Skip to main content

தலைமையை மிஞ்சிய மாவட்ட அதிகாரம்! 

Published on 15/12/2020 | Edited on 15/12/2020
ddd

 

"கட்சி ரீதியாக மாவட்டங்களைப் பிரித்து, அவற்றிற்குத் தனித்தனி மா.செ.க்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக செயல்பட முடியும்' என்ற கோரிக்கைக் குரல் தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.விற்குள் பலமாக எழுந்தது. இரண்டு கழகங்களிலும் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோதும், மேலும் சில மாவட்டங்களிலிருந்தும் இந்தக் குரல்கள் ஒலிக்கின்றன. குறிப்பாக, பழைய வடஆற்காடு மாவட்டத்தில்.

 

திருவண்ணாமலை மாவட்டம்

 

நம்மிடம் மனம் திறந்து பேசிய அந்த தி.மு.க. பிரமுகர் “"திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளும், வடக்கு மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. இதில் தெற்கு மா.செ.வாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவும், வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தரணிவேந்தனும் உள்ளார்கள். இப்படி இங்கு இரண்டு மா.செ.க்கள் இருந்தாலும், வேலுவுடன் உள்ள சிலர், ஒருங்கிணைந்த மாவட்டப் பொறுப் பாளர்களாகவே அடையாளப் படுத்திக்கொள்கிறார்கள். வடக்கு, தெற்கு மாவட்டங்களைப் பிரிப்பது தொடர்பாக இரண்டுமுறை அறிவாலயத்தில் ஆலோசனை நடந்தது. எனினும், ஏற்கனவே கட்சிப் பொருளாளர் பதவி கிடைக்காத அதிருப்தியில் வேலு இருப்பதால், அவர் பொறுப்பில் இருக்கும் மாவட்டத்தைப் பிரித்து, மேலும் அவரை சங்கடப்படுத்த வேண்டுமா என்று தலைமை தயங்குகிறது. அவரை சமாதானப்படுத்தும் விதமாகத்தான் அவருக்கு தென்மண்டலத் தேர்தல் பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், மாவட்டம் பிரிப்பு பற்றிய கோரிக்கை கட்சியினர் மத்தியிலும் இப்போதும் இருக்கிறது.

 

தரணிவேந்தன் பொறுப்பாளராக இருக்கும் வடக்கு மாவட்டத்தில் கோஷ்டி சண்டை அதிகம். அதனால் அதனை கிழக்கு, மேற்கு என பிரிக்க தலைமை விரும்புகிறது. மேலும் மத்திய மாவட்டம் என ஒன்றை உருவாக்கி அதில் வடக்கு மாவட்டத்தில் உள்ள போளுர் தொகுதியையும், தெற்கு மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் தொகுதியையும் சேர்க்கலாம் என்று அறிவாலயம் யோசித்து வருகிறது'' என்கிறார் விரிவாகவே.

 

மத்திய மாவட்டம் என்று உருவானால் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ள எம்.பி அண்ணாதுரை, மாநில மருத்துவரணி துணை அமைப்பாளர் கம்பன், போளுர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் ஆகியோரில் ஒருவரை மா.செ.வாக நியமிக்க வேலு சிபாரிசு செய்வார் என கூறப்படுகிறது. இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. என முடிவெடுத்தால் வடக்கு மாவட்டத்தில் முன் னாள் மா.செ சிவானந்தம், செய்யார் முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன், செய்யார் வேல்முருகன் என பலரும் வேலுவிடம் பதவி கேட்கும் முடிவில் உள்ளனர்.

 

அ.தி.மு.க.விலும் மாவட்டம் பிரிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை வடக்கு மா.செ.வாக தூசி.மோகன் எம்.எல்.ஏவும், தெற்கு மா.செவாக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியும் உள்ளனர். இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ என, வடக்கு மாவட்டத்தில் கிழக்கு, மேற்கு என்றும், தெற்கு மாவட்டத்தில் கிழக்கு, மேற்கு என்று புதிய மாவட்டங்களை உருவாக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்தது. முதல்வர் எடப்பாடி மற்றும் கொங்கு அமைச்சர்களுக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், மாவட்டங்கள் பிரிக்கப்படாமல் உள் ளன. தேர்தல் நெருக்கத்தில் மாவட்டம் பிரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், தெற்கு மாவட்டத்தில் உருவாகும் புதிய மாவட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் ராஜன், மாணவரணி பீரங்கி வெங்கடேசன் போன்றோர் இப்போதே காய் நகர்த்திவருகின்றனர். வடக்கு மாவட்டத்தில் உருவாகும் புதிய மாவட்டத்துக்கு கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், பால்கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் பாரி.பாபு உட்பட சிலர் வரிந்துகட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

வேலூர் மாவட்டம்

 

தற்போது வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அ.தி.மு.க.வில், வேலூர், காட்பாடி என இரண்டு தொகுதிகளைக் கொண்டு ஒரு மாவட்டமும், அணைக்கட்டு, குடி யாத்தம், கே.வி.குப்பம் தொகுதிகளை உள்ளடக்கிய வேலூர் புறநகர் மாவட்டமும் உள்ளது. இதற்கு அப்பு, வேலழகன் என முறையே மா.செக்களாக உள்ளனர்.

