Skip to main content

அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி!

Published on 18/10/2017 | Edited on 18/10/2017
அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி!

அந்தக் கால தீபாவளி! ஃப்ரேம் போட்டோக்கள் செல்ஃபிக்களாக மாறி, கிரீட்டிங் கார்டுகளெல்லாம் வழக்கொழிந்து போன 'மெர்சல்' தீபாவளி காலத்தில் இருக்கிறோம். முன்பு தீபாவளி எப்படியிருந்தது, அதன் அடுத்தடுத்த வெர்சன்களில் என்னென்ன மாற்றங்களாகி இருக்கின்றன என்று மக்களிடம் தீபாவளி ச்சாட் ( chat) செய்தோம். 


            
"ஏழைக் குடும்பங்களில் தீபாவளி, பொங்கலின்போது மட்டுமே இட்லி, இனிப்புகள் புது ஆடைகள் கிடைக்கும். தீபாவளி நெருங்க நெருங்க, அப்பாக்களை பிள்ளைகள் துளைத்தெடுப்பார்கள். புது ஆடை பட்டாசு வாங்க... அவர்களே, தங்கள் நில முதலாளிகளிடம் முன் கூட்டியே முன்பணம் கடனாக கேட்டு வைப்பார்கள். எவ்வளவு முன்னாடியே கேட்டாலும்கூட தீபாவளிக்கு சில நாட்கள், ஏன் சில முதலாளிகள் தீபாவளிக்கு முதல் நாள் தான் பணம் கொடுப்பார்கள்.

இதற்காக அப்பாக்கள், அவர்கள் வீட்டுக்கு தினமும் சென்று காத்துகிடந்து வாங்கி வருவார்கள். பணம் வந்தவுடன் பிள்ளைகளுக்கு மனசெல்லாம் ஒருவித படபடப்பு ஏற்படும். அப்பாக்கள் கையை பிடித்தபடி நகரம் நோக்கி பயணம் செய்வார்கள். எந்த உடையை வாங்குவது என யோசனை பலமாக இருக்கும். அப்போதெல்லாம் ரெடிமேடு கிடையாது. துணியாக எடுத்து தைக்க வேண்டும் என்பதால், டைலர் கடைகளில் கூட்டம் அலைமோதும், அவர்களிடம் கெஞ்சி தீபாவளிக்குள் உடைகளை தைத்து வாங்கி தீபாவளியன்று போட்டுக்கொள்ள படாதபாடுபட வேண்டும். வீடுகளில் புத்தாடை பட்டாசு வந்தாச்சி... அம்மாக்கள் இட்லி மாவரைத்து வைத்திருப்பார்கள்.

தீபாவளி முதல் நாள் இரவு எப்போது விடியும் என, தூக்கமே வராது. நெஞ்சமெல்லாம் படபடப்பாக இருக்கும். இரவு 12 மணிக்கு மேல் ஆங்காங்கே டமால்.. டூமீல்... என்ற வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதால் எப்படிங்க தூங்க முடியும். தீப்பெட்டி மண்ணெண்ணெய் விளக்கோடு வெடிவெடிக்க கிளம்பினால், வீட்டில் இருப்பவர்கள், டேய் இன்னும் விடியல... ஏண்டா தூக்கத்தை கெடுக்கிற என மீண்டும், மீண்டும் சத்தம் போடுவார்கள்.



தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு, புரண்டு படுத்தப்படியே காத்திருந்து ஒரு வழியாக விடியற்காலை வந்தவுடன் எண்ணெய் தேய்த்து குளித்து புதுசட்டை போட்டுக்கொண்டு கையில் வெடிகளோடு வீதியில் படபடவென வெடிகளை வெடித்து கிளப்புவார்கள். பலத்த சத்தத்தோடு கிளம்பும் புகையை பார்த்து, டேய் பார்த்துடா, கை, கால்ல பட்டுடப்போகுது என சொல்வார்கள். அப்புறம் வெடிக்காத வெடிகளை காலில் தேய்த்து அது வெடிக்கும்போது காலில் காயமும், சுற்றாத சங்கு சக்கரத்தை மீண்டும் கிட்ட போய் கையில் எடுக்க அது சீரிய சீரலில் கையில் காயம், இப்படி எல்லாம் செய்த பிறகு தனது பட்டாசு தீர்ந்ததும், அக்கம் பக்க வீட்டில் பிள்ளைகள் வெடிக்கும் காட்சிகளை வீதிவீதியாக சென்று பார்த்து வியப்படைவது, இப்படிப்பட்ட தீபாவளி கடந்த காலங்களில் ஏராளம். இப்போதெல்லாம் உடைகள் முதல் பலகாரம் வரை எல்லாமே ரெமேட் தான்" என்கிறார் பெரியசாமி.

