Skip to main content

ஸ்டாலின் குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த அதிமுக அமைச்சர்!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

நீதிமன்றங்களின் தொடர்ச்சியான கேள்விகளாலும் கண்டனங்களாலும் உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் மாதத்திற்குள் நடத்த தயாராகிறது மாநில தேர்தல் ஆணையம். உள்ளாட்சித் தேர்தலுடன் நாங்குநேரி விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களையும் சேர்த்து நடத்தலாமா என்பது பற்றி மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளும், தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் சமீபத்தில் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து அரசின் யோசனையையும் கேட்கப்பட்டுள்ளது.
 

dmk



தமிழகத்தில் 14 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள் உள்பட பேரூராட்சி, நகர மற்றும் கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பதவிகளுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. இவற்றிற்கான வார்டு வரையறையுடன் தாழ்த்தப்பட்டவர்கள் பொது, தாழ்த்தப்பட்டவர்கள் பெண்கள், பழங்குடியினர் பொது, பழங்குடியினர் பெண்கள், பெண்கள், பொது என 6 வகையாக இடஒதுக்கீட்டின்படி வார்டு பதவிகள் பிரிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி பொது எனவும், தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் பதவி தாழ்த்தப்பட்டவருக்கு எனவும் வகைப்படுத்தப்பட்டு அறிவித்திருந்தது தேர்தல் ஆணையம். தூத்துக்குடியை பொது மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர் நாடார் சமுதாய அமைப்பினர்.


நம்மிடம் பேசிய தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சதீஷ்மோகன், பொதுப்பிரிவில் இருந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியையும், தூத்துக்குடி ஒன்றிய தலைவர் பதவியும் தலித் சமுகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் தலித் சமூகத்தினர் 10 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். சென்னை, சேலம், தஞ்சை மாநகராட்சிகளில் தலித்துகள் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் நிலையில் அவற்றில் ஒன்றை தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யாமல் தூத்துக்குடியை ஒதுக்கியது அநீதியானது''‘என போர்க்கொடி உயர்த்துகிறார். இந்த நிலையில்தான், உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலினை களமிறக்க தி.மு.க. தலைமை முடிவு செய்திருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு தகவல் கிடைக்கவே, கடந்த வாரம் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை தனது வீட்டில் நடத்தினார். அமைச்சருக்கு நெருக்கமான அதிகாரிகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு பல யோசனைகளைத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, ‘தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதியை நாங்குநேரி அல்லது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் களமிறக்குவது பற்றிய யோசனை கட்சி மேலிடத்திடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவை இரண்டும் சாதி வாக்குகளின் அடிப்படையில் வெற்றியை நிர்ணயிக்கும் தொகுதிகள் என்பதால், சென்னை மேயர் பதவிக்கு நிறுத்தலாமா என ஆரம்பகட்ட ஆலோசனை நடந்துள்ளது. இவையெல்லாம் அமைச்சர் வேலுமணி வீட்டு ஆலோசனையில் எதிரொலிக்க, "உதயநிதி போட்டியிடுவதை தடுத்து ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை தருவதில்தான் உங்களின் வியூகம் இருக்கிறது. சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. வசம் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது' என யோசனை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தூத்துக்குடியை தலித்களுக்கு ஒதுக்கியதில் நாடார் சமூகம் அதிருப்தியில் இருப்பதால் அந்த மாநகராட்சியை பொது பிரிவுக்கும், பொதுப் பிரிவிலுள்ள சென்னை மாநகராட்சியை தலித் பிரிவுக்கும் மாற்றினால் போதும். உதயநிதி போட்டியிடுவதை தடுத்து ஸ்டாலின் குடும்பத்துக்கு அதிர்ச்சியை கொடுப்பதோடு நாடார் சமூகத்தின் ஆதரவும் அ.தி.மு.க.வுக்கு அதிகரிக்கும் என சொல்லப்பட, இதனை முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார் வேலுமணி. வெளிநாடு செல்வதற்கு முன்பு அமைச்சரவை கூட்டத்தை கூட்டவிருக்கும் எடப்பாடி, அதில் இப்பிரச்சனையை விவாதிப்பார்'' என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள். 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்