Skip to main content

"திருமாவளவனை மட்டுமல்ல அன்புமணியையும் கட்டியணைப்பேன்" - திமுக எம்.பி தடாலடி!

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

இந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் கவனிக்கப்பட்டவை வாரணாசி, அமேதி, வயநாடு போன்ற தொகுதிகள் என்றால் தமிழக அளவில் கவனிக்கப்பட்ட முக்கிய தொகுதிகளில் ஒன்றாக தருமபுரி இருந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் மற்ற எல்லா தொகுதிகளிலும் மாஸ் காட்டிய அதிமுகவை தூக்கியெறிந்து 75 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்று வெற்றிபெற்ற பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணியே மீண்டும் தருமபுரியில் களமிறங்கினார். அவரை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு தோல்விதான் என்று பாமக தரப்பினர் கூறிவந்த நிலையில், திமுக வேட்பாளராக களமிறங்கி அன்புமணியை எதிர்த்து வெற்றிபெற்றவர் மருத்துவர் செந்தில். அவர் நக்கீரனுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அவரிடம் பேசுவோம்...

 

dr.senthil



தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து கிட்டத்தட்ட 70,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளீர்கள். இந்த வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த வெற்றி கடந்த 5 ஆண்டுகளாக என்னை கடுமையாக தயார் செய்ததால் கிடைத்த ஒன்றாகவே கருதுகிறேன். ஒரு நல்ல வேட்பாளர் திமுகவில் இருந்து போட்டியிட்டால் நிச்சயம் இங்கு வெற்றிபெறுவார்கள் என்று எதிர்பார்த்தேன். அதற்காகவே கடந்த  சில ஆண்டுகளாக தீவிரமான தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்தேன். அந்த உழைப்புக்கான வெற்றியாகவே இதனை கருதுகிறேன்.

கருத்துக்கணிப்புகளில் கூட பாமக வெற்றிபெரும் என்று சொல்லப்பட்ட நிலையில், திமுக சார்பாக போட்டியிட்ட நீங்கள் வெற்றிபெற்றுள்ளீர்கள். அன்புமணிதான் உங்களை எதிர்த்து நிற்க வேண்டும் என்று நீங்களே விரும்பினீர்கள் என்றும் ஏற்கனவே கூறியிருந்தீர்கள். அவரே வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். தேர்தல் களம் கடுமையாக இருந்ததாக உணர்கிறீர்களா?

நிச்சயமாக... எதிர்த்துப் போட்டியிடுபவர் பலமாக இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்தேன். கிட்டதட்ட 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்று எதிர்பார்த்த நிலையில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். அன்புமணியை குறைத்து மதிப்பிட்டுவிட்டேன். கடந்த முறை அன்புமணி கிட்டத்தட்ட 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். கடந்த தேர்தலில் அனைத்து சமுதாயம் vs ஒரு குறிப்பிட்ட சமுதாயம் என்ற அடிப்படையில் அந்தத் தேர்தலை தருமபுரி மக்கள் பார்த்தார்கள். அந்த வகையில் இந்தத் தேர்தல் முடிவு எனக்கு திருப்தியை கொடுத்துள்ளது. பாமகவும் கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கும், அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


தருமபுரி மக்களவை தொகுதி பாமகவின் கோட்டை என்று கூறுகிறார்கள்... அதை எப்படி பார்க்கிறீர்கள்?

இல்லை... தருமபுரி தொகுதி பாமகவின் கோட்டை என்ற தகவல் தவறானது. ஏனெனில், கடந்த 25 ஆண்டுளில் 20 ஆண்டுகள் மற்ற கட்சியினரே அங்கு வெற்றி பெற்றுள்ளனர். அதனால் பாமகவின் கோட்டை என்பது தவறான புரிதல். தருமபுரி திமுகவின் கோட்டைதான். தலைவரிடம் வாய்ப்பு கேட்டபோதே நான் அதை அவரிடம் தெரிவித்தேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தால், தருமபுரி திமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்போம் என்று கூறினேன். அவ்வாறே வெற்றிபெற்றுள்ளோம். இந்த வெற்றியை வரும் தேர்தலிலும் தொடர்வோம்.

