Skip to main content

நக்கீரன் செய்தி எதிரொலி! -தொண்டர் குடும்பத்திற்கு உதவிய தி.மு.க.!  

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

tittagudi dmk mla Ganesan

ராகவன் - தனலட்சுமி குடும்பத்தினருக்கு உதவும்
திட்டக்குடி திமுக எம்.எல்.ஏ கணேசன்

 

செப்டம்பர் 19-22 நக்கீரன் இதழில் "அரசும் உதவலை... கட்சியும் கண்டுக்கலை..." -இப்படித்தான் இங்கே பல குடும்பங்கள்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். 

 

"நான் கூலி வேலைசெய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு இரு பெண் குழந்தைகள். ஒரே ஒரு கூரைவீடு தவிர வேறெதுவும் இல்லை. எங்கள் ஊரிலேயே என் வீடு மட்டும்தான் கூரைவீடு. அதுவும் இடியும் நிலையில் உள்ளது. மழை பொழியும்போது பக்கத்து வீட்டு திண்ணையில்தான் மழைச்சாரலில் ஒண்டியிருப்போம். அதனால் வீட்டைச் சரிசெய்ய அரசிடம் அல்லது தி.மு.க தலைவரிடம் நிதியுதவிக்குப் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். மிக துயரமான சூழலில் இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்'' எனும் கடிதம் நம் அலுவலகத்திற்கு வர அந்த முகவரி தேடிப்போனாம்.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள சேப்பாக்கத்திலுள்ளது இராகவனின் வீடு. வீடுபோல் தெரியும் அது வீடில்லை. சுவர்கள் இடிந்து, மேற்கூரைகள் கிழிந்து அலங்கோலமாகக் காட்சியளித்தது.

 

இராகவன் (53 வயது), அவரது மனைவி தனலட்சுமி (43). இருவரும் விவசாயக் கூலிகள். இரண்டு மகள்கள். மூத்த மகள் சௌமியா பி.ஏ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறார். இளைய மகள் சரண்யாதேவி வீட்டு வேலைகள், விவசாயக் கூலி வேலைகள் செய்துகொண்டே வீட்டிலிருந்தபடி அஞ்சல் வழியில் பி.ஏ. (ஆங்கிலம்) படிக்கிறார்.

 

dmk

 

"என்னுடைய தந்தையார் தி.மு.க.வில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவர். அதனால் எனக்குச் சிறுவயதிலிருந்தே கட்சி மீது ஆர்வம். தி.மு.க நடத்திய அனைத்து நிகழ்ச்சிகளிலும், போராட்டங்களிலும் கலந்துகொள்வேன். விருத்தா சலத்தில் நடந்த இந்தி எழுத்துகளை தார்ப்பூசி அழிக்கும் போராட்டத்தில் கலந்துகொண்டு கடலூர் கேப்பர் மலையில் 10 நாட்களுக்கும் மேலாக ஜெயிலில் இருந்தேன். நான் ஊருக்கு ஒரு குடி. சொந்த பந்தம், அங்காளி பங்காளின்னு ஊர்ல யாரும் இல்லை. அதனால் என்னைப்போல் இல்லாதவர்களை எதற்கும் கூப்பிடுவதில்லை. கட்சிக்காரன் வீடுன்னு எலெக்சன் நேரத்துல செவத்துல சின்னம் வரைவாங்க. ஓட்டுப் போடுவதற்கு கூப்பிடுவாங்க. அவ்வளவுதான்.

 

எங்களுக்கு இரண்டும் பெண் குழந்தைகள். அதுங்களை படிக்க வக்கறதுக்கே படாத கஷ்டம் பட்டுக்கிட்டிருக்கோம். பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் 1,500 ரூபாய் ஒவ்வொரு குழந்தைங்க பெயர்கள்லயும் அரசாங்கம் டெபாசிட் செய்யும். 18 வயது முடிந்த பிறகு 5,000 ரூபாய் கிடைக்கும். இது இப்ப 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்கள். அதோட கால் பவுன் மோதிரமும் கொடுக்கறாங்க. ஆனா எங்களுக்கு அதே பழைய திட்டம்தான். அந்த 5,000 ரூபாய் வாங்குவதற்கு 4 ஆண்டுகளாக அலைந்துகொண்டிருக்கிறேன்'' எனக் கவலையுடன் கூறுகிறார் இராகவன்.

