Skip to main content

தேமுதிகவுக்காக எடப்பாடிக்கு பாஜக நெருக்கடி! தொகுதிகளை விட்டுத்தருமா பாமக? உடையும் அபாயத்தில் அதிமுக கூட்டணி? 

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

 

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக இரு கட்சிகளும் ஐக்கியமாகிவிட்ட நிலையில், தேமுதிகவை இக்கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என ஏகத்துக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறது பாஜக தலைமை.
 

            அதிமுக கூட்டணியில் விஜயகாந்தை கொண்டு வருவதில் முதல்வர் எடப்பாடிக்கு ஆர்வம் இருக்கவில்லை. அதனாலேயே, ஆரம்பத்திலிருந்து தேமுதிகவுடன் அதிமுகவினர் பேச்சுவார்த்தையை நடத்தவில்லை. தேமுதிகவுக்காக பாஜகதான் அக்கட்சியுடன் பேசி வந்தது. பிரேமலதா, சுதீஷ் இருவரும் பாஜகவின் மூத்த தலைவர் பியூஸ் கோயலிடம் பேசி வந்தனர். 

 

vijayagath-bjp


 

 இந்த நிலையில், பாஜக தலைமை கொடுத்த அழுத்தங்களுக்கு பணிந்து தேமுதிகவை கூட்டணிக்குள் இணைத்துக்கொள்ள சம்மதித்த எடப்பாடி, 3 சீட்டுகளுக்கு மேல் தர இயலாது என்பதை வலியுறுத்தியிருந்தார். இதனை தேமுதிக தலைமைக்கு பியூஸ் கோயல் பாஸ் செய்ய, அதனை நிராகரித்தார் பிரேமலதா. இதனால் இடைப்பட்ட சில நாட்கள் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தடைபட்டது. 
 

ஆனால், தனது முயற்சியை கைவிடாத பாஜக தலைமை தொடர்ந்து கொடுத்த நெருக்கடியும், மிரட்டலும் அதிமுகவை பணிய வைத்தது. அதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை மெல்ல சூடு பிடிக்க, தேமுதிக வைத்த சில பல கோரிக்கைகளை பாஜக தனது கஸ்டடியிலிருந்து நிறைவேற்ற உறுதி தந்த நிலையில், தேமுதிகவுக்கு சீட்டுகளை கூடுதலாக்கி தர வேண்டும் எனவும் உத்தரவிட்டது பாஜக. இதனை தட்ட முடியாமல் ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் எடப்பாடி. 
 

விஜயகாந்திடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடுங்கள் என பாஜக தலைமையின் உத்தரவுக்கு இணங்க விஜயகாந்தை சந்திக்க ஓபிஎஸ்சை அனுப்பி வைத்தார் எடப்பாடி. அதிமுக பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ள கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், தங்கமணி, வேலுமணி, ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் செல்லக்கூடாது; ஓபிஎஸ் தான் போக வேண்டும் என பாஜக தரப்பிலிருந்து எடப்பாடிக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதனால்தான் ஓபிஎஸ் அனுப்பி வைக்கப்பட்டார். அதேசமயம், தனது ஆதரவாளர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரையும் அனுப்பினார் எடப்பாடி. ஆனால், ஜெயக்குமாருக்கு பிடிக்காதவரான மீனவர் அணியைச் சேர்ந்த தனது சிஷ்யர் ரமேஷை தன்னுடன் அழைத்துச் சென்று விஜயகாந்தை சந்தித்தார் ஓபிஎஸ் ! 


 

vijayagath-ops


 

           விஜயகாந்த் – ஓபிஎஸ் சந்திப்பு குறித்து அதிமுக தலைமை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘’ தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவது அனைத்துமே பாஜகவின் விருப்பப்படியே நடக்கிறது. தற்போது 5 லோக் சபா சீட் , 1 ராஜ்யசபா சீட் தருவதற்கு அதிமுக தலைமை சம்மதித்திருக்கிறது. பாஜக தனது கோட்டாவிலிருந்து ராஜ்யசபா சீட்டை ஒதுக்கித் தரும். இதைத்தான் விஜயகாந்திடம் ஓபிஎஸ் எடுத்துச் சொன்னார். 
 

