Skip to main content

திமுக வாக்குறுதிகளும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் வெளிப்படுத்தும் உண்மை!

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

திமுகவின் தேர்தல் அறிக்கை திமுக அணியினருக்கு கதாநாயகன் கதாநாயகியாகவும், எதிர் அணியினரின் வெற்றியைப் பறிக்கும் வில்லனாகவும் மாறி விவாதப் பொருளாகியிருக்கிறது. திமுக எதையெல்லாம் தனது தேர்தல் அறிக்கையில் செய்வோம் என்று வாக்குறுதி அளித்ததோ, அவற்றில் பெரும்பாலானவற்றை காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு, திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு வலுச்சேர்த்திருக்கிறது.

 

congress

 

தமிழ்நாட்டின் விவாதப் பொருளாக மட்டுமல்ல, இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைக்கிற தேர்தல் அறிக்கையாக திமுக மற்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் அமைந்திருக்கின்றன. பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் இந்தத் தேர்தல் அறிக்கைகளை பார்த்து மிரண்டு போயிருப்பதாகவே படுகிறது. ஏனெனில், தனது ஐந்தாண்டு சாதனைகளை சொல்ல முடியாத மோடி, பாகிஸ்தானை வைத்து பிரச்சாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அதேசமயம், மக்களின் எதிர்காலம் குறித்தும் அவர்களுடைய வாழ்வாதாரம் குறித்து காங்கிரஸ் கவனம் செலுத்துவதையே தேர்தல் அறிக்கை வெளிப்படுத்துவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியிருக்கிறார்.

 

இது ஒருபுறம் இருக்க, தேர்தல் அறிக்கையை தேர்தலுக்கு முன் வெளியிடும் பழக்கத்தையே திமுகதான் தொடங்கி வைத்தது என்பது சுவாரசியமான தகவல்…

 

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் திமுக போட்டியிடாவிட்டாலும், தனது நிலைப்பாட்டை விளக்கி ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இயக்கம் திமுக. அந்த அறிக்கையில், “திராவிடர்களின் கருத்தை அறியாமலும், திராவிடர்களின் அடிப்படை உரிமைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் ஒரே கட்சியின் சர்வாதிகார முறையில் தயாரிக்கப்பட்ட அரசியல் சட்டத்தை கண்டிக்கும் வகையில் தேர்தலில் திமுக தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஆனால், ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய திராவிட இனமொழி வழி மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடநாடு கோரிக்கையை ஏற்கும் கட்சிகளை திமுக ஆதரிக்கும்” என்று கூறப்பட்டிருந்தது.

 

அன்றுமுதல் திமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யும் என்று மக்களுக்கு முன்கூட்டியே வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். அந்த தேர்தல் அறிக்கைகள் எப்போதுமே தமிழக மக்களின் வாழ்க்கையை கட்டமைக்கும் திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

 

திமுக வெற்றிபெற்றால் தான்கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. ஏனென்றால், எதைச் செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே திட்டமிட்டே தேர்தல் அறிக்கையை திமுக தயாரிக்கும். அந்த அடிப்படையில்தான் கலைஞர் “சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்” என்ற முழக்கத்தையே உருவாக்கினார்.

 

2006 ஆம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை ‘கதாநாயகன்’ என்று வர்ணித்தார். அந்த அறிக்கையில்தான் எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்றும், இலவச வண்ணத் தொலைக்காட்சி என்றும், கியாஸ் அடுப்பும் சிலிண்டரும் என்று திமுக வாக்குறுதிகளை வழங்கியது. கட்சியின் மாபெரும் வெற்றிக்கு இந்த வாக்குறுதிகள் மிக முக்கியமான காரணமாக இருந்தன.

 

2011 தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபோது, இந்தத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது ‘கதாநாயகியாக’ இருக்கும் என்றார் கலைஞர்.

 

2016 தேர்தலிலும், திமுக தனது தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கிற்கு முதல் கையெழுத்து, விவசாயிகளின் கடன் தள்ளுபடி, மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி என்றெல்லாம் மிகமுக்கியமான வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதே வாக்குறுதிகளுடன் அதிமுகவும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

 

dmk

 

அந்த வகையில் 2019 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபோது, திமுகவின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் இருக்கும். நிச்சயம் வில்லனாக இருக்காது” என்று பதிலளித்தார்.

