Skip to main content

”அப்பா இல்லை என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை!” - கனிமொழி பகிர்ந்த ‘தந்தை’ தருணங்கள்!

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
kanimozhi with kalaignar

 

கலைஞர், 80 ஆண்டுகாலப் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். பல போராட்டக் களங்களைக் கண்டவர். தமிழகத்தின் தலைப்புச் செய்தியாய் எப்போதும் இருந்தவர். 5 முறை முதல்வர் பொறுப்பேற்றவர். தமிழகத்தை சகல தளங்களிலும் உயர்த்திக் காட்டியவர். 13 முறை சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்து, அனைத்திலும் வெற்றி பெற்ற சாதனையாளர். தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை 50 ஆண்டுகாலம் தலைவராக இருந்து கட்டிக்காத்தவர்.  அவரது மறைவு தமிழகத்துக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் பேரிழப்பு! 2018 ஆம் ஆண்டு கலைஞர் மறைந்தபோது, நக்கீரனின் இனிய உதயம் இதழுக்காக, அவரது மகளும் தி.மு.க.வின் மகளிர் அணிச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கவிஞர் கனிமொழியிடம் பேசினோம். தந்தைக்கும் மகளுக்குமே உரிய உணர்வுப்பூர்வமான தருணங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் கனிமொழி.

 

”எதைச் சொல்வது என்று தெரியவில்லை. நெஞ்சமெங்கும் நினைவின் அலைகள் எழுந்து எழுந்து அடங்குகின்றன. ஒரு துயரச் சூறாவளியை எதிர்கொண்ட நிலையில் பல்வேறு உணர்வுக் கலவைகளோடு நிற்கிறேன். அன்புமிகும் அப்பாவாய், நாடறிந்த கலைஞராய், மாபெரும் இயக்கத்தின் தலைவராய், சுயமரியாதைச் சுடரொளியாய், பெரியார், அண்ணாவின் மறுவடிவாய், மனதில் இன்னும் உலவிக்கொண்டிருக்கிறது அந்த மகத்தான உருவம்.

 

அப்பா இல்லை என்பதையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கு சென்றாலும் என் அருகில் அவர் இருப்பதுபோல, அவரிடம் நான் விவாதிப்பதுபோல, ஒரு உணர்வு எனக்குள் இருந்துகொண்டே கிறது. அவர் இல்லை என்பதை முழுமையாக நான் உணர்வதற்கு இன்னும் கொஞ்ச காலம் தேவைப்படலாம் எனத் தோன்றுகிறது. ஒருவித வெறுமை சூழ்ந்திருந்தாலும், "அதை எல்லாம் வீழ்த்தும் வலிமை உன்னிடம் இருக்கிறது. உனக்குள் நான் இருக்கிறேன்" என அப்பா எனக்குள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில், ஒரு மகளாகவும் கட்சியின் ஒரு தொண்டராகவும் அப்பாவின் மறைவு எனக்குப் பெரிய இழப்புதான்.

 

young kanimozhi with kalaignar

 

எண்பதாண்டு காலம் தமிழக அரசியலின் மையப் புள்ளியாகவும், அச்சாணியாகவும் இருந்த அப்பாவின் அரசியலில், பேச்சும் எழுத்தும் முதன்மையாக இருந்தன. அப்படிப்பட்டவர் கடந்த ஒன்றரை ஆண்டு காலம் மௌனத்தை கடைப்பிடித்தது மிகப் பெரிய வலி. ஒருவேளை அவருடைய மௌனத்தை நாங்களெல்லாம் பழகிக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் அவர் அப்படி இருந்தாரோ தெரியவில்லை. இருப்பினும் அவரது முதுமையை வைத்து அவரது நிசப்தத்தை எதார்த்தமாக ஏற்றுக்கொண்டாலும் மனது என்னவோ ஏற்கமறுத்தது. அந்த விரலாலும் குரலாலும் அவர் எவ்வளவு சாதித்திருக்கிறார். நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது.

