Skip to main content

நாற்காலியை தேய்த்துவிட்டுப் போகும் ஆள் நானில்லை; கவிதை எழுதுவதே அரசியல்தானே - திமுக ஆண்டாள் பிரியதர்ஷினி பேட்டி

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

 

jkl


திமுகவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில் தமிழகத்தில் மிகவும் பிரபலமான பெண் கவிஞர்களில் ஒருவரான ஆண்டாள் பிரியதர்ஷினி திமுகவின் முக்கியப் பதவிகளில் ஒன்றான கழக மக்கள் செய்தித் தொடர்பு மாநிலத் துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியலில் அவரின் திடீர் நுழைவு எப்படி இந்தப் பொறுப்பை அவர் எப்படிப் பார்க்கிறார் என்பது குறித்தான கேள்விகளை நாம் அவரின் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 


உங்களை ஒரு கவிஞராகவும், ஒரு அரசு அதிகாரியாகவும் அனைவருக்கும் தெரியும். தற்போது திடீரென்று உங்களின் அரசியல் நுழைவு நடைபெற்றுள்ளது. இந்த அரசியல் வருகை என்பது எதார்த்தமாக நடைபெற்ற ஒரு நிகழ்வா இல்லை இளமைப் பருவத்திலிருந்தே கட்சியின் மீதிருந்த தொடர்பால் நடைபெற்றதா? உங்களின் அரசியல் வருகை என்பது எதனை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது?

 

நீங்கள் திடீரென்று என்கிற வார்த்தையைப் பயன்படுத்துவது எனக்குச் சற்று வியப்பாகக் கூட இருக்கிறது. எதுவும் திடீரென்று நடைபெற்று விடாது. நீங்கள் முதலிலேயே கூறியவாறு நான் கவிஞராகத் தெரியும் என்று சொன்னீர்கள். கவிதை எழுதுவதே மிகப்பெரிய அரசியல்தானே, அதுவும் இந்தக் காலத்தில் ஆண்கள் நிறைந்துள்ள இந்தத் துறையில் பெண்ணாக இருந்து அதில் பணியாற்றுவது என்பதே அரசியலின் ஒரு பகுதிதானே. நான் ஆண், பெண் என்று பார்க்கவில்லை. ஆனால் இதில் பணியாற்றுவது ஒரு சவாலாக இருப்பது என்பதே அரசியலின் ஒரு பகுதியாகப் பார்க்கிறேன்.

 

விளிம்பு நிலை மக்களுக்காகத்தான் நான் எப்போதும் பேசிக்கொண்டிருந்தேன், எழுதிக்கொண்டிருந்தேன். யாரெல்லாம் இவர்களை கைதூக்கி விடுவதற்காக நம்முடைய சமூகத்தில் போராடினார்களோ அவர்களைத்தான் நான் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். அதனால் தான் என்னுடைய பெரியார், என்னுடைய அண்ணா, என்னுடைய கலைஞர்,என்னுடைய தளபதி என்று உரிமையோடு கூறி வந்திருக்கிறேன். எனவே அப்படித்தான் நான் இந்த நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

 

கட்சியில் சேர்ந்த உடனே மிகப்பெரிய பொறுப்பு தரப்பட்டுள்ளது. கழக மக்கள் செய்தித் தொடர்பு மாநிலத் துணைத் தலைவர் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

இது முழுவதும் நம்முடைய தலைவரின் கருணை, தாயுள்ளம் தான் காரணம். அவர் நம்முடைய செயல்களை எவ்வாறு பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சியாக இருக்கிறது. அவர் நெருங்கிப் பார்த்துப் பேசியது கூட இல்லை, ஆனால் என்னுடைய கருத்துக்களைத் திராவிடம் சார்ந்து பேசுவதை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை. அதையெல்லாம் முதல்வரின் பார்வைக்குச் சென்றிருக்கிறது. எனவே இதையெல்லாம் உற்றுநோக்கித்தான் எனக்கு வாழ்நாளில் நான் கனவு காண முடியாத இந்த இடத்தைக் கொடுத்திருக்கிறார். இது மிகப்பெரிய பொறுப்பு, எத்தனையோ முன்னோடிகள் இந்த பொறுப்புக்களை வகித்துள்ளார்கள். எனவே அவரின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் என்னுடைய செயல்பாடுகளை அமைத்துக்கொள்வேன். 

 

பெரும்பாலும் பணி ஓய்வுக்குப் பிறகு வீட்டில் ரெஸ்ட் எடுக்கவே விரும்புவார்கள், ஆனால் அரசியல் என்பது பரபரப்பான பணியாக இருக்கும், திடீரென முக்கிய விஷயங்களில் கருத்துக் கேட்பார்கள், விவாதங்களில் கருத்து கூற அழைப்பார்கள், இதை எல்லாம் உங்களால் முழுமையாகச் செய்ய முடியும் என்று நம்புகிறீர்களா? 

 

என்னைப் பற்றி அறிந்த அனைவருக்கும் ஆண்டாள் பணியில் எப்படி இருப்பார் என்பது தெரியும். நான் நீங்கள் சொல்வது போல் அரசு அதிகாரியாக பணியாற்றியுள்ளேன். அரசு அதிகாரிகளில் சிலர் நாற்காலியைத் தேய்த்துவிட்டுச் செல்பவர்களும் உண்டு. ஆனால் ஆண்டாள் ஒருபோதும் அப்படிச் செய்ததில்லை என்பது என்னை அறிந்த அனைவருக்கும் தெரியும். ஆண்டாள் வேலை செய்வதற்கு எப்போதும் தயங்கியதில்லை, சுணங்கியதும் இல்லை. பணியை விருப்பப்பட்டே இதுவரை செய்து வந்திருக்கிறேன். 

 

அதிகமாக வேலை செய்கிறாய் என்றுதான் என்னிடம் சண்டை போடுவார்கள், இயங்கிக்கொண்டே இருப்பதுதான் திராவிடம் எனக்குக் கற்றுக்கொடுத்தது. பெரியார் அவர்கள் தான் வாழ்நாளில் கடைசிக் காலம் வரை இந்த நாட்டு மக்களுக்கு உழைத்தார். அண்ணா அவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் நேரத்திலும் ஒரு நூலினை வாசித்துவிட்டு வரவா என்று கேட்டார். அவர்கள் வழி வந்த நானும் அவர்களைப் போல் உழைப்பில் முழு ஈடுபாட்டோடு பணியாற்றுவேன். 


 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.