 

ஆனால், அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கை எதிர் அணியினருக்கு வில்லனாகவே அமைந்துவிட்டது. மத்திய பாஜக, மாநில அதிமுக ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்ட தமிழகம் மற்றும் தமிழக மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும், கவுரவத்தையும் மீட்டெடுக்கிற வகையிலான 43 வாக்குறுதிகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

விவாசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி, மாணவர்களின் கல்விக்கடன்கள் தள்ளுபடி, கிராமப்புற மாணவர்களும் மருத்துவர்களாகும் கனவை தகர்த்த நீட் தேர்வு ரத்து, கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவருவது, தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு, மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ் போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியும் ஏற்று இருப்பதால் நிறைவேற்றக் கூடியவைதான் என்பதால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

 

neet

 

தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே புழக்கத்தில் உள்ள நிலையில், தமிழையும் இணைமொழியாக அங்கீகரிக்க தேவையான சட்டத்திருத்தங்கள் செய்யப்படும், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட், மத்திய அரசின் வரிவருவாயில் மாநிலங்களுக்கு 60 சதவீதம் பங்கு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்படும், காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உறுதிசெய்யப்படும் என்ற வாக்குறுதிகள், திமுக பங்கேற்கும் மத்திய அரசாங்கத்தால் எளிதில் நிறைவேற்றக் கூடியவை என்று வல்லுநர்களே கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்சன் திட்டம் என்ற வாக்குறுதி அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது. அதுதவிர, தொழிலாளர்களின் ஓய்வூதியம் குறைந்தபட்சமாக 8 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்படும், வருமான வரிக்கான அதிகபட்ச வருமானம் 8 லட்சமாகவும், மூத்த குடிமக்களுக்கு 10 லட்சமாகவும் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதிகள் நடுத்தர வர்க்கத்தை சிந்திக்க வைப்பவை.

 

கியாஸ் மானியத்தை தனியாக கொடுப்பதற்கு பதிலாக, சிலிண்டரின் விலையை குறைப்பது, பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் மோசடியை ஒழித்து பழைய நிர்வகிக்கப்பட்ட விலை முறையை அமல்படுத்துவது இல்லத்தரசிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் நிம்மதியைக் கொடுத்திருக்கிறது.

 

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்காததால் பிடித்தம் செய்யப்பட்ட சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பித்தரவும், வரிவசூல் உரிமம் முடிந்த நெடுஞ்சாலை சுங்கவரி வசூல் ரத்து, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய நகரங்களுக்கும் மெட்ரோ திட்டம், கேபிள் டி.வி. கட்டணம் குறைப்பு ஆகியவை அனைத்துத் தரப்பினரிடமும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளன.

 

எல்லாவற்றுக்கும் மேலாக மோடியால் கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்க முடியாத வேலைவாய்ப்பை உருவாக்கவும், பறிக்கப்பட்ட வேலைவாய்ப்பை மீட்டுத்தரவும் திமுக தேர்தல் அறிக்கை ஆக்கபூர்வமான திட்டங்களை அறிவித்துள்ளது.

 

10 ஆம் வகுப்புவரை படித்த 1 கோடி இளைஞர்களுக்கு நெடுஞ்சாலைப் பணியாளர் வேலையும், 10 வகுப்பு படித்த 50 ஆயிரம் இளம்பெண்களுக்கு மக்கள் நலப்பணியாளர்கள் வேலையும் உருவாக்கப்படும். வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் இலவசக் கருவிகளுடன் 150 ஆக உயர்த்தப்படும், மத்திய மாநில அரசு நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கிற பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும், கார்பரேட் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 50 லட்சம் பேருக்கும் வேலை உருவாக்கப்படும் என்ற வாக்குறுதிகள் அனைத்தும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு ஒளி பாய்ச்சுவதுடன், வேலைவாய்ப்புகளை எப்படியெல்லாம் உருவாக்கி சமுதாயத்திற்கு உதவலாம் என்ற திமுகவின் சமூகநீதி பார்வையை இந்தியா முழுமைக்கும் தெளிவுபடுத்தியுள்ளது.