 

அவரது பேசா நாட்களில் அவரது அருகில் அமர்ந்துகொண்டு பேசுவோம். அதைக் கேட்டு அவரால் பதில் சொல்ல முடியாமல் போனாலும் கூட, அவரது உதடுகள் அசையும். பதில் சொல்வதுபோல வார்த்தைகளை உதிர்ப்பார். கைகளை நீட்டி எங்களது கரங்களைப் பற்றிக்கொள்வார். மகிழ்வையும் நெகிழ்வையும் அதிலேயே உணர்த்துவார். பேசமுடியாத நேரத்திலும் 2ஜி வழக்கில் விடுதலையானதை அப்பாவிடம் சொன்னபோது, "ரொம்ப சந்தோஷம்மா! பேராசிரியர் எங்கே?" எனக் கேட்டார். அந்த 4 வார்த்தைகளை தொடர்ச்சியாக அவர் சொன்னபோது எங்களுக்கேற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. அப்பாவின் முதுமை, அவரது சிந்தனையை, பாதித்திருக்கிறதா என்று தெரிந்துகொள்ள ஒருமுறை அவரிடம், "அப்பா, கடவுள் இருக்கிறாரா?' என்று கேட்டேன். பேசமுடியாத அந்த நிலையிலும், இல்லை என்று தலையை அசைத்து மறுத்தார். அவர் மௌனம் கூட பகுத்தறிவு பேசியதைக் கண்டு வியந்தேன்.

 

வழக்கிற்காக அடிக்கடி நான் டெல்லிக்குச் செல்ல வேண்டியிருந்தது. இயல்பாகவே விமானப் பயணத்தை விரும்பாதாவர் அப்பா. தவிர்க்க முடியாத சூழலில் தான் விமானப் பயணத்தை ஏற்றுக்கொள்வார். விமானப் பயணத்தை விரும்பாதவர் என்பதாலோ என்னவோ, டெல்லியில் நான் இறங்கியதும் முதல் ஃபோன் அவரிடமிருந்து வரும். "பத்திரமாகச் சென்றுவிட்டாயா?" என்பார். ஒவ்வொரு முறையும் அதே கேள்வியைக் கேட்பதால், ஒரு முறை, "நான் என்ன சின்ன குழந்தையாப்பா?" எனக் கேட்டு கோபித்துக்கொண்டேன். எனது கோபத்தை அவர் பொருட்படுத்தவில்லை. மாறாக, "எப்போதும் எனக்கு நீ குழந்தைதான்!" என அவர் சொன்னபோது, ஒரு மாபெரும் இயக்கத்தின் அரசியல் தலைவர், பாசத்தில் குழந்தையாய் இருக்கிறாரே! என நினைத்துக் கொள்வதுண்டு.

 

பேசுவதை அவர் நிறுத்திக்கொண்ட சூழலில் டெல்லிக்கு பல முறை செல்ல வேண்டிய சூழல் இருந்தது. அப்போது டெல்லியில் இறங்கியபோது, பத்திரமாக சென்று விட்டாயா? எனும்  வழக்கமான விசாரிப்பு அவரிடமிருந்து இல்லை. அப்போதுதான் முதன்முறையாக வெறுமையை உணர்ந்தேன். அப்பாவின் அந்த ஒற்றை வார்த்தைக்கு இருந்த வலிமையை நான் உணர்ந்த தருணம் அது. பாசத்தில் உங்களிடம் தோற்றுப் போயிருக்கிறேன் அப்பா என எனக்குள் அடிக்கடி சொல்லிக்கொண்டேன். அந்த உணர்வில் நான் எழுதிய கவிதைதான் 'மௌனம்'. அந்த கவிதையின் கடைசி வரியை, 'நீயின்றி இயங்காது எம் உலகு' என எழுதியதற்கு அப்பாவின் பாசம்தான் காரணமாக இருந்தது.

 

kanimozhi background kalaignar

 

கோபாலபுரத்தில் அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டபோது, தினமும் அப்பாவை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். ஒருமுறை,  "ரெண்டு மூணு நாள் வெளியூர் செல்கிறேன் அப்பா!" என அவரது முகத்துக்கு அருகே குனிந்து நான் சொன்ன போது, நெற்றியில் முத்தமிட்டார். பத்திரமாகப் போய் வா என சொல்லாமல் சொன்னது அப்பாவின் அந்த முத்தம்! பேச முடியாவிட்டாலும் தனது செய்கைகள் மற்றும் முக பாவனைகள் மூலம் சொல்ல வேண்டியதை உணர்த்திவிடுவார். அதனைப் புரிந்துகொள்ள முடியும்.

 

ஒரு மகளாக பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவரிடம் விவாதித்திருக்கிறேன். மகள் என்பதையும் கடந்து கட்சியின் தொண்டனாக நான் நின்று பேசுவதிலுள்ள கருத்துக்களை அவர் ரசித்துக் கேட்டிருக்கிறார். நான் மகள் என்பதைக் காட்டிலும் கட்சியின் தொண்டன் என்பதில் அவருக்குப் பெருமிதம் உண்டு. என்னிடம் மட்டுமல்ல கட்சியின் தொண்டர்கள் அனைவர் மீதும் இதே பெருமிதமும் அக்கறையும் அவருக்கு உண்டு. அதனால்தான் கட்சி நடத்தும் அரசியல் போராட்டங்கள், மாநாடுகள், பொதுக்குழு கூட்டங்கள் என எதுவானாலும் அதில் கலந்துகொண்டு தொண்டர்கள் வீடு திரும்பும் வரை அவர்களைப் பற்றியே மாவட்டச் செயலாளர்களிடம் விசாரித்துக் கொண்டிருப்பார். "பத்திரமாக வீடு திரும்பியாச்சா?' என என்னிடம் கேட்கும் அந்தக் கேள்வியை மா.செ.க்களிடமும் கேட்பார் அப்பா!

