Skip to main content

கமலுடன் கூட்டணிக்கு ரெடியாகும் தேமுதிக? ரஜினிக்கு சாதகமான தேர்தல் களம்... அதிரடி திட்டம்!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

"வாரத்துக்கு வாரம் ஆரவாரம்' என அப்போதெல்லாம் சினிமா படங்களுக்கு போஸ்டர் அடிப்பார்கள். ஆனால் இப்போதோ வாரத்துக்கு வாரம் ரஜினியின் அரசியல் ஆரவாரம் சூடு பிடித்துக் கொண்டிருக்கிறது. "காவிச்சாயம் பூசும் விஷயத்தில் திருவள்ளுவரும் சிக்கமாட்டார், நானும் சிக்கமாட்டேன்'' என கடந்த வாரம் அதிரடி கிளப்பினார் ரஜினி. இது போதாதா... டி.வி. மீடியாக்களில் அனல் பறக்கும் விவாதம் நடந்தது.
 

rajini



வழக்கம்போல் அரசியல் விமர்சகர்கள், "ஆமாமா ரஜினிக்கு பி.ஜே.பி. மைண்ட் செட் கிடையாது'' என தங்களின் வாதத் திறமையால் கதிகலங்க வைத்தனர். ஆனால் அதேநாளில் அடுத்த சிலமணி நேரத்தில், அதே ரஜினி அளித்த பேட்டியில்... "காவி விஷயத்தை மீடியாக்கள்தான் பெரிதுபடுத்துகின்றன' என்று சொல்லிவிட்டார்.
 

rajini



ரஜினி, "அரசியலில் அதிசயம் நிகழும்'' எனச் சொல்லி இந்த வார பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். சினிமா உலகிற்கு கமல் வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி, "கமல் 60'’என்ற நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நவம்பர் 17 அன்று நடந்தது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அரங்கத்தில்தான் முதல்வர் எடப்பாடிக்கு எதிரான அஸ்திரத்தை வீசியிருக்கிறார் ரஜினி.
 

dmdk



விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதுமே, "கட்சி ஆரம்பிக்கப் போறேன் என இப்போது வரை சொல்லிவருகிறார். வீட்டின் காம்பவுண்டுக்குள் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர்களெல்லாம் எம்.ஜி.ஆர். ஆக முடியாது'' என ரஜினியை குறிவைத்து தாக்கினார் எடப்பாடி. அடுத்ததாக கோயம்புத்தூரில் மீடியாக்களிடம் பேசிய போது, "ரஜினி என்ன அரசியல்கட்சித் தலைவரா, அவர் ஒரு நடிகர்தானே. வெற்றிடத்தைப் பற்றி அவர் ஏன் பேசிக்கிட்டிருக்காரு'' எனப் பேசிய எடப்பாடி, சொந்த ஊரான சேலத்தில் பேசியபோது, ரஜினி,—கமல் இருவரையும் சகட்டுமேனிக்கு போட்டுத் தாக்கினார்.

இதன் பின்தான், "ரஜினி சொன்ன வெற்றிடம் தமிழகத்தில் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது'' என ஒரு தினுசாக பேசினார் கமல். தம்மைப் பற்றி ஒருவர் கமெண்ட் அடித்தால், பதில் கமெண்ட் அடிப்பது ரஜினிக்கு பழக்கமில்லாத விஷயம். ஆனால் ‘"கமல்—60'’விழாவிலோ, எடப்பாடிக்கு பாலிஷாக பதில் சொல்லும் வகையில்... "முதல்வராவோம் என இரண்டு வருடங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் அந்த அதிசயம் நிகழ்ந்துவிட்டது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் அரசியலில் அதிசயம் நடக்கும்'' என எடப்பாடிக்கு பஞ்ச் வைத்து, தனது அரசியல் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார் ரஜினி.

அதேபோல் கமலுக்கும் தனக்கும் கொள்கை, சித்தாந்தங்களில் மாறுபட்ட கருத்து இருந்தாலும் நட்பில் மாறுபாடு இல்லாமல் உறுதியாக இருக்கிறோம் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். "நானும் ரஜினியும் இணைந்து செயல்படுவதில் எங்களுக்குள் ஈகோ இல்லை' என்பதை அதே விழாவில் பேசிய விழா நாயகனான கமலும் எல்லோருக்கும் புரியும்படி பேசியுள்ளார். ஏதோ ஒரு தெளிவான திட்டத்துடன் ரஜினியும் கமலும் பேசினாலும் இருவரின் ரசிகர்கள் (கமல் கட்சி ஆரம்பித்து தேர்தலிலும் போட்டியிட்டுவிட்டதால் தொண்டர்களாகிவிட்டார்கள்) என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிய, முதலில் மக்கள் நீதி மய்யத்தின் மண்டலப் பொறுப்பாளர் ஒருவரை தொடர்பு கொண்டோம்.


