Skip to main content

'அண்ணாவின் தம்பி... கலைஞரின் அண்ணன்' அவர்தான் பேராசிரியர் அன்பழகன்!

Published on 07/03/2020 | Edited on 13/03/2020

கிட்டதட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு அதுஒரு பொன்மாலைப் பொழுது, சூரியன் ஓய்வுக்காக தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்த அந்த நேரத்தில், சூரியனை ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு அந்த தலைவனுக்கு இருந்தது. அதற்காக அந்நேரம் தன்னுடைய தளபதிகளை தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தார் அந்த தலைவன். தலைவனுக்கு தளபதியாக வந்து சேர்ந்தார் இராமையா என்ற இளைஞர். தனக்கான தன்னுடைய தளபதிகளை தேடிக்கொண்டிருந்த அந்த தலைவன் வேறு யாருமல்ல. தமிழர்களின் குருதியோடு கலந்துள்ள பேரறிஞர் அண்ணாதான் அவர். அவர் தேர்தெடுத்த அன்பு தம்பிதான் இராமையா என்று அழைக்கப்பட்டு, இன்று நம் எல்லோராலும் பேராசிரியர் என்று அன்போடு அழைக்கப்படும் க. அன்பழகன் அவர்கள். இன்றைக்கு அவர் தன்னுடைய 98-வது வயதில் நம்மை விட்டு மறைந்துள்ளார்.

 

jk

 

கிட்டதட்ட எட்டு முறைக்கு மேல் சட்டமன்ற உறுப்பினர், சட்ட மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், பலமுறை தமிழக அமைச்சர் என்ற இத்தனை சிறப்புக்கள் இருந்தும் பேராசிரியர் என்ற இந்த பதத்திற்கு மட்டும், இவரைத் தவிர வேறு யாரையும் இன்றைக்கும் உருவகம் செய்துவிட முடியாது. அவர் படித்ததனால் மட்டுமே அதை பெற்றுவிடவில்லை, அவர் நடத்தையாலும் அதை உறுதி  செய்தார். அதிர்ந்து பேசாதவர், ஆனால் மாற்று கட்சிகாரர்களும் மதிக்க கூடிய தலைவர். பேராசிரியர் தம்பி வந்துவிட்டாரா என்று பேரறிஞரால் கூப்பிடப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தக்காரர். திமுகவின் நாடித்துடிப்பு, கலைஞரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். கிட்டதட்ட 50 ஆண்டுகளாக கழகத்தின் பொதுச்செயலாளர் என்ற மிக முக்கிய பொறுப்பு. "என்ன வேண்டும் தருகிறேன், என்னிடம் வாருங்கள்" என்று அன்றைய தமிழக முதல்வரே அழைத்தாலும், அதை எல்லாம் துச்சமென மதித்து தான் கொண்ட கொள்கைக்கு வலுசேர்ந்தவர். "பேராசிரியர் ஒரே கட்சியில் இருக்கிறார் என்பதை ஏதோ அதிசயத்தை போன்று சிலர் கூறுகிறார்கள். அவர் உருவாக்கிய இயக்கத்தில் அவர் இருப்பதில் என்ன அதிசயம் இருந்துவிட போகிறது" என்று கலைஞர் அவரைப் பற்றி கூறியதே, அவருக்கும் இவர்தான் பேராசிரியர் என்பதை நிரூபிக்க போதுமானது. 

 

jk



திமுக கழகம் உருவாகி 1957ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 15 உறுப்பினர்கள் மட்டுமே வெற்றிபெற்றார்கள். அதில் இவரும் ஒருவர். எழும்பூர் தொகுயில் வெற்றிபெற்று முதல்முறையாக கோட்டைக்குச் சென்றார். 62ம் ஆண்டு சட்டமேலவைக்கு சென்றார். 67ம் ஆண்டு திருச்செங்கோட்டில் இருந்து மக்களவைக்கு சென்றார். அடுத்து 71-ல் ஆரம்பித்து தொடர்ந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். 2006ம் ஆண்டுக்கு பிறகு அவர் உடல்நிலை காரணமாக அவர் தேர்தல்களில் பங்கெடுக்கவில்லை என்றாலும், கட்சியில் தனக்கான பணிகள் எதையும் அவர் குறைந்துக் கொள்ளவில்லை. வாழும் வரை கொள்கைக்காகவும், சுயமரியாதைக்காகவும் உழைத்தவர் இன்றைக்கு நம்மைவிட்டு சென்றுள்ளார். ஏனென்றால், திமுக தலைவர் கலைஞர் செய்வதில் தவறு இருந்தாலே, அதையே எதிர்த்து குரல் கொடுக்கு ஆற்றல் கொண்டவராகவே கடைசி வரையிலும் அவர் இருந்தார். நல்லவேளை அவர் நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இல்லையென்றால் அவர் ரோட்டிற்கு வந்து போராட வேண்டிய அவசியம் வந்திருக்கும். ஏனென்றால் அவர் அண்ணாவின் தம்பி, கலைஞரின் அண்ணன்!

