Skip to main content

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி நிலைக்காது; விரைவில் உடையும்: கராத்தே தியாகராஜன்

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

 

இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நாங்குநேரி தொகுதியில் நடந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. 
 

இது குறித்து நம்மிடம் பேசிய நெல்லை மாவட்ட காங்கிரஸ்காரர்கள், ""கூட்டத்தில் பேசிய அனைத்து நிர்வாகிகளும், "இந்த தொகுதி காங்கிரஸ் போட்டியிட்டு ஜெயித்த தொகுதி. அதனால் மீண்டும் காங்கிரசே போட்டியிட வேண்டும். அதற்கேற்ப தி.மு.க.விடம் பேசி தொகுதி யைக் கேட்டுப் பெறுங்கள்' என வலியுறுத்தினர். கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, ""உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டிருக்கிறேன். மேலிடத்தில் தெரிவிக்கப்படும். பொதுவாக காங்கிரசின் ஆணிவேர் தென் மாவட்டங்களில் தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் உயிர்நாடி யும் அதுதான். அதனை நாம் வலிமைப்படுத்த வேண்டும். 50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் எதிர்க் கட்சி வரிசையிலேயே இருந்து வருவதற்கு காரணம் என்ன?  எப்போதாவது யோசித்திருக்கிறோமா? பிற மாவட்டங்களில் எப்படியிருந்தாலும் தென் மாவட்டங்களில் பலமாக இருக்கும் நாம் தனித்துப் போட்டியிட்டால் ஜெயிக்க முடியுமா? முடியாதா? கூட்டணி வலிமையில்லாமல் ஜெயிப்பது கஷ்டமா?'' என கேள்வி எழுப்பியவர், கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு விசயங்களை பகிர்ந்துகொண்டார். 


 

ஆனால், "தனித்துப் போட்டியிட்டால் ஜெயிக்க முடியாதா?' என அவர் கேட்ட கேள்வி, நாங்குநேரியில் கூட்டணி இல்லையாங்கிற சந்தேகத்தை எங்களுக்குள் ஏற்படுத்தியது. நாங்குநேரியை காங்கிரசுக்கு ஒதுக்காமல் தி.மு.க. தவிர்த்தால் கூட்டணி உடைகிறதோ இல்லையோ தி.மு.க.வை ஜெயிக்க வைக்கும் கடமையிலிருந்து காங்கிரஸ் தொண்டர்கள் விலகிக்கொள்வார்கள். அது, கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும்'' என விவரித்தனர். 
 

நாங்குநேரியில் கே.எஸ்.அழகிரி பேசியது போலவே சில மாதங்களுக்கு முன்பு சத்தியமூர்த்திபவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்காகப் பேசிய கராத்தே தியாகராஜன், தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பேசியதாக கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தாலும் அழகிரியின் பேச்சுக் குறித்து தற்போது டெல்லிக்கு புகார் அனுப்பியுள்ளார் அவர். 


 

karate thiagarajan

 


இதுகுறித்து கராத்தே தியாகராஜனிடம் பேசியபோது, ""தேர்தல்களில் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் அரசியல் செய்தால் தான் அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிட முடியும். அதன் மூலம் கிடைக்கும் அதிகமான வெற்றிதான் கட்சியை வளர்க்க உதவும் என்கிற ரீதியில் பல கருத்துக்களை பேசினேனே தவிர, தி.மு.க. கூட்டணிக்கு எதிராகப் பேசவில்லை. ஆனால், எதிராக பேசிய தாக ஸ்டாலினிடம் சிலர் திரித்து கூறினர். இதனையடுத்து ஸ்டாலினிட மிருந்து வந்த உத்தரவுபடி என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், கே.எஸ்.அழகிரிதான் கூட்டணிக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். சத்தியமூர்த்திபவனில் சமீபத்தில் நடந்த ஐ.டி. விங்க் கூட்டத்தில் "சட்டமன்ற தேர்தலில் 100 இடங்களில் நாம் ஜெயிக்க வேண்டும்' என்றிருக்கிறார். தி.மு.க. கூட்டணிக்குள் இருந்துகொண்டு எப்படி 100 இடங்களில் ஜெயிக்க முடியும்? இது, கூட்டணிக்கு எதிரான கருத்தில்லையா? அதேபோல தற்போது நாங்குநேரியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இதற்காக, அழகிரி மீது நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்துவாரா? சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அதனால் கூட்டணி நிலைக்காது; விரைவில் உடையும். அது, இடைத் தேர்தலிலிருந்தோ அல்லது உள்ளாட்சித் தேர்தலிலிருந்தோ அமலுக்கு வரும்'' என்கிறார் அதிரடியாக. 


 

கூட்டணிச் சிக்கலுக்கு வித்திட்டிருக்கும் நாங்குநேரி ஆலோசனைக் கூட்டம் குறித்து நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவக்குமாரிடம் நாம் பேசியபோது, ""கூட்டத்தில் பேசிய அழகிரி, "இந்த கூட்டத்துக்கும் தேர்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. காங்கிரஸ் வெற்றிப்பெற்ற தொகுதி என்பதால் காங்கிரஸ் மீண்டும் போட்டியிட வேண்டும் என விருப்புகிறீர்கள். கூட்டணியில் நாம் இருப்பதால் அது பற்றி முடிவெடுக்க முடியாது. கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். யார் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றிபெற வைப்பது நமது கடமை' என்று பேசினாரே தவிர, கூட்டணிக்கு எதிராகப் பேசவில்லை. நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பது உள்பட கூட்டத்தில் சில தீர்மானங்களை நிறைவேற்ற முடிவு செய்து அதனை எழுதி வைத்திருந்தோம். கூட்டம் துவங்குவதற்கு முன்பு இதுகுறித்து கே.எஸ்.அழகிரி எங்களிடம் விவாதித்தபோது, "காங்கிரஸ் போட்டியிடுவது குறித்த தீர்மானம் வேண்டாம்' எனச் சொல்ல, அதனை நீக்கிவிட்டோம். அதனால், அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், விவாதிப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த பேப்பரை யாரோ ரிலீஸ் செய்துவிட்டனர். அதனால் வந்த குழப்பம் இது'' ‘’ என்கிறார்.
 

இந்த விவகாரத்தில் அறிவாலயத் தின் கருத்தறிய தி.மு.க.வின் செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.யிடம் பேசியபோது, ""காங்கிரஸ் ஜெயித்த தொகுதி என்பதால் நாங்குநேரியில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதை தவறு என சொல்ல முடியாது. விருப்பங்கிறது அவர்களின் உரிமை சார்ந்த விசயம். அதேசமயம், நாங்குநேரி யாருக்கு என்பதெல்லாம் இப்போது விவாதிக்க வேண்டியதில்லை. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கோரிக்கை வைத்தால் அப்போது இரு கட்சிகளின் தலைமையும் கலந்தாலோசித்து தீர்வு காண்பார்கள். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் எந்த விரிசலும் இல்லை. கூட்டணி உறுதியாகவே இருக்கிறது'' என்கிறார் இயல்பாக.

 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.