தீபாவளி பலகாரங்கள்

"இனிப்பு, கார வகைகள் என ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியின்போது தான் சாப்பிட முடியும். விவசாய வேலைகளால் அவைகளை ஆரஅமர உட்கார்ந்து அவைகளை செய்ய நேரம் கிடைக்காது. ஆகையால் தீபாவளி ஒருவாரம் முன்பே, முறுக்கு, லட்டு, அதிரசம், சீடை, பொரிவிளங்காய், சோமாசி, ஜிலேபி, காரவத்தல், காரசேவு, சிலேபி என அந்தக் கால காரங்கள்.

கலர் கலரான வகைகளில் இந்தக் காலத்தில் நெய் கேக், குலோப்ஜாம், பாதாம் கோகோ, பாதாரம் குல்கந்த், போலி, பாதுஷா, சோம்பப்புடி கேக் என ஏகப்பட்ட வகைகள் தயாரிக்கப்படுகின்றன.



இப்படிப்பட்ட பல காரங்களை ஒரு குடும்பத்தில் ஒருவரே செய்ய முடியாது. கூட்டுக்குடும்பத்தினர் ஒரே இடத்தில் சேர்ந்து செய்வார்கள். தனிக் குடும்பத்தினரில் உள்ள பெண்கள், அக்கம் பக்கம் உள்ள உறவுப் பெண்களை அழைத்து வந்து செய்வது வழக்கம். அவர்களுக்கு இவர்கள் போய் செய்து கொடுத்து மாற்றாள் உதவி செய்து பலகாரங்களை செய்து குவிப்பார்கள்.

பல நாட்கள் பலகார பரிமாற்றங்கள் உறவுகளுக்குள் அக்கம், பக்கம் வீடுகளுக்குள் நடக்கும். பிள்ளைகளோடு சாப்பாட்டை விட பலகாரங்களே சாப்பாடு பள்ளிக்கு போகும்போது புத்தகப் பைகளில் திண்பண்டங்கள் நிரம்பி வழியும். தலை தீபாவளிக்கு வரும் திருமண தம்பதிகள் பலகாரவகைகளை தின்று திக்குமுக்காடி போவார்கள். குடும்பங்களின் குதூகலம் கும்மாளம் சந்தோஷம் என அந்தக் கால தீபாவளியை மறக்க முடியுமா?", என்கிறார் செம்மணங்கூர் சிந்தாமணி பாட்டி.

இந்தக் கால தீபாவளி

"எல்லாவற்றிலும் அவசரம். துணியாக எடுத்து வைத்து போட நேரமில்லை. ரெடிமேடு கடைகளில் அலைமோதும் கூட்டம், அதேபோல் புதுப்புது பலகார வகைகள் கேள்விப்படாத பெயர்களில் ஸ்வீட், கார வகைகள், எந்த விதமான சுவை இது என நமக்கு உணர முடியாத சுவைகள் என கண்ணைப் பறிக்கும் கலர்கலரான பலகாரங்கள் அடுக்கப்பட்டுள்ளன. வாங்க முண்டியடிக்கும் இக்கால மக்கள் முன் கூட்டியே ஆர்டர் கொடுத்து பலகாரம் செய்து வாங்கும் பெரிய பெரிய குடும்பத்தினர்கள். இதை இல்லாமல் தீபாவளிக்கு என சீட்டு பிடித்து அதன் மூலம் தீபாவளிக்கு இனிப்பு, பட்டாசு, புத்தாடை வழங்கும் சீட்டு கம்பெனிகள், வீதிக்கு வீதி முளைத்துள்ளன. (