 

gst

 

மோடியால் சீர்குலைந்து பொருளாதாரத்தை சீரமைக்க பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய குழு அமைப்பது, ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் நிலவும் ஏற்ற இறக்கத்தை சீரமைப்பது, கிராமப் பகுதியில் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் வட்டியில்லாக் கடன் வழங்குதல், கடந்த 11 ஆண்டுகளாக முடக்கிவைக்கப்பட்டுள்ள சேதுசமுத்திர திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டு நிறைவேற்றுவது, பட்டாசுத் தொழிலைப் பாதுகாத்து, ஏழை நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள் திமுகவின் பொருளாதார சீரமைப்புப் பார்வைக்கு எடுத்துக்காட்டாக பொருளாதார வல்லுநர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

 

சுற்றுச்சூழலையும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தவும் இந்தத் தேர்தல் அறிக்கை உறுதி அளித்திருப்பதை இவற்றுக்கு எதிராக போராடும் சூழலியல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

 

திமுகவின் இந்த தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் சிலவற்றை அதீதமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், திமுக ஆதரவுடன் மத்தியில் வாஜ்பாய் மற்றும் மன்மோகன்சிங் தலைமையிலான அரசாங்கங்களின் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் இணைத்ததைப் போல, இவற்றையும் இடம்பெறச் செய்ய முடியும் என்று திமுகவினர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

 

ஆனால், காங்கிரஸ் கட்சியோ தனது தேர்தல் அறிக்கையிலேயே திமுகவின் முக்கியமான அம்சங்களான நீட் தேர்வு ரத்து, விவசாயக்கடன் தள்ளுபடி, கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றம், குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம், 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிப்பு ஆகியவை உள்பட பலவற்றை இணைத்திருக்கிறது. மொத்தத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையா திமுகவின் தேர்தல் அறிக்கையா என்ற விவதாமே எழுந்துள்ளது. தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியா முழுமைக்குமே சமூகநீதியை உறுதிப்படுத்தும் அறிக்கையாக காங்கிரஸ் அறிக்கை இருப்பதாக பொருளாதார அறிஞர்களும் கல்வியாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மாஜி காங். தலைவர் கொலை வழக்கு; ஜூன் 5க்கு தள்ளி வைப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ex tamilnadu Congress leader case was adjourned to June 5
தாளமுத்து நடராஜன்

தமிழகத்தையே உலுக்கிய சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, ஒரு மர்மகும்பல் இவருடைய வீட்டுக்குள் நுழைந்தது. மர்ம நபர்கள், வீட்டுக் காவலாளி கோபாலை கொலைசெய்துவிட்டு, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த தாளமுத்து நடராஜனின் மகன்களை தாக்கி, தனி அறையில் அடைத்தனர்.

பின்னர் அந்த வீட்டில் இருந்த 250 பவுன் நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்கள், உள்பக்கமாக தாழிட்டு இருந்த மற்றொரு அறைக் கதவை தட்டினர். அப்போது துப்பாக்கி சகிதமாக வெளியே வந்த தாளமுத்து நடராஜனை கொள்ளையர்கள் இரும்புகம்பியால் அடித்துக் கொலை செய்தனர். அதையடுத்து அங்கிருந்து, இரட்டைக்குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

ex tamilnadu Congress leader case was adjourned to June 5
ஜெயில்தார் சிங்

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இந்தச் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், இந்தசம்பவத்தின் பின்னணியில் வட இந்தியாவைச் சேர்ந்த கொடூர கொள்ளை கும்பலான பவாரியா குழுவினருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் மெத்தம் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கொள்ளை கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய நான்கு பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் 3ஆவதுகூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்துவிட்டது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தங்கள் தரப்பிலும் சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும்ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஸ்ரீராமஜெயம் உத்தரவிட்டுள்ளார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதாடி வருகிறார்.