 

அப்பாவின் பேச்சில், எழுத்தில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்துக்குமான பொருள் தொண்டர்களுக்குத் தெரியும். வார்த்தைகளை எந்த ஏற்ற இறக்கத்தில் உச்சரிக்கிறார் என்பதை வைத்தே பொருளின் ஆழத்தை உணர்ந்தவர்கள் தொண்டர்கள். அதனால், ஒரு நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குத் திரும்பியதும், "நான் பேசியதிலிருந்து என்ன புரிந்துகொண்டாய்?” என்பார். புரிந்துகொண்டதை விவரிப்பேன். இதுவரை நான் சொன்ன விளக்கத்தில் அப்பா ஒருமுறைகூட தவறு கண்டதில்லை.

 

நேரடி அரசியலுக்கு வந்த பிறகு, முன்பு போல இலக்கியத்தில் நான் ஆர்வம் காட்டவில்லை என்கிற வருத்தம் அப்பாவுக்கு இருந்தது. குறிப்பாக, கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுவதை நான் குறைத்துக்கொண்டதாக நினைத்தார். காரணம், திறமையாளர்கள் முடங்கிப் போய்விடக்கூடாது என கருதுவதால்தான். அதற்காகவே அவ்வப்போது கவிதை எழுதி அவரிடம் காட்டி, பாராட்டுப் பெற வேண்டும் என நினைத்தேன். ஆனால், பல சமயங்களில் அது முடியாமல் போனது. அதே சமயம், அரசியலாகட்டும் இலக்கியப் பணியாகட்டும் அப்பாவின் தாக்கம் இல்லாமல் என்னால் இயங்க முடிந்ததில்லை. சின்னச் சின்ன விசயத்தில் கூட ஒழுங்கு இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர் அப்பா! 
அந்த ஒழுங்கினை அவரிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். சுயமரியாதை, பகுத்தறிவு, அடிப்படை மனித உரிமைகள், சமூக நீதி, தமிழினம் சார்ந்த உரிமைகள் உள்ளிட்ட முக்கிய கூறுகளை உள்ளடக்கியதுதான் திராவிட இயக்க அரசியலின் சுவாசமும் வலிமையும் என்பதை ஒவ்வொரு தொண்டனின் மனதிலும் பதிய வைத்திருப்பதை எனக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறார். சுயமரியாதையும் சமூக நீதியும்தான் அனைத்துக்கும் அடிப்படை !

 

உடல்நிலை சரி இல்லை என்றாலும்கூட அவரால் வீட்டில் முடங்கிக் கிடக்க முடியாது. ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு விட்டு அறிவாலயத்திற்கோ, முரசொலி அலுவலகத்திற்கோ சென்றுவிடுவார். இதனைப் பலமுறை ஆச்சரியத்துடன் கவனித்தி ருக்கிறேன். ஒருமுறை அது குறித்து கேள்வி எழுப்பியபோது, ”நோயைவிட நான் செயல்படாமல் இருப்பது தான் எனக்கு வலியை அதிகம் தரும்!” என பதில் சொல்லிவிட்டு அறிவாலயம் கிளம்பிவிட்டார். அவர் சொன்ன பதிலை எதிர்த்து விவாதம் செய்ய என்னால் முடியவில்லை. அப்படிப்பட்டவர் வீட்டில் ஓய்வு எடுத்ததை நினைத்தாலே மனது கனக்கத்தான் செய்கிறது.

 

தேர்தலின் வெற்றியும் தோல்வியும் அவரை பாதித்ததில்லை. இரண்டையும் ஒரே அளவுகோலிலேயே எடைபோடுவார். ஆனால் அவரை மிகவும் பாதிப்பது, தொண்டர்கள் மற்றும் நண்பர்களின் மறைவுதான். தேர்தல் தோல்விகளை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் அவருக்கு, தான் நேசிப்பவர்களின் மறைவு தாங்கொணா துயரத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதேசமயம், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் கோபம் காட்டுவதோடு ஒரு கட்டத்தில் அவர்களை மன்னித்துவிடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். எல்லோரையும் மன்னிப்பதுதான் அவரது பலமும் பலவீனமும்!