           ஆனால், விஜயகாந்த்தோ 5-ஐ 6 ஆக உயர்த்தி தருமாறு கேட்கிறார். அதேபோல அந்த 6 லோக்சபா தொகுதிகளில் 4 தொகுதிகள் பாமகவுக்காக உறுதி செய்யப்பட்ட தொகுதிகள். இதனை எப்படி தேமுதிகவுக்காக தர முடியும் ? பாமக ஏற்குமா? அதனால்தான் நேற்று தேமுதிகவுடன் கூட்டணி ஒப்பந்தம் போட முடியாமல் தடை ஏற்பட்டது. அந்த சந்திப்பில், 2014 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக-பாஜக-பாமக கூட்டணி அமைந்த போது எங்களுக்கு 14 சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. அந்த வகையில் நாங்கள் தான் பெரிய கட்சியாகவும் முதல் நிலை கட்சியாகவுன் அன்றைக்கு கூட்டணியில் இருந்தோம். பாஜகவுக்காகத்தான் சில விசயங்களை அன்றைக்குப் பொருத்துக்கொண்டோம். அதேபோல, 14 சீட்டுகளில் போட்டியிட்டு 6 சதவீத வாக்குகள் வாங்கினோம். அதுவே தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட்ட்டிருந்தால் 13 சதவீத வாக்குகளை வாங்கியிருப்போம். தனித்துப் போட்டியிடலாம் என்கிற முடிவை அன்றைக்கு பாஜக வலியுறுத்தியதால்தான் மாற்றினோமே தவிர கூட்டணிக்காக நாங்கள் ஏங்கவில்லை. ஆனால், இன்றைக்கு பாமகவுடன் எங்களுக்கு குறைவாக சீட் கொடுத்து முடிக்கலாம்னு பார்த்தால் எடப்பாடி ஒப்புக்கொள்ள முடியும்? பாமகவை விட செல்வாக்கு குறைந்த கட்சியா, தேமுதிக? என்றெல்லாம் கொட்டித்தீர்த்திருக்கிறார் பிரேமலதா. அதற்கேற்ப இடையிடையே விஜயகாந்தும் சில வார்த்தைகளை கடுமையாக சொல்லியுள்ளார்.
 

                இதனை எதிர்கொண்ட ஓபிஎஸ்சும் ஜெயக்குமாரும், சீட்டுகளின் எண்ணிக்கையை கூடுதலாக்கி தருகிறோம். அதில் பிரச்சனை இல்லை. ஆனால், பாமகவுக்கு உறுதித் தரப்பட்ட தொகுதிகளை எப்படி தருவது ? என்பதுதான் புரியவில்லை. அதில்தான் சிக்கல் இருக்கிறது. இருப்பினும் பேசிப்பார்க்கிறோம் என சொல்லி விட்டு வெளியேறினார்கள். இந்த சிக்கல்களால்தான் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
 

                 விஜயகாந்துடனான சந்திப்பு விபரங்களை எடப்பாடியிடம் ஓபிஎஸ்சும், ஜெயக்குமாரும் ஒப்புவித்தனர். பாமகவின் தொகுதிகளை தேமுதிக கேட்பதையறிந்து இடிந்து போய்விட்டார் எடப்பாடி. அதே வேளை, பியூஸ் கோயலிடமிருந்து எடப்பாடிக்கு ஃபோன் வந்தது. அப்போது, விஜயகாந்த் சந்திப்பில் நடந்ததை அனைத்தும் எனக்கு தெரியும். அதனால், தேமுதிக எதிர்பார்க்கும் தொகுதிகள் பாமகவிடமிருந்தால் அதனை அவர்களிடமிருந்து மாற்றி தேமுதிகவுக்கு ஒதுக்குங்கள். பிரதமர் மோடி சென்னைக்கு வரும்போது கூட்டணி தலைவர்கள் அனைவரும் மேடையில் இருக்க வேண்டும். அதற்கேற்ப விரைந்து முடியுங்கள் என கட்டளையிட்டார். 


 

ops-ramadoss

 

 பாஜகவை பொருத்த வரைக்கும், பாமகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தை அதிமுக தலைமை திடீரென்று போட்டதை ரசிக்கவில்லை. குறிப்பாக, பாஜக-பாமக இரு கட்சிகளையும் வைத்துக்கொண்டுதான் கூட்டணி பேச்சுக்களை நடத்த வேண்டும் என பாஜக விரும்பியது. அதைத்தான் எடப்பாடியிடம் பாஜக வலியுறுத்தவும் செய்தது. ஆனால், பாஜகவுடன் சரிசமமாக அமர்ந்து தங்களுக்கான கூட்டணி ஒப்பந்ததை முடிவு செய்ய டாக்டர் ராமதாஸ் விரும்பவில்லை. அதனால்தான், பாஜகவின் விருப்பத்துக்கு மாறாக பாமகவுடன் சட்டென்று கூட்டணியை இறுதி செய்தது. அதனால், அதிமுக தலைமை மீது ஏக கோபத்தில் இருந்த பாஜக தலைமை, தேமுதிக விசயத்தில் ஏறி அடிக்கிறது. பாஜகவை குறைந்த எண்ணிக்கையாக 5 சீட்டுகளில் முடக்கிய எடப்பாடியால், இப்போது பாஜகவின் ஏறி அடித்தலை எதிர்கொள்ள முடியவில்லை. பாஜகவின் நெருக்கடிக்கேற்ப தலையாட்டும் எடப்பாடி, தேமுதிகவுக்காக பாமகவை எப்படி சரி கட்டப்போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி ! ‘’ என விரிவாக சுட்டிக்காட்டினார்கள். 
 

