Skip to main content

கேரளாவைப் போல தமிழகத்தில் பெண்களை ஒருங்கிணைக்குமா திமுக?

Published on 02/01/2019 | Edited on 02/01/2019
vanitha2


இது சாதாரண சாதனை இல்லை. உலகமே வியந்து பார்க்கிற சாதனை. 620 கிலோ மீட்டர் தூரம், காசர் கோடிலிருந்து திருவனந்தபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இடது ஓரத்தில் அணிவகுத்த பெண்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம் பேர். இதில் பல இடங்களில் இரட்டை வரிசையாக வேறு நின்றிருக்கிறார்கள். 
 

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் என்று கருதப்படும் இந்த நிகழ்வு, சபரிமலையில் பெண்களின் வழிபாட்டு உரிமைகளை ஆதரித்து நடைபெற்றுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம்பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பை கேரளா அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது. ஆனால், பாஜகவும், காங்கிரஸில் ஒரு பிரிவினரும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
 

ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக பக்தர்களை திசைதிருப்பும் நோக்கத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. கேரளாவில் பெண்களுக்கே இந்த தீர்ப்பு பிடிக்கவில்லை என்றும், அரசின் நடவடிக்கைக்கு பெண்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
 

ஆனால், சமீபத்தில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் சபரிமலையைச் சுற்றியுள்ள இரண்டு வார்டுகளில் பாஜக 7 வாக்குகளும், 12 வாக்குகளும்பெற்று படுதோல்வியைச் சந்தித்தது.
 

இந்நிலையில்தான், கேரளா கம்யூனிஸ்ட் கட்சி தனது நடவடிக்கைக்கு பெண்களின் ஆதரவு இருப்பதை பறைசாட்டும் வகையில் பெண்கள் மதில் என்ற போராட்ட உத்தியைக் கையில் எடுத்தது. ஏற்கெனவே 25 ஆண்டுகளுக்கு முன் காசர்கோடிலிருந்து திருவனந்தபுரம் வரை 620 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆண்களும் பெண்களும் கலந்த மனிதச் சங்கிலியை கேரளா கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியிருந்தது.
 

ஆனால், இப்போது பெண்கள் மட்டுமே பங்கேற்ற மனித சுவரை எழுப்பி சாதனை படைத்திருக்கிறது. பெண்கள் வரிசைக்கு எதிர்புறம் ஆண்களும் வரிசையில் நின்றனர். போராட்டத்தில் பங்கேற்கும் பெண்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று பாஜக அறிவித்திருந்தது. அதைச் சமாளிக்கவே ஆண்கள் வரிசையும் ஏற்பாடு செய்யப்பட்டது.
 

பெண்களை இதுபோன்ற நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தனித்து பயன்படுத்துவது இந்தியா முழுமைக்கும் நல்ல பயன்தரும் என்ற கருத்து இப்போது உருவாகி இருக்கிறது. கேரளாவைப் போல எல்லா மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் பெண்களை இப்படி அரசியல்ரீதியாக கற்பிப்பது நல்ல பயனளிக்கும் என்ற எண்ணம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
 

vanitha-3


தமிழகத்தில் திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் பெண்களை இதுபோல அணிசேர்த்து அரசியலை கற்பிக்க முடியும் என்று கூறுகிறார்கள். சமீப காலத்தில் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாதர் அமைப்புகளைத் தவிர்த்து, திமுக மகளிரணி அரசியல் விழிப்புணர்வு பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது.
 

அதிமுகவில் மகளிர் அமைப்பில் ஏராளமான உறுப்பினர்களை சேர்த்திருக்கிறார்கள். ஆனால், அது அமைப்பு ரீதியாக இல்லை. அதேசமயம், திமுக மகளிரணி அமைப்பு ரீதியாக கட்சிக்கு கட்டுப்பட்ட அமைப்பாக உருவாகி இருக்கிறது. கற்றறிந்த மகளிர் ஏராளமாக திமுக மகளிர் அமைப்பில் இணைந்திருக்கிறார்கள்.
 

ஆனால், மகளிரணி தலைவரான கனிமொழிக்கும் சரி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர்களுக்கும் சரி உறுப்பினர்களைச் சேர்க்கக்கூட அனுமதி இல்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கிறது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர்கள், கிளைக்கழக திமுக செயலாளரின் அனுமதி இல்லாமல் பெண்களைக்கூட உறுப்பினராக இணைக்க முடியாது.
 

மகளிரணி தலைமைக்கு கட்டுப்பட்டதுதான். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியைப் போல, இந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்ற தனி அமைப்பாகக்கூட இல்லாமல், தனித்து உறுப்பினர்களை சேர்த்து, தலைமைக் கழக அனுமதியோடு பெண்கள் மட்டுமே பங்கேற்கும் கூட்டங்களை நடத்தவேனும் அனுமதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
 

பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற நாடாளுமன்றங்களில் 33 சதவீத ஒதுக்கீடு என முழக்கம் தொடர்கிறது. அப்படி அதுவும் கிடைத்துவிட்டால், பெண்களுக்கு அரசியல் கல்வி மிகவும் அவசியம். பெண்களின் பெயரால் ஆண்களே அதிகாரம் செலுத்தும் அரசியலைத் தாண்டி அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்றால், கேரளாவைப் போல பெண்களை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம்.
 

திமுக மகளிரணி தரப்பில் இந்த போராட்டம் கவனத்தை ஈர்த்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், திமுக தலைமை இதுகுறித்து என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். 

 

 

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.