 

ஒரு மகளாக நினைத்துப் பார்க்கும்போது, அப்பா இல்லை என்பது எனக்கு பேரிழப்புதான். அப்பாவால் ஏற்பட்ட பிரிவின் வலி, கொடுமையானதுதான்.  அந்த வலிக்கு அப்பாவின் நினைவுகளே மருந்து போடும். அப்பா, எனது அறிவுக்கூர்மையை பல்வேறு விசயங்களில் பட்டை தீட்டியவர்! பல விசயங்களில் என்னை பாதித்த சுயமரியாதை சிந்தனையாளர். அவர் கற்றுக்கொடுத்த வழியில் என் அரசியல் பயணம் தொடரும்! எப்போதும் என்னோடு அன்பாக பேசும் அப்பா, இப்போதும் மௌனங்களால் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். அப்பா பேசுவதால், மௌன மொழி, ஓசைகளை விடவும் உன்னதமான மொழியாக இருக்கிறது. அதுவும் என்னை வழிநடத்துகிறது.”
 

 

 

Next Story

'தேர்தல் நேரத்தில் கேஸ் விலையை குறைத்திருப்பது மகளிரை கொச்சைப்படுத்துவதாகும்'- கனிமொழி பேச்சு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
dmk

'கேஸ் விலையில் 100 ரூபாய் மட்டும் குறைந்திருப்பது மகளிரை கொச்சைப்படுத்துவது' என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பேசியுள்ளார்.

திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக மகளிர்ணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் திண்டுக்கல்லில் உலக மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக எம்.பி.கனிமொழி கலந்து கொண்டார். ஊரகத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் கீதா ஜீவன், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், முன்னாள் அமைச்சர் தமிழரசி  உட்பட கட்சி பொறுப்பாளர் பலர் கலந்து கொண்டனர்.

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, ''பெண்களுக்காக தேவையை நிறைவு செய்து திட்டம் இயற்றியவர் கலைஞர். பெண்களுக்கான சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் தலை நிமிர்ந்துள்ளனர். பெண்களின் துன்பங்களை அறிந்து கலைஞருக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் அந்த பணியை நிறைவேற்றி வருகிறார். பெண்களுக்கு மகளிர் உரிமைதொகை என திமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார்''என்றார்.

அதைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ''மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசின் ஸ்டிக்கர்களை ஒட்டி வருகிறது என்ற குற்றச்சாட்டு தவறானது. 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியாக மாநில அரசிடம் பெற்று சில பைசாக்களை மட்டும் மக்கள் நலத்திட்ட உதவித்தொகையாக தருகிறது. பாஜக அரசு ஊழலை பற்றியும் ஸ்டிக்கர் ஒட்டுவதைப் பற்றியும் பேசவே அருகதை அற்றவர்கள்'' என்றார்.

nn

தொடர்ந்து நிகழ்ச்சியில் கனிமொழி பேசுகையில், ''இரண்டு நாட்களுக்கு முன்புதான் மகளிர் தின விழாவை முன்னிட்டு கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனால் இங்கு மகளிர் தின விழா மாநாடு நடத்தி காட்டி உள்ளார்கள் அமைச்சர்களான ஐ.பெரியசாமியும் சக்கரபாணியும். இவர்கள் ஒட்டுமொத்த திமுக அரசியலுக்கும் ரிங்மாஸ்டராக உள்ளனர். பிரதமர் மோடி கேஸ் விலையை உயர்த்தி அதன் மானியத்தை நிறுத்தி, தற்போது தேர்தல் மனதில் வைத்துக்கொண்டு 100 ரூபாய் மட்டும் குறைத்து இருப்பது என்பது மகளிர கொச்சைப்படுத்துவது போன்றதாகும்'' என்றார்.

Next Story

பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும்தான் கவலையா? - கனிமொழி எம்.பி.

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kanimozhi said central government has reduced price of cylinders because of elections

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. 

இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் தேர்தல் வருவதால் தான் மத்திய அரசு சிலிண்டர் விலையைக் குறைத்துள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, சிலிண்டர் விலையை முன்கூட்டியே குறைத்திருக்க முடியும்; ஆனால் தேர்தல் வரும் சமயத்தில் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மகளிர் தினத்தில் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர். பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும் தான் கவலையா? பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது போன்ற பல விஷயங்களை செய்யலாம். அதைவிட்டு விட்டு பெண்களை சமையல் அறையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயமாக இதை மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.