                   இந்த நிலையில், விஜயகாந்தின் சந்திப்பில் நடந்ததையும், பாஜக கொடுக்கும் நெருக்கடியையும் டாக்டர் ராமதாசிடமும், அன்புமணியிடமும் நேற்று இரவே தெரிவித்திருக்கிறார் எடப்பாடி. இதனைத் தொடர்ந்து இன்று ( 5.3.2019 ) முதல்வர் எடப்பாடியை சந்தித்துள்ளார் டாக்டர் அன்புமணி. இந்த சந்திப்பில், தேமுதிகவுக்காக சில தொகுதிகளை விட்டுக்கொடுத்து மாற்று தொகுதிகளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார் எடப்பாடி ! ஆனால், இதற்கு உடனடியாக சம்மதிக்காத அன்புமணி, டாக்டர் ராமதாஸ் மற்றும் பாமகவின் மூத்த தலைவர்களிடம் கலந்தாலோசித்து விட்டு சொல்வதாக சொல்லி கிளம்பியுள்ளார். 
 

                  பாஜகவின் நெருக்கடிக்கும் மிரட்டலுக்கும் பயந்து தேமுதிகவுக்காக பாமக தொகுதிகளை எடப்பாடி கேட்பதால், தொகுதிகளை மாற்றித் தர ராமதாஸ் சம்மதிப்பாரா ? என்கிற பரபரப்பு அதிமுக வட்டாரத்தில் எதிரொலிக்கிறது. தேமுதிகவை எதிரியாக கருதும் பாமக தலைமை, அவர்களுக்காக விட்டுக்கொடுக்காத பட்சத்தில் அதிமுக கூட்டணிக்குள் குழப்பம் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் அதிமுகவின் பேச்சுவார்த்தை குழுவினர். 



 

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.

Next Story

“16 அடி இல்லை 32 அடி கூட பாய்வேன்” - விஜய பிரபாகரன் அதிரடி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMDK candidate Vijaya Prabhakaran speech at election campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் விஜய பிரபாகரன் பேசியதாவது, “விஜயகாந்த் உடைய தைரியம் எனக்கும் இருக்கிறது. அது ரத்தத்திலே எங்க அப்பா எனக்கு கொடுத்தது. ஆனால், அந்த தைரியத்தை வைத்து மட்டும் இந்த தேர்தலை என்னால் சந்திக்க முடியாது. அந்த தைரியத்தை மக்களாகிய நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிப்பதன் மூலம் கொடுக்க வேண்டும்.

மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட வேண்டும் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். நிச்சயம் இந்த விருதுநகர் மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட நான் தயாராக இருக்கிறேன். உங்க வீட்டில் இருக்கிற பசங்க வயசுதான் எனக்கும் இருக்கிறது. எனக்கும் பல ஆசைகள் இருக்கிறது, ஆனாலும் அதை எல்லாம் ஓரம் கட்டி ஒதுக்கி வைத்துவிட்டு எங்க அப்பாவோட கனவை நிறைவேற்றவும், எங்க கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் இந்த மக்கள் முன்னாடி நான் வந்து நிற்கிறேன் என்றால் மக்களுக்கு நீங்கள் எனக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

அதேபோல், இளைஞர்கள் பலரும் எத்தனையோ வாய்ப்பு தேடி சுற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி என் தந்தை தாய் ஸ்தானத்தில் இருக்கின்ற மக்கள் ஆகிய உங்களிடம் ஒரு வாய்ப்பை தருமாறு கேட்கிறேன். ஏனென்றால், வாய்ப்பு கொடுத்தால் தான் நாங்கள் என்ன செய்வோம் என்று உங்களுக்கு தெரியும். இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து பத்து ஆண்டுகளாக எம்.பியாக ஆக்கி அவரை பார்த்தீர்கள். ஆனால், அவரது முகம் கூட பலருக்கும் தெரியாது. ஏன் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர் விஜயகாந்த். இரண்டு தலைவர்களுமே, தன் சொந்த பணத்தை மக்களுக்கு செலவு செய்த தலைவர்கள். அந்த வழியில் வந்தவர்கள் தான் அ.தி.மு.க- தே.தி.மு.க கூட்டணியும். ‘புலி 8 அடி பயந்தால் குட்டி 16 அடி பாயும்’ என்று சொல்வார்கள். நான் ஆணவத்தில் பேசவில்லை, எங்க அப்பாவோட ஆசை நிறைவேற்றுவதற்கு 16 அடி இல்லை 32 அடி கூட பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பை கொடுத்தால் தான் அதை நிரூபிக்க முடியும். விஜயகாந்த் புதைக்கப்படவில்லை கோடிக்கணக்கான மக்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார். இன்றைக்கு எம்ஜிஆர் மறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பெருசா பேசப்படுவது விஜயகாந்தினுடைய மறைவு மட்டும் தான்

யூடியூப், ரீல்ஸ் போன்றவற்றை பார்த்து, இளைஞர்களாகிய நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். இந்தத் தொகுதியிலேயே தங்கி உங்களுக்கு செய்ய நான் தயாராக இருக்கிறேன். துளசி கூட வாசம் மாறும், ஆனால் தவசி வார்த்தை மாறவே மாறாது. சொன்னா சொன்னதுதான். நிச்சயமாக உங்களுக்கு சேவை செய்ய  தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.