Skip to main content

ஜெயிக்க வச்சா இன்னும் எத்தனை பொண்ணுங்க குடிய கெடுக்கப் போறானுகளோ - பொள்ளாச்சி அரசியல் 

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

கொங்கு பெல்ட்டின் இப்போதைய அ.தி.மு.க. எம்.பி.க்களில் பலர், இந்தத் தேர்தலில் போட்டியிடத் தயங்கிய நிலையில், பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரன் மட்டும் தில்லாக களத்தில் குதித்திருக்கிறார். ஆனாலும் அவரை திகிலடிக்க வைத்துக்கொண்டிருக்கிறார் துணை சபா பொள்ளாச்சி ஜெயராமன். கடந்த ஐந்து வருடங்களில் தொகுதிக்கு எதுவுமே செய்யாமல் எப்படி ஓட்டுக் கேட்டுப் போவது என்ற தயக்கம் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு இருப்பதை பல இடங்களில் காணமுடிந்தது. இதேபோல் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூக ஏரியாக்களில் ஓட்டுக் கேட்டுப் போவதும், அ.தி.மு.க.வினருக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. 

 

dmk candidates



இதையெல்லாம் சமாளித்துப் போய்க் கொண்டிருந்தாலும் மகேந்திரனின் பிரச்சார வேனில் பொள்ளாச்சி ஜெயராமன் ஏறி நின்று பயமுறுத்துகிறார். பாலியல் கொடூரத்தால் பொள்ளாச்சியே எரிமலையாய் இருக்கும் போது,  கட்சியின் சீனியரான இவரை, பிரச்சார வேனிலிருந்து எப்படி இறங்கச் சொல்வது என தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார் மகேந்திரன். ஆனால் பொள்ளாச்சி ஜெயராமனோ, பிரச்சார வேனுக்கு முன்னும் பின்னும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பவனி வந்து கொண்டிருக்கிறார். 

 

admk



இந்த பாதுகாப்புடன் கிணத்துக்கடவு தொகுதியில் ஓட்டுக் கேட்டுப் போன போது ஏக களேபரமாகிவிட்டது. கிணத்துக்கடவு ஒன்றியத்தில் இருக்கும் குளத்துப்பாளையத்தில் பொள்ளாச்சி ஜெயராமனும் மகேந்திரனும் ஓட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது, நடராஜ் என்கிற ரத்தத்தின் ரத்தம், "காலம் காலமாக நாங்க ரெட்டை இலைக்குத்தான் ஓட்டுப் போட்டுக்கிட்டிருக்கோம். அப்படியெல்லாம் நாங்க ஓட்டுப் போட்டு உங்களை ஜெயிக்க வச்சதுக்குப் பரிசுதான் உன்னோட ரெண்டு பசங்களும் பல சின்னப் பொண்ணுங்களை நாசம் பண்ணிருக்கானுங்க. இப்பவும் ஜெயிக்க வச்சா இன்னும் எத்தனை  பொண்ணுங்க குடிய கெடுக்கப் போறானுகளோ''’என சகட்டுமேனிக்கு ஒருமையில் விளாசியதும் வேனிலிருந்து இறங்கி, காருக்குள் போய் உட்கார்ந்துகொண்டார் பொள்ளாச்சி ஜெயராமன்.   

 

ammk



அப்போதும் விடாத நடராஜ், கார் கண்ணாடியைத் தட்டியபடி சவுண்ட் விட... காரைக் கிளப்பிக் கொண்டு, ஜெயராமன் பறக்க, பிரச்சார வேனைக் கிளப்பிக்கொண்டு பறந்துவிட்டார் மகேந்திரன். சொந்தக் கட்சிக்காரர்களின் கோபத்தால் ரொம்பவே தத்தளித்துக் கொண்டிருக்கிறார் மகேந்திரன். இது போதாதென்று, முதல்வர் எடப்பாடி பிரச்சாரத்திற்கு வருவதற்கு முன்னால், "பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற எம்.ஜி.ஆர்.பாடலுக்கு படுகவர்ச்சியாக டான்ஸ் ஆடி மக்களை முகம் சுழிக்க வைத்தது கலைநிகழ்ச்சி குரூப். 

இப்படி பல வழிகளில் அ.தி.மு.க. தத்தளிப்பது, தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரத்திற்கு சாதகமாகத்தான் இருக்கிறது. ஆனால் இங்கும் சொந்தக் கட்சி நிர்வாகிகளின் சொதப்பலால், பல இடங்களில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது தி.மு.க. "ஆனைமலை மற்றும்  பொள்ளாச்சி வடக்கு ஒன்றியங்கள்தான் தி.மு.க. வீக்காக இருக்கும் ஏரியா. ஆனைமலை ஒ.செ. தேவ சேனாதிபதியும் பொள்ளாச்சி வடக்கு ஒ.செ. மருதவேலுவும் களப்பணிகளில் மந்தகதியாக இருப்பதுடன், அ.தி.மு.க.வினரின் பணப்பட்டுவாடாவையும் கண்டுகொள்வதேயில்லையாம். இதே ஸ்டைலில்தான் வால்பாறை ந.செ. கோழிக்கடை கணேசனும் இருக்கிறார். இதையெல்லாம் தலைமை சரிபண்ணலைன்னா சிக்கல்தான்' என்கிறார்கள் உ.பி.க்கள். 

இரு கட்சிகளின் தத்தளிப்பு, தள்ளாட்டத்திற்கிடையிலும் மக்கள் நீதி மய்யம் மூகாம்பிகாவும் நாம் தமிழர் சனுஜாவும் தீவிரமாக வாக்கு கேட்டுவருகிறார்கள். 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்