Skip to main content

ஆளும் கட்சியை அலறவிடும் கூட்டணி கட்சிகள்! காங்கிரசைக் காப்பாற்றும் தி.மு.க.!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

வாக்குப்பதிவிற்கான நாள் நெருங்கி வருவதால் நாங்குநேரி இடைத்தேர்தலில் இரண்டு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் சூட்டைக் கிளப்பியுள்ளனர். இரட்டை இலையை எந்தளவுக்கு நம்புகிறாரோ, அதைவிட எடப்பாடியின் கரிசனத்தை ரொம்பவே நம்புகிறார் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன். ஏனெனில் கையில் காசு இல்லாமல் திண்டாடுகிறார். இந்த எம்.எல்.ஏ. பதவிக்கு ஒன்றரை வருஷம்தான் ஆயுசு என்பதால், நாராயணனுக்கு செலவழிக்க அவரது உறவினர்கள் தயங்கி நிற்கிறார்கள். தொகுதியில் முதலிடத்தில் இருக்கும் 61,539 இந்து நாடார் ஓட்டுகளை பெரிதும் நம்புகிறார் அதே இனத்தைச் சேர்ந்த நாராயணன். அதிலும் சாமித் தோப்பு அய்யா வழி பக்தரான நாராயணன், அந்த பக்தர்கள் தன்னை கரை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறார்.
 

dmk



அய்யா வழி பக்தர்களை அதிகம் நம்பினால், தொகுதியில் இருக்கும் 20,513 கிறிஸ்தவ ஓட்டுகளை வாங்குவது கஷ்டம் என்பது ஆளும் தரப்பிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கவலையை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள் பட்டியலின மக்கள். சிலபல காரணங்களால் தேர்தல் களத்திலிருந்து ஒதுங்கியே இருக்கிறார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி. தன்னிடம் எதுவும் கலந்தாலோசிக்காமல் தன்னை புறக்கணிப்பதாக நினைக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியனும் சைலண்ட் மோடுக்குப் போய், ஆளும் தரப்பை அலறவிட்டுக் கொண்டிருக்கிறார். தாழ்த்தப்பட்ட இனத்தின் உட்பிரிவு இனங்களை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வலியுறுத்தி, அந்த இனமக்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைத்தும் நிறைவேற்றப்படவில்லை.
 

admk



இதனால் கொந்தளித்த ஆயர்குளம், அரியகுளம், இலையார்குளம், தேவகன்குளம் உள்ளிட்ட 65 கிராமங்களில் வசிக்கும் பட்டியலின மக்கள் நான்கு நாட்களுக்கு முன்பு வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைக் காட்டியதால் இலைத் தரப்பு மிரண்டு போயுள்ளது. ஆளும் கட்சியுடன் மல்லுக்கட்டும் காங்கிரசின் ரூபி மனோகரனோ ரூபாயை தாராளமாக இறக்கி வருகிறார். மொத்த பட்ஜெட் 20 சி என்ற கணக்குடன் கோதாவில் குதித்திருக்கும் ரூபி மனோகரன், தி.மு.க. நிர்வாகிகளிடம் மொத்த தொகையையும் ஒப்படைத்துவிட்டார். இது காங்கிரஸ் நிர்வாகிகளை சங்கடத்திற்குள்ளாக்கியது. அப்ப எம்.எல்.ஏ.வாக இருந்து இப்ப எம்.பி.யாகியிருக்கும் வசந்தகுமாரும் இப்ப நிற்கும் ரூபி மனோகரனும் சென்னைக்காரர்கள். உள்ளூர்க்காரர்களான நமக்கு இனிமே சீட் கிடைக்காது என்ற விரக்தியில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரசின் முன்னாள் தலைவர்களான மோகன் ராஜாவும் தமிழரசனும் ஒதுங்கியே இருந்தார்கள்.


"ஆஹா இது நம்ம சம்பந்தி ரூபி மனோகரனுக்கு சிக்கலாச்சே' என நினைத்த எம்.பி. வசந்தகுமார், கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்களை வளைக்க வேண்டிய விதத்தில் வளைத்துவிட்டார். இப்போதைய கிழக்கு மாவட்டத் தலைவரான சிவக்குமாரும் நன்றாகவே வளைந்துவிட்டார்.

வேட்பாளர் காங்கிரஸ் என்றாலும் களத்தில் சுறுசுறுப்பு காட்டுவதென்னவோ தி.மு.க.வின் தேர்தல் படைதான். ஐ.பெரியசாமி, ஆவுடையப்பன், கருப்பசாமி பாண்டியன், சுரேஷ்ராஜன், அனிதா ராதாகிருஷ்ணன் என 27 பேர் கொண்ட படை நாங்குநேரியை கலக்கிய நிலையில்... தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் வேன் பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம் ஆகியவை கூடுதல் தெம்பு தந்துள்ளது. களக்காடு தி.மு.க. ஒ.செ. பி.சி.ராஜன் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் காரியாலயத்தைத் திறந்து வைத்த எம்.பி. கனிமொழி, இத்தொகுதிக்கு கலைஞர் செய்த திட்டங்களைப் பட்டியலிட்டுக் கிளம்பியிருக் கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக கடைசிநேர "பணி'கள் முக்கியம் என்பதே கள நிலவரம்.
 

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.