 

தி.மு.க.வில் வேலூர் மாவட்டம் ஒன்றே ஒன்றுதான். இதனை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்கிற குரலை கட்சியின் ஒரு தரப் பினர் பலமாக எழுப்புகின்றனர். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனோ, இதை விரும்பவில்லையாம். எனினும் அவரது ஆதரவாளர்களில் சிலரே மாவட்டத்தைப் பிரித்து துரை முருகனின் மகனும் வேலூர் எம்.பி.யு மான கதிர் ஆனந்த்தை மா.செ பதவியில் உட்கார வைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

 

இராணிப்பேட்டை மாவட்டம்

 

மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு என 4 தொகுதிகள் உள்ளன. இதில் அரக்கோணம், சோளிங்கர் தொகுதிகளில் தி.மு.க. வீக்காகவே உள்ளது. இந்த மாவட்டத்தை இரண் டாக பிரித்து வன்னியர் ஒருவரை மா.செ.வாக நியமிக்க வேண்டும் என்பது தி.மு.க.வினர் சிலரின் கோரிக்கையாக இருக்கிறது. நாங்களும் வலிமை யாகத்தான் உள்ளோம் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் மா.செ.வாக நியமிக்க வேண்டும் என்பது முதலியார் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளின் வாதம். வலிமை குறைந்த மாவட்டம் என தி.மு.க.வின் அரசியல் ஆலோசனைக் குழுவான ஐபேக்கும் தலைமையிடம் கூறியிருப்பதால், இதனைப் பிரிக்கத் தலைமையும் விரும்புகிறது.

 

அரக்கோணம் (தனி), சோளிங்கர் தொகுதிகளை கொண்டு வடக்கு மாவட்டம் என்றும், இராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதிகளை இணைத்து தெற்கு மாவட்டம் என்றும் உருவாக்க வேண்டும் என்பதே கட்சி நிர்வாகிகளின் கோரிக்கை. அப்படி உருவாகும்பட்சத்தில் வடக்கு மாவட்டத்தில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட அவைத் தலைவர் அசோகன் உட்பட சிலர், அதைப் பெறத் துடிக்கிறார்கள். இரண்டு தொகுதிக்கு என்னால் மா.செ.வாக இருக்க முடியாது என மா.செ.காந்தி வேறு பதவிக்கு நகர்ந்ததால் தெற்கு மாவட்டத்திற்கு வன்னியரான குட்டி (எ) கிருஷ்ணமூர்த்தி, முதலியார் கோட்டாவில் ஆற்காடு எம்.எல்.ஏவும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான ஈஸ்வரப்பன், மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி உட்பட சிலர் களத்தில் உள்ளனர்.

 

அ.தி.மு.க.வில் மா.செ.வாக அரக்கோ ணம் (தனி) தொகுதி எம்.எல்.ஏ ரவி உள்ளார். அவர் எங்களை வளரவிடாமல் தடுக்கிறார் என வன்னியர், முதலியார் சமூகப் பிர முகர்கள் எதிர்ப்புகாட்டி வருகின்றனர். இதனால் அ.தி.மு.க.விலும் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. அப்படி பிரிக்கப்படும் பட்சத்தில் தெற்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரான முகமது ஜான் எம்.பி, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ சீனுவாசன், பெல்.கார்த்திகேயன் உட்பட சிலர் அந்தப் பதவிக்குக் காத்திருக்கிறார்கள்.

 

திருப்பத்தூர் மாவட்ட நிலவரம்

 

தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் என 4 தொகுதிகள் உள்ளன. கடந்த சட்ட மன்ற தேர்தலின்போது இதில் 3 தொகுதிகளை அ.தி.மு.க வென்றது. இந்த மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்க விரும்புகிறது தி.மு.க. தலைமை. மாவட்டம் பிரிக்கப்படும்போது, இந்த பகுதியில் வலிமையாகவுள்ள வெள்ளாளக் கவுண்டர் சமூகத்துக்குப் பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்கிற குரல் எழுந்துள்ளது. திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி, திருப்பத்தூர் ந.செ ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னணியில் நிற்கின்றனர்.

 

அ.தி.மு.க தலைமையும் மாவட்டம் பிரிப்பு பற்றி யோசித்தபோது, அமைச்சர் வீரமணி, அதெல்லாம் பிரிக்கக்கூடாது என முட்டுக்கட்டை போட்டதால் திருப்பத்தூர் மாவட்டப் பிரிப்பு என்பது அங்கே தொடக்கத்திலேயே நிறுத்தப்பட்டுவிட்டது என்கிறார்கள் அ.தி.மு.க பிரமுகர்கள் ஆதங்கமாய்.

 

கட்சி வளர்ச்சியைக் கருதி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை பிரிக்க தி.மு.க, அ.தி.மு.க தலைமைகள் நினைக்கின்றன. ஆனால் கட்சிகளில் வலிமையாக இருக்கும் புள்ளிகள் அதனை விரும்பவில்லை. அந்த வலிமையான கரங்களை மீறி மாவட்டங்கள் பிரிக்கப்படுமா?, பிரிக்கப்படாதா? என இரு கட்சித் தொண்டர்களும் தங்களுக்குள் இப்போது பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

 

 

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.