பல இடங்களில் நீங்கள் பிரச்சாரம் செய்யும் போது இடையூறு ஏற்பட்டதாகவும், அதனால் நீங்கள் பிரச்சாரம் செய்யாமல் பாதியில் சென்றதாகவும் தகவல்கள் வெளியானதே?

அப்படி எந்த இடத்திலும் பிரச்சாரம் பாதிக்கப்படவில்லை. நாங்கள் எப்படி எங்களின் பயணத்திட்டங்களை வரையறுத்து வைத்திருந்தோமோ அந்த இடங்களில் எல்லாம் பிரச்சாரம் செய்தோம். ஒரு இடத்தில் மட்டும் இளைஞர் ஒருவர் வாகனத்தை குறுக்கே போட்டார். அவரிடமும் பேசி, குறிப்பிட்ட அந்த இடத்திலும் பிரச்சாரம் செய்தோம்.

 

 

dr.senthil with thirumavalavan



சில இடங்களில் நானும் அதே சமூகத்தை சேர்ந்தவன்தான் என்று பேசியிருக்கீங்களே..?

அது பாமகவுக்காக சொல்லப்பட்ட ஒன்று. அதையும் தாண்டி வாக்கு அரசியல் என்பது முற்றிலும் வேறான ஒன்று. தேர்தல் வெற்றிக்கு வாக்கு அரசியல் மிக முக்கியமான ஒன்று. அன்புமணி தரப்பு அதனை கடுமையாக செய்ததால் அதனை நாங்கள் செய்யவேண்டிய நிலைக்கு ஆளானோம். அதுவும் சில இடங்களில்தான். நான் என்னுடைய பிரச்சாரத்தில் கேட்டதெல்லாம் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், சிறப்பாக செய்ல்படுவேன் என்றுதான். அதற்கு மக்கள் அங்கீகாரம் தந்துள்ளார்கள்.

இந்த வெற்றி பாமகவுக்கான பதிலடினு சொல்லியிருந்தீங்க.. மேலும் அன்புமணி ராஜ்யசபாவுக்கு வர வேண்டும் என்றும் கூறியிருந்தீர்களே?

பதிலடினு நான் சொல்லவில்லை. அதிமுக அன்புமணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். அவரும் வரட்டும். இணைந்தே மக்களுக்கு நன்மை செய்வோம். அது கொள்கை அடிப்படையில் இல்லாமல் இருந்தாலும் மக்களுக்காக இணைந்ததாக இருக்கும். எனக்கு இணைந்து செயல்படுவதில் எந்த ஈகோவும் இல்லை.


ஏன்... கொள்கை அடிப்படையில் என்றால் பதற்றமடைகிறீர்கள்... பல தேர்தல்களில் பாமகவுடன் திமுக கூட்டணியில் வைத்துள்ளீர்களே?

அவங்க கொள்கை வேறு... இந்த தேர்தல்ல கூட அவங்க திமுக கூட்டணிக்கு வரக் கூடாது என்று நினைத்தேன். அப்படி வந்திருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. என்னை தலைவர் நம்பினார். அவரின் நம்பிக்கையை நான் காப்பிற்றியுள்ளேன்.

வெற்றிக்குப் பிறகு நீங்கள் கூட்டணி கட்சித் தலைவர்களை நீங்கள் சந்தித்து பேசியிருந்தாலும், திருமாவளவனுடனான சந்திப்பு பரபரப்பானதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆமாம். நானும் அந்தப் புகைப்படத்தை பார்த்தேன். நான் இயற்கையாகவே கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளை சந்திக்கும்போது கட்டிப்பிடித்துதான் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவேன். மற்ற கட்சித் தலைவர்களை சந்திக்கும் போது, நான் இவ்வாறே செய்தேன். திருமாவளவனை சந்தித்த புகைப்படம் மட்டும் வைரலானது எதிர்பாராதது.

அப்படி என்றால் அன்புமணியை சந்தித்தால் இதே போன்று கட்டியணைப்பீர்களா?

நிச்சயமாக... அவரின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி அவரை சந்திக்க எனக்கு அனுமதி கிடைத்தால் அவரை நிச்சயம் கட்டியணைப்பேன்.
 

 

அடுத்த பகுதி:

வாரிசு என்பதாலேயே திமுகவில் தலைவர் பதவிக்கு வந்துவிடலாமா? திமுக எம்.பி. செந்தில் பேட்டி
 

 

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.