Skip to main content

திமுக, அதிமுக கனவு நனவாவது அவ்வளவு எளிதல்ல... ம.நீ.ம. கடும் தாக்கு... 

Published on 28/12/2019 | Edited on 30/12/2019

 

மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நக்கீரன் இணையதளத்திடம் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.



மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியரிமை சட்டத்திற்கு எதிராக திமுக நடத்திய பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாதது பற்றிய விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதே?
 

பேரணியில் கலந்து கொண்டாலும் ஒரு விவாதம் இருக்கத்தான் செய்யும். அது வேறொரு விவாதமாக வரும். திமுக நடத்தியப் போராட்டம் நல்ல போராட்டம். வலிமையான போராட்டம். திமுகவுக்கு கொடுத்த கடிதத்திலேயே, ''இந்த மசோதாவை எதிர்க்கிற எல்லோருக்கும் எங்களது ஆதரவு உண்டு. அதேபோல் உங்களுக்கும் எங்களது ஆதரவு உண்டு'' என்றுதான் சொல்லியிருப்போம்.


கடைசி வரியில் ''ஒற்றைக் குரலாக ஒலிப்போம்'' என்று எங்கள் தலைவர் சொல்லியிருக்கிறார். அந்த பேரணியில் கலந்து கொள்ளக்கூடாது என்ற எண்ணம் இல்லை. கலந்து கொள்ளக்கூடிய சூழல் இல்லை என்பதுதான் உண்மை. 


 

 mnm


 

தொடர்ந்து குடியரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் மக்கள் நிதி மய்யத்தின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?

 

தொடர்ச்சியாக போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு போராட்டம் நடத்தி அதனை பதிவு செய்துவிட்டு போவதற்கான சூழல் இல்லை. அதேபோல எத்தனைப் போராட்டங்கள் என்பதற்கும் கணக்கு இல்லை. 
 

மக்களை வீதியில் இறக்கி போராட்டம் நடத்துவதைவிட மத்திய அரசை கோர்ட்டுக்கு வரவழைத்துள்ளோம். அங்கு நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டும். ஒன்று சட்டத்தின் நியாயத்தை விளக்க வேண்டும், விதிமுறைகளை மாற்ற வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும். இருப்பதிலேயே வலிமையான போராட்டமாக அதைத்தான் நினைக்கிறோம். 
 

இரண்டாவது மக்கள் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்த திட்டம் இருக்கிறது. தற்போது இந்த நிமிடம் எங்கள் தலைவர் ஊரில் இல்லை. அவர் வந்தவுடன் அடுத்தக் கட்டப் போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும். 


 

 

உள்ளாட்சித் தேர்தலை சந்தித்திருக்கலாம் என்ற எண்ணம் மக்கள் நீதி மய்யத்திற்கு தோன்றுகிறதா? 
 

உள்ளாட்சித் தேர்தல் தொண்டர்களுக்கு மிகவும் பங்களிப்புள்ள தேர்தல் என மனசுக்கு தெரிந்தே ஒதுங்கி வந்தோம். உள்ளாட்சித் தேர்தல் முக்கியமான தேர்தல்தான். ஆனால் அவர்கள் சரியாக நடத்தவில்லை. பாதி நடத்துகிறார்கள், பாதி நடத்தவில்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பில் குளறுபடி என நீதிமன்றத்திற்கு போகிறார்கள். இதனால்தான் அந்தத் தேர்தலில் பங்கேற்கவில்லை. 
 

அரசியல் கட்சி என தொடங்கிவிட்டால் அனைத்துத் தேர்தல்களையும் சந்திக்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ சீமான் தேர்தலை சந்திக்கிறார். ஆனால் கமல் உள்ளாட்சி தேர்தலில் பின்வாங்கியது ஏன் என்ற கேள்வி எழுகிறது...
 

அரசியல் கட்சி என தொடங்கிவிட்டால் அனைத்துத் தேர்தல்களையும் சந்திக்க வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அதே நேரம் ம.நீ.ம. எதற்கு தொடங்கப்பட்டது என்றால், இங்கு உள்ள கட்சிகள் போதாது என்றோ, எங்கள் தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகவோ தொடங்கிய கட்சி அல்ல. இப்போதுள்ள அரசியல் அமைப்பையே மாற்றி அமைக்க வேண்டும். இன்று உள்ள ஆட்சி அமைப்பை மாற்றவேண்டும். இப்போதுள்ள அரசியல் கலாச்சாரத்தையே மாற்ற வேண்டும். அதற்கு வலிமையான இடத்தில் உட்கார வேண்டும். அப்படியென்றால் ஆட்சியை கைப்பற்ற வேண்டும். அதற்கான காலம் 2021. அதற்கான போருக்கு போகும்போது முழுமையாக போக வேண்டும். பலவீனமாக இருந்து களத்தில் குதிப்பது அர்த்தம் கிடையாது. கடந்த தேர்தலை சந்தித்தபோது ஒரு இடத்தில் 13 சதவீத வாக்குகள் பெற்றிருந்தோம். ஒரு இடத்தில் ஒரு சதவீதம் வாக்கு பெற்றிருக்கிறோம். சில பூத்துக்களில் 35 சதவீதம் வாங்கியிருக்கிறோம். இப்படிப்பட்ட ஆதரவை எந்தக் கட்சிக்கும் மக்கள் கொடுத்தது இல்லை.
 

எங்களது கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்குள் தேர்தலை சந்தித்ததுதான் பலவீனமாக போய்விட்டது. நாளை வரும் தேர்தலை சந்திக்கும்போது அப்படிப்பட்ட பலவீனம் இருக்கக்கூடாது. கட்சியை வலுப்படுத்த வேண்டும், களத்தை பலப்படுத்த வேண்டும், ஒவ்வொரு வாக்காளரையும் ம.நீ.ம. நிர்வாகிகள் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஓய்வு. இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழகத்தின் கடைசி பூத் வரை நிர்வாகிகளை நியமித்துவிடுவோம். 
 

சட்டமன்றத் தேர்தலில் எங்களது கட்சி வெற்றிக்கான கணிப்பில் உள்ள கட்சியாக இருக்கும். அப்படி இருக்க கட்சியை தயார் படுத்திக்கொண்டிருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலைவிட சட்டமன்றத் தேர்தலை முக்கியமாக கருதுகிறோம். 


 

 

கிராமப்புறங்களில் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்கு வங்கி இல்லை. இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் எடுத்த வாக்கு சதவீதத்தற்கு பாதிப்பை ஏற்படுத்தும், அது சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று விமர்சனம் செய்கிறார்களே...
 

நாங்கள் எங்கள் திட்டத்தில் தெளிவாக இருக்கிறோம். 2021 சட்டமன்றத் தேர்தலில் 4 சதவீத வாக்குள் பெற்ற ம.நீ.மய்யமாக இருக்கக்கூடாது. மாற்று வாய்ப்புக்குள்ள கட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது திட்டம். அதற்காகத்தான் எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு எங்களது கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறோம். மீண்டும் சொல்கிறேன் இருக்கும் கட்சிகளில் இன்னொரு கட்சியாக வந்த கட்சி ம.நீ.ம. அல்ல. குறிக்கோளுடன் வந்திருக்கிறோம். அதனை நிறைவேற்ற போராடுகிறோம். 
 

கடந்த 50 வருடங்களாக திமுக, அதிமுக ஆட்சியில் இருந்துள்ளது. கிராம பஞ்சாயத்துக்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள், கைக்குள் இருக்க வேண்டும் என்று திமுக, அதிமுக ஆசைப்படுகிறது. மத்திய அரசிடம் சுயாட்சி கேட்கிற மாநில அரசு, கிராமப் பஞ்சாத்துக்களுக்கு முழுமையான அதிகாரங்களை கொடுப்பதில்லை. அதைக் கொடுப்பதற்குக்கூட நாங்கள்தான் வரவேண்டும். 

 

Murali Appas


 

இந்த உள்ளாட்சித் தேர்தலே குறைபிரசவம். நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல முடியாமல் தேர்தலை அறிவித்திருக்கிறார்கள். இந்த தேர்தலை யாராவது நிறுத்திவிடமாட்டார்களா என்று ஆசைப்பட்டார்கள். இந்தத் தேர்தல் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தப்போவதில்லை. இதில் வெற்றிபெறுபவர்களின் பதவி காலம் என்ன? என்ற சந்தேகத்தை உருவாக்குகிறார்கள் இங்கு உள்ள கட்சிகள். 
 

ம.நீ.மய்யத்தை பொறுத்தவரை 2021 பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவோமானால் எல்லாவற்றுக்கும் மாற்று இருக்கிறது. எந்த வகையிலும் விட்டுக்கொடுக்கவோ, அந்த வாய்ப்பை நழுவ விடவோ தயாராக இல்லை. எங்களிடம் இத்தனை வாக்கு சதவீதம் இருக்கிறது என்று யாரிடமாவது சென்று எம்பி சீட்டு வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. மிகத் தெளிவாக சொல்கிறோம் வரும் 2021 தேர்தலில் திமுக, அதிமுகவை எதிர்த்து நிற்கப்போகிறோம். 2021 தேர்தலில் திமுக, அதிமுக தங்களது கனவை நனவாக்குவது அவ்வளவு எளிதல்ல. அதிமுக ஆட்சியில் மட்டுமல்ல, அரசியலில் இருந்தே ஓய்வு பெறும் காலம் வரும். 
 

2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம், ரஜினியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதா?  
 

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற இரண்டு பேரின் நோக்கத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நட்பு சென்று கொண்டிருக்கிறது. தேவைப்படுமானால் வாய்ப்பு இருக்கத்தான் செய்யும். திமுக, அதிமுகவை வீழ்த்துவதற்கு அது தேவை என்றால் அதுவும் நடக்கும். 


 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.