 

 

Next Story

“ஆதிக்க இந்திக்கு எதிராக மொழிப்போராட்டம் தொடங்கிய நாள் இன்று” - முதல்வர் மு.க. ஸ்டாலின் 

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

Today is the day the language struggle against dominant Hindi began Chief Minister M.K.Stalin

 

ஆகஸ்ட் 10 ஆதிக்க இந்திக்கு எதிராக 1948 ஆம் ஆண்டு மொழிப்போராட்டம் தொடங்கிய நாள் இன்று என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் அமைச்சரும், திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனார் அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் "பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம்" என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில், கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக் கல்வி துறை வளாகத்தில் நடைபெற்ற பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில், அவ்வளாகத்திற்கு "பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகம்" எனப் பெயர் சூட்டி, பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளைவினையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பள்ளிக்கல்வித் துறையின் பேராசிரியர் க. அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 8 அடி உயரமுள்ள பேராசிரியர் க. அன்பழகன் முழு உருவச் சிலையை திறந்து வைத்து, அச்சிலை அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 

Today is the day the language struggle against dominant Hindi began Chief Minister M.K.Stalin

 

இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் அ. வெற்றியழகன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மு. மகேஷ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

இந்நிலையில், பேராசிரியர் க. அன்பழகன் சிலை திறப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆகஸ்ட் 10 ஆதிக்க இந்திக்கு எதிராக 1948 ஆம் ஆண்டு மொழிப்போராட்டம் தொடங்கிய நாள் இன்று. வரலாற்றில் இரண்டாவது மொழிப் போராட்டத் தொடக்க நாளாகவும் பதிவாகி உள்ளது. இனமானம் காக்கவும், மொழி உரிமையை நிலைநாட்டவும் எந்நாளும் உழைத்த இனமானப் பேராசிரியப் பெருந்தகையின் முழு உருவச் சிலையை சென்னை நுங்கம்பாக்கத்தில் அவரது பெயரால் அமைந்துள்ள கல்வி வளாகத்தில் இன்று திறந்து வைத்தேன். பேராசிரியப் பெருந்தகையின் சிலை அமைக்கப் பொருத்தமான இடமும், பொருத்தமான நாளும் இதைத் தவிர வேறு இருக்க முடியாது. கல்வியில், பகுத்தறிவில், சுயமரியாதை உணர்வில் சிறந்த தமிழ்நாட்டைக் கட்டி எழுப்ப பேராசிரியப் பெருந்தகை சிலை முன்பு உறுதி ஏற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
 

 

Next Story

பேராசிரியர் க. அன்பழகன் சிலையைத் திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

Professor K. Chief Minister M. K. Stalin inaugurated the statue of Anbazhagan

 

முன்னாள் அமைச்சரும், திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான பேராசிரியர் க. அன்பழகனின் முழு உருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

கடந்த 1922 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், காட்டூர் கிராமத்தில் பிறந்த பேராசிரியர் க. அன்பழகன் படிக்கின்ற காலத்தில் தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளாலும், பேரறிஞர் அண்ணாவின் தமிழ் உணர்வு மிக்க பேச்சாற்றலாலும் ஈர்க்கப்பட்டு, பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பள்ளிப் பருவத்திலேயே தமிழ் மொழியின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவர்.

 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார். 1944 முதல் 1957 ஆம் ஆண்டு வரையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற நாட்களிலும், துணைப் பேராசிரியராகப் பணியாற்றிய காலங்களிலும் திராவிட இயக்கத்தின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, பொது வாழ்க்கையில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர் ஆவார்.

 

Professor K. Chief Minister M. K. Stalin inaugurated the statue of Anbazhagan

 

கடந்த 1962 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1967 ஆம் ஆண்டு தொடங்கி 1971 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும். தொடர்ந்து 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் மக்கள் நல்வாழ்வு, சமூக நலத்துறை, நிதி மற்றும் கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

 

Professor K. Chief Minister M. K. Stalin inaugurated the statue of Anbazhagan

இந்நிலையில் பேராசிரியர் க. அன்பழகனுக்கு பெருமை சேர்க்கும் விதமாகத் தமிழக அரசின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் க. அன்பழகனின் முழு உருவச் சிலையினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (10.08.2023) காலை 10.00 மணியளவில் திறந்து வைத்தார். இதையடுத்து அவரது உருவப் படத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், பேராசிரியர் க. அன்பழகன் குடும்பத்தினர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.