 

dmk

 

"படுத்து எழுந்திரிக்க ஒரு வீடு இல்லையென்றால் சம்சாரிகள் பாடு திண்டாட்டம்தான். அரசாங்கங்கள் தான் பல்வேறு திட்டங்களில் வீடு கொடுக்கிறார்களே வாங்கிக் கட்டவேண்டியதுதானே?'' என இராகவனிடம் கேட்டோம், "அரசு சார்பில் வீடு ஒதுக்குகிறார்கள். ஆனால் அந்த வீடு வாங்கறதுக்கு கிளார்க், தலைவர், அதிகாரிங்கன்னு முதல்லயே கமிஷன் கொடுத்தாதான் வீடு ஒதுக்குவாங்கன்றாங்க. அங்கங்க ஒழுகுற கூரைமாத்தறதுக்கும், இடியற செவத்த சரி பண்ணவுமே என்கிட்ட பணம் இல்லை. நான் எங்க கமிஷன் கொடுக்கறது'' என்கிறார் விரக்தியாக.

 

இராகவன் மனைவி தனலட்சுமி நம்மிடம், "அன்னாட செலவுக்கே அல்லாடுறோம். அதனாலதான் சின்னவள படிக்க வைக்க வசதியில்லாம எங்ககூட கூலி வேலைக்குக் கூட்டிட்டுப் போறோம். ஏரி வேலைகூட குடும்பத்துல ஒருத்தருக்குதான்னுட்டாங்க. நானும், சின்ன பொண்ணும் மாறி மாறி வேலைக்குப் போவோம். அதுவும் அதிக நாள் வேலை கிடைக்காது. இந்த ரெண்டு பொண்ணுகளையும் எப்படிதான் கரையேத்தப் போறோம்னு தெரியலை'' எனக் கலங்குகிறார்.

 

ஊருக்கு ஒரு குடியாக வாழ்ந்துகொண்டு, இரண்டு பெண் பிள்ளைகளை கரையேற்றும் வழிதெரியாமல், குடியிருக்கும் வீட்டுக்கு கூரைகூட மாற்றமுடியாமல் தவிக்கும் இராகவன் குடும்பத்தினர் அரசுகளுக்கும், சமூகத்திற்கும், கட்சிகளுக்கும் வாக்குச் சீட்டுகள்தான்.

 

கடலூர் சமூகநலத்துறை அதிகாரிகளிடம் பேசி, பெண்குழந்தைகள் பாதுகாப்பு பத்திர முதிர்வுத் தொகை கிடைக்க நாம் உதவிசெய்தோம். இராகவன் குடும்பத்துக்கு ஒரு பாதுகாப்பான நிழல்கிடைக்க ஆளும் கட்சி- எதிர்க்கட்சி இருவரில் யார் ஏற்பாடுசெய்கிறார் என பார்ப்போம்! எனக் கூறியிருந்தோம். 

 

tittagudi dmk mla Ganesan

 

இதனைப் படித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான சி.வெ.கணேசனை தொடர்புகொண்டு அந்தக் குடும்பத்திற்கு தகுந்த உதவிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

 

அதையடுத்து, சி.வெ.கணேசன் எம்.எல்.ஏ. சேப்பாக்கத்திற்கு நேரில் சென்று ராகவன் மனைவியான தனலட்சுமியிடம் ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவியும், இரண்டு மூட்டை அரிசியும் வழங்கி ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

Ad

 

மேலும் அரசு திட்டத்தின் அடிப்படையில் உடனடியாக அரசு தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என்று நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டதுடன் கடிதமும் அனுப்பி உள்ளார்.

 

இதுகுறித்து நம்மிடம் கூறிய கணேசன் எம்.எல்.ஏ, "நக்கீரன் செய்தியின் அடிப்படையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், ராகவன் குடும்பத்திற்கு தேவையான உதவிகளைச் செய்து தருமாறும், தொகுப்பு வீடு பெற்றுத்தந்து வீடு கட்டுவதற்கு உண்டான உதவிகளை உடனிருந்து செய்து தருமாறும் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் அந்தக் குடும்பத்திற்குத் தற்போது தேவையான அடிப்படை உதவிகளைச் செய்து தந்துள்ளோம். மேலும் அரசு வீடு பெறுவதற்கு உண்டான ஏற்பாடுகளையும் செய்து தருவோம்" என்றார்.

 

மாவட்டச் செயலாளர் சி.வெ.கணேசனுடன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் துரை.கருப்புசாமி, மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளர் பாண்டுரங்கன், சேப்பாக்கம் கிளை கழகச் செயலாளர் தண்டபாணி, சேப்பாக்கம் ஒன்றியக் கவுன்சிலர் ஏழுமலை உள்ளிட்ட  நிர்வாகிகள் இருந்தனர்.

 

Nakkheeran

 

"ஊருக்கு ஒரு குடியாய் கண்டுகொள்ளப்படாமல் இருந்த தமது குடும்ப நிலை குறித்து செய்தி வெளியிட்ட நக்கீரன் இதழுக்கும், அதன் அடிப்படையில் உதவிகள் செய்ய உத்தரவிட்ட தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கும், உடனடியாக உதவிகள் செய்திட்ட தி.மு.க மாவட்டச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட கட்சியினருக்கும் நன்றி தெரிவிப்பதாக இராகவன் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.