Skip to main content

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சட்டமன்றத் தேர்தல் வரை தாங்குமா?

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

 

"நாடாளுமன்றத் தேர்தலில் வலிமையாக இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சட்டமன்றத் தேர்தல் வரை தாங்குமா' என சந்தேகம் கிளப்புகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். 
 

நெல்லை மாவட்டத்திலுள்ள நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் வசந்தகுமார், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அத்தொகுதி காலியாக இருக்கிறது. அதேபோல, விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி காலமானதால், அத்தொகுதியும் காலியாக உள்ளது. நாங்குநேரிக்கு நவம்பருக்குள்ளும், விக்கிரவாண்டிக்கு டிசம்பருக் குள்ளும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். 
 

இரு தொகுதிகளுக்கும் நவம்பரில் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதால், இரு தொகுதிகளிலும் தி.மு.க.வே போட்டியிட அறிவாலயம் திட்டமிட்டுள்ளது. தி.மு.க.வின் திட்டத்தை அறிந்து, "நாங்குநேரியை விட்டுவிடக்கூடாது' என இப்போதிலிருந்தே காய்களை நகர்த்தியபடி இருக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.  
 

ksa


 

இந்த நிலையில், இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நாங்குநேரி தொகுதியில் நடந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக் குள் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. 
 

இது குறித்து நம்மிடம் பேசிய நெல்லை மாவட்ட காங்கிரஸ்காரர்கள், ""கூட்டத்தில் பேசிய அனைத்து நிர்வாகிகளும், "இந்த தொகுதி காங்கிரஸ் போட்டியிட்டு ஜெயித்த தொகுதி. அதனால் மீண்டும் காங்கிரசே போட்டியிட வேண்டும். அதற்கேற்ப தி.மு.க.விடம் பேசி தொகுதி யைக் கேட்டுப் பெறுங்கள்' என வலியுறுத்தினர். 



கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, ""உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டிருக்கிறேன். மேலிடத்தில் தெரிவிக்கப்படும். பொதுவாக காங்கிரசின் ஆணிவேர் தென் மாவட்டங்களில் தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் உயிர்நாடி யும் அதுதான். அதனை நாம் வலிமைப்படுத்த வேண்டும். 50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் எதிர்க் கட்சி வரிசையிலேயே இருந்து வருவதற்கு காரணம் என்ன?  எப்போதாவது யோசித்திருக்கிறோமா? பிற மாவட்டங்களில் எப்படியிருந்தாலும் தென் மாவட்டங்களில் பலமாக இருக்கும் நாம் தனித்துப் போட்டியிட்டால் ஜெயிக்க முடியுமா? முடியாதா? கூட்டணி வலிமையில்லாமல் ஜெயிப்பது கஷ்டமா?'' என கேள்வி எழுப்பியவர், கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு விசயங்களை பகிர்ந்துகொண்டார்.

 

ஆனால், "தனித்துப் போட்டியிட்டால் ஜெயிக்க முடியாதா?' என அவர் கேட்ட கேள்வி, நாங்குநேரியில் கூட்டணி இல்லையாங்கிற சந்தேகத்தை எங்களுக்குள் ஏற்படுத்தியது. நாங்குநேரியை காங்கிரசுக்கு ஒதுக்காமல் தி.மு.க. தவிர்த்தால் கூட்டணி உடைகிறதோ இல்லையோ தி.மு.க.வை ஜெயிக்க வைக்கும் கடமையிலிருந்து காங்கிரஸ் தொண்டர்கள் விலகிக்கொள் வார்கள். அது, கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும்'' என விவரித்தனர். 

 

கே.எஸ்.அழகிரியின் அந்த பேச்சு வெளியே கசிந்து கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்... "நாங்குநேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஒருமனதோடு இணைந்து வெற்றிபெற செய்ய வேண்டும்' என தீர் மானம் நிறைவேற்றப்பட்டதாக பரவிய செய்தி கூட்டணிச் சிக்கலை விரிவுப்படுத்தி யிருக்கிறது. மேலும்,  நாங்குநேரியில் காங் கிரஸ் போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார் காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்.   

 

இந்த நிலையில், காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவரிடம் பேசியபோது, ""நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திருச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி, ""நாங்குநேரியில் தி.மு.க. போட்டியிடும்'' என தெரிவித்தார். கூட்டத்தில் இருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் இதனை மறுக்கவில்லை. இதனால், அப்போதே எங்களுக்கு பதட்டம் வந்துவிட்டது. "நாங்கு நேரியை மறந்துவிடுங்கள்' என்கிற தகவலே தி.மு.க. தரப்பி லிருந்து எங்களுக்கு கிடைத்தபடி இருக்கிறது. அதனால், காங்கிரசுக்குத்தான் நாங்குநேரி என்பதை தி.மு.க. தலைமையிடம் பேசி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என சோனியாகாந்தியிடமும் ராகுல்காந்தி யிடமும் நாங்கள் வலியுறுத்தியுள் ளோம். காங்கிரசுக்கு தொகுதி கிடைக் காமல் போனால் கூட்டணி உறவு முறியலாம்'' என்கிறார் அழுத்தமாக. 
 

கூட்டணிச் சிக்கலுக்கு வித்திட்டி ருக்கும் நாங்குநேரி ஆலோசனைக் கூட்டம் குறித்து நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவக்குமா ரிடம் நாம் பேசியபோது, "" கூட்டத்தில் பேசிய அழகிரி, "இந்த கூட்டத்துக்கும் தேர்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. காங்கிரஸ் வெற்றிப்பெற்ற தொகுதி என்பதால் காங்கிரஸ் மீண்டும் போட்டி யிட வேண்டும் என விருப்புகிறீர்கள். கூட்டணியில் நாம் இருப்பதால் அது பற்றி முடிவெடுக்க முடியாது. கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். யார் போட்டி யிட்டாலும் அவர்களை வெற்றிபெற வைப்பது நமது கடமை' என்று பேசினாரே தவிர, கூட் டணிக்கு எதிராகப் பேசவில்லை. நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பது உள்பட கூட்டத்தில் சில தீர்மானங்களை நிறைவேற்ற முடிவு செய்து அதனை எழுதி வைத்திருந்தோம். கூட்டம் துவங்குவதற்கு முன்பு இதுகுறித்து கே.எஸ்.அழகிரி எங்களிடம் விவாதித்தபோது, "காங்கிரஸ் போட்டியிடுவது குறித்த தீர்மானம் வேண்டாம்' எனச் சொல்ல, அதனை நீக்கிவிட்டோம். அதனால், அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், விவாதிப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த பேப்பரை யாரோ ரிலீஸ் செய்துவிட்டனர். அதனால் வந்த குழப்பம் இது'' ‘’ என்கிறார். 


 

இந்த நிலையில் தீர்மானம் குறித்து சிவக்குமாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதால், "கூட்டணிக்குள் சிக்கலா' என்கிற  விவகாரம் குறித்து, காங்கிரஸ் செயல் தலைவர் டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி.யிடம் கேட்டபோது, ""நிர்வாகிகளின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தனது கருத்தினை வெளிப்படுத்தியிருக் கிறார் அழகிரி. அது, கூட்டணிக்கு எதிரானது அல்ல. கூட்டணிக்கு எதிராக அவர் பேசவும்மாட்டார். தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் தலைமையும் தி.மு.க. தலைமையும் இணைந்து முடிவெடுக்கும். கூட்டணி வலிமையாகவே இருக்கிறது'' என்கிறார் அழுத்தமாக.  

 

tkse


 

இந்த விவகாரத்தில் அறிவாலயத் தின் கருத்தறிய தி.மு.க.வின் செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங் கோவன் எம்.பி.யிடம் பேசியபோது, ""காங்கிரஸ் ஜெயித்த தொகுதி என்பதால் நாங்குநேரியில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதை தவறு என சொல்ல முடியாது. விருப்பங்கிறது அவர்களின் உரிமை சார்ந்த விசயம். அதேசமயம், நாங்குநேரி யாருக்கு என்பதெல்லாம் இப்போது விவாதிக்க வேண்டியதில்லை. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கோரிக்கை வைத்தால் அப்போது இரு கட்சிகளின் தலைமையும் கலந்தாலோசித்து தீர்வு காண்பார்கள். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் எந்த விரிசலும் இல்லை. கூட்டணி உறுதியாகவே இருக்கிறது'' என்கிறார் இயல்பாக. 
 

தி.மு.க.-காங்கிரஸ் எம்.பி.க்களின் கருத்துக்கள் இப்படி இருந்தாலும், தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான தரப்பிலிருந்து கிடைக்கும் தகவல்களோ, "கூட்டணியிலிருந்து காங்கிரசை கழட்டிவிட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது தி.மு.க. தலைமை' என்கின்றன. 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.