கன்னங்குறிச்சியைச் சேர்ந்த பாவாயி (75) என்ற மூதாட்டி, ''கலைஞர் ஆட்சியில் வழங்கி வந்த முதியோர் உதவித்தொகையைத் திடீரென்று அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தி விட்டதாகவும், பலமுறை விண்ணப்பம் கொடுத்தும் அலைக்கழித்தார்களே தவிர, உதவித்தொகை கிடைக்கவில்லை” எனவும் புலம்பினார். 



லீலாவதி என்ற பி.இ.பட்டதாரி பெண், ''நான் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். சேலத்தில் தி.மு.க. ஆட்சியில் ஐ.டி. பார்க் கட்டுமான வேலைகள் நடந்தது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அத்திட்டத்தை நிறுத்திவிட்டனர். சேலத்தில் ஐ.டி. பார்க் திறக்கப்பட்டு இருந்தால், இந்நேரம் என்னைப் போன்ற படித்த பெண்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்” என்றார்.


இதுபற்றி நாம் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார் ஆகியோரிடம் பேசினோம்.

 

rajendran MLA
                                                     ராஜேந்திரன் எம்.எல்.ஏ


''அ.தி.மு.க. ஆட்சியில் நடக்கும் அவலங்களை வீடு வீடாகச் சென்று எடுத்துச்சொல்லி, கிராமசபைக் கூட்டத்தில் வந்து பேசுமாறு அழைப்பு விடுத்தோம். மக்களும் தன்னெழுச்சியாக வந்து கலந்துகொண்டனர். குறிப்பாக, பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். இந்த ஆட்சிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை அச்சிட்டு வழங்கினோம். 


விவசாயி மகன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டாலும், இந்த ஆட்சியில்தான் விவசாயக்கூலி வளர்ச்சி நான்கு மடங்கு சரிந்துள்ளது. வேளாண்மைத் தொழிலையே ஒட்டுமொத்தமாக சீர்குலைக்கக் கூடிய புதிய வேளாண் சட்டங்களுக்கும், விளைநிலத்தை அழிக்கக் கூடிய எட்டுவழிச்சாலைத் திட்டத்துக்கும் இதே விவசாயி மகன்தான் ஆதரவு தெரிவிக்கிறார். 
 

cnc


கரோனா காலத்திலும் புதிய முதலீடுகள் வந்துள்ளதாக எடப்பாடி சொல்கிறார். இதே ஆட்சியில்தான் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. இப்படியான நிலையில்கூட அ.தி.மு.க. அரசு, அரசு வேலைகளில் பிற மாநிலத்தவரை பணியமர்த்தி, தமிழக இளைஞர்களுக்குத் துரோகம் செய்கிறது. 

 

Vijayakumar dmk
                                                          விஜயகுமார்


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது, காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் அடித்துக் கொல்லப்பட்டது என இந்த ஆட்சியில் நடந்த அவலங்களை எல்லாம் மக்கள் முன்பு எடுத்துச் சொல்கிறோம். இதற்கு வரவேற்பு இருப்பதால்தான் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்று பலரும் ஆர்வத்துடன் கையெழுத்துப்போட்டு விட்டுச் செல்கின்றனர்'' என்றனர்.


அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரைதான் என்றாலும்கூட, மக்களை அரசியல் மயப்படுத்தும் செயல்களிலும் தி.மு.க. இறங்கியிருப்பது வெகுவாகக் கவனம் பெற்றிருக்கிறது என்பதையும் மறுக்க இயலாது.

 

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.