Skip to main content

விஜயகாந்த் மச்சான் சுதிஷ் பகிர்ந்த கார்ட்டூன்! -திமுகவினர் கொந்தளிப்பு -பல்டி அடித்த சுதீஷ்!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020
 L. K. Sudhish

 

 

தேமுதிகவின் இளைஞர் அணி தலைவர் எல்.கே.சுதிஷ், தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஒரு கார்ட்டூன், திமுக தொண்டர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது. விஜயகாந்த் காலில் அரசியல் கட்சி தலைவர்கள் வீழ்ந்து கிடப்பது போல அந்த கார்ட்டூன் வரையப்பட்டிருக்கிறது. காலில் விழும் அரசியல் தலைவர் ஒருவரின் தோளில் மஞ்சள் துண்டு இருக்கிறது. அதாவது, விஜயகாந்த் காலில் கலைஞர் வீழ்ந்து கும்பிடுவது போல கார்ட்டூன் வரையப்பட்டு அதனை முகநூலில் பதிவு செய்துள்ளார் சுதிஷ்! 

 

அந்த கார்ட்டூன் தற்போது வைரலாகி வரும் நிலையில், அந்த கார்ட்டூனைப் பார்த்த திமுக தொண்டர்கள் கொந்தளிக்கிறார்கள். அரசியல் கட்சிகளிடத்தில் சர்ச்சைகளையும் எதிரொலிக்க செய்கிறது சுதீஷின் கார்ட்டூன். 

 

இதுகுறித்து திமுகவின் தகவல் தொழில்நுட்ப இணையத்தள பிரிவின் மாநில துணை அமைப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி.எஸ்.சேகரிடம் பேசியபோது, "அந்த கார்ட்டூனை பார்த்ததும் பதறிப்போனேன். நெஞ்சம் துடிக்கிறது. விஜயகாந்த் மச்சான் சுதீஷுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் இப்படி ஒரு கார்ட்டூனை பதிவு செய்திருப்பார்? இந்தியாவே வியந்து பார்த்த தலைவர் கலைஞர். பல பிரதமர்களை உருவாக்கியவர். 2 கோடி தொண்டர்கள் கொண்ட திமுகவின் பிதாமகனாக இருந்தவர் கலைஞர். அவரை இழிவு செய்வது போல கார்ட்டூன் வரைந்திருப்பது அநாகரீகத்தின் உச்சம். அரசியல் அனாதைகளுக்குத்தான் இப்படிப்பட்ட சிந்தனை வரும். 

 

யாரிடம் கூட்டணி வைப்பது? எந்த கூட்டணியில் கோடிகள் கிடைக்கும் என சுற்றி திரிந்தும் எந்த அரசியல் கட்சியும் தேமுதிகவை சீண்டாததால் விஜயகாந்தும் அவரது குடும்பமும் அரசியல் அனாதைகளாக இருக்கின்றனர். அதனை ஜீரணிக்க முடியாமல்தான் சுதிஷ் இப்படி கார்ட்டூன் போட்டுள்ளார். 15 லட்சம் தேமுதிக தொண்டர்களை ஜெயலலிதாவிடம் பல கோடிகளுக்கு அடகு வைத்தும், ஜெயலலிதாவின் காலில் விழுந்தும் அதிமுகவுடன் கூட்டணி வைத்த கதை எங்களுக்கு தெரியும். ஜெயலலிதாவால் அரசியல் வாழ்வு பெற்ற விஜயகாந்தும், சுதிஷும் அதே ஜெயலலிதாவை தோற்கடிக்க, கலைஞர் காலில் விழுந்த கதையும் எங்களுக்குத் தெரியும். 

 

திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துக்கொள்ள 15 லட்சம் தேமுதிக தொண்டர்களும் ஒருமித்த ஒப்புதலை தந்தபோது, அதற்கு மாறாக, போயஸ் கார்டனிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பல நூறு கோடிகளை பெற்றுக் கொண்டு 'மக்கள் நல கூட்டணி' யை உருவாக்கியவர் விஜயகாந்த். தேமுதிக தொண்டர்களை போயஸ் கார்டன் கொடுத்த கோடிகளுக்கு  விற்றவர்கள் சுதிஷும் பிரேமலதாவும். 

 

ddd

 

அப்படிப்பட்ட யோக்கிய சிகாமணியான சுதிஷுக்கு, கோடிக்கணக்கான தொண்டர்களால் உருவான மாபெரும் இயக்கமான திமுகவின் மறைந்த தலைவர் கலைஞரை கொச்சைப்படுத்த தகுதி கிடையாது. அரசியல் லாபங்களுக்காக நீங்கள் யார், யார் கால்களில் வீழ்ந்து கிடந்தீர்கள் என விவாதிக்க நான் தயார் ! நீங்கள் தயாரா? உடனடியாக அந்த கார்ட்டூனை சுதிஷ் நீக்க வேண்டும். இல்லையேல், எங்களின் எதிர்வினை வேறு மாதிரி இருக்கும்" என எச்சரிக்கும் வகையில் ஆவேசப்பட்டார் சி.எஸ். சேகர். 

 

சுதிஷின் இந்த அநாகரீகமான கார்ட்டூன் திமுக தரப்பில் பரவி வருவதால், திமுக தொண்டர்களின் கோபம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனை அறிந்த சுதீஷ், அந்த கார்ட்டூனை முக நூல் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். 

 

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தேமுதிகவினர், உடல்நல சிகிச்சைக்காக விஜயகாந்த் வெளிநாடு சென்றிருந்தபோது கலைஞருக்காக கண்ணீர் விட்டு அழுத வீடியோ வெளியானது. அதனை யாரும் அவ்வளவு சீக்கிரம் எளிதில் மறந்துவிட முடியாது. அதோடு மட்டுமல்ல வெளிநாட்டில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய விஜயகாந்த், நள்ளிரவு நேரம் என்றுகூட பாராமல் உடல்நிலை முடியாத நேரத்திலும் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தியவர். அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் கலைஞர் மீது விஜயகாந்த் வைத்திருக்கும் மரியாதையை அவரது குடும்பத்தினர் புரிந்துகொள்ளவில்லை என்பது வேதனையாக இருக்கிறது என்றனர் கவலையுடன்...

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.