"அப்போதும் சரி, இப்போதும் சரி... அவர்கள் இருவரும் எப்போதும் நெருக்கமாகத் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ரசிகர்களாகிய நாங்கள்தான் அடித்துக் கொண்டிருந்தோம். அது இப்போது மாறும்போல் தெரிகிறது. என்ன ஒண்ணு எங்க தலைவர் கட்சி ஆரம்பிச்சு ஒன்றரை வருஷமாச்சு, எம்.பி. தேர்தலிலும் போட்டியிட்டு 4% ஓட்டும் வாங்கியாச்சு. அதிலும் கோவை தொகுதியில் எங்க கட்சி வேட்பாளர் மூன்றாவது இடத்துக்கு வந்து ஆச்சர்யப்படுத்தினார்.

மண்டலப் பொறுப்பாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள், கொள்கை பரப்புச் செயலாளர், தேர்தல் பணிக்குழு என பொறுப்பாளர்களை நியமித்து, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முனைப்புடன் இருக்கிறார் எங்கள் தலைவர். ஆனால் ரஜினியோ, "சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சிறுத்தை சிவா படத்தைத் தொடர்ந்தும் படங்களில் நடிப்பேன். தேர்தல் நேரத்தில் கட்சி ஆரம்பிப்பேன்' என்கிறார். திடீர்னு கட்சி ஆரம்பிச்சு, ரெண்டு பேரும் எப்படி இணைந்து செயல்படப் போறாங்கன்னு தெரியல'' என்கிறார்.


தென் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசும்போது, “மாநகரங்கள், நகரங்களில்தான் கமலின் கட்சிக்கு கட்டமைப்பு இருக்கிறது. கிராமங்களில் எங்களின் மக்கள் மன்றத்திற்கு 75% உறுப்பினர்களை சேர்த்துவிட் டோம். எங்கள் தலைவர் அரசியலுக்கு வந்து வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இருப்பதால், கமலுடன் கைகோர்ப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. அதேநேரம் தென் மாவட்ட மக்கள் மன்றத்தில் இப்போதே ஒரு சமுதாயத்தினரின் டாமினேஷன் அதிகரித்து வருவதையும் எங்கள் தலைவர் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்றார்.

இதற்கிடையே விஜயகாந்த் தரப்பிலிருந்து சமீபத்தில் கமலை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். தே.மு.தி.க.வும் மக்கள் நீதிமய்யமும் இணைந்து செயல்படலாம், முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்கலாம் எனவும் பேச்சுவார்த்தை ஓடியிருக்கிறது. ஆனால் கமலோ, "அது சாத்தியமில்லை' எனக் கூறிவிட்டாராம். இதுகுறித்தும் ம.நீ.ம.வின் மாநில நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். "முதல்வர் வேட்பாளராக ரஜினியை ஏற்றுக் கொள்வதில் எங்கள் தலைவருக்கு தயக்கமில்லை. ஆனால் தே.மு. தி.க.வின் கிச்சன் காபினெட்டின் பொலிடிக்கல் பாலிஸியும் சில எதிர்பார்ப்புகளும் அவருக்கு செட்டாகவில்லை'' என்றார்.

ரஜினியும் கமலும் ஒரே டிராக்கில் போய்க் கொண்டிருக்கும்போது, விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அதே கமல் விழாவில் பேசியபோது, "ரஜினியும் கமலும் இணைந்தால் திரையுலகமே பின்னால் நிற்கும். தமிழகத்தை ஆண்டவர்கள், இவர்களுக்கு வழிவிட வேண்டும். இவர்கள் இருவரும் ஆண்டது போதும் என்ற திருப்தியுடன் தம்பிமார்களுக்கு வழிவிட வேண்டும்'' என மேடையிலேயே விஜய் என்ட்ரி பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். "எஸ்.ஏ.சி. சொன்ன தம்பி, விஜய்யைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?' என்கிறார்கள் திரையுலகினர்.

"ரஜினியின் அரசியல் என்ட்ரியை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உட்பட பெரும்பாலான கட்சிகள் உற்று நோக்குகின்றன. அதில் காலடி வைப்பதில் உள்ள லாப-நட்ட கணக்குகளை நீண்டகாலமாகவே யோசித்து வருகிறார் ரஜினி. வெற்றிக்குச் சாதகமான தேர்தல் களம்தான் அவரது எதிர்பார்ப்பு. அதற்கான சூழல் அமையும்போது, "அதிசயம்' நடக்கும்'' என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமான வட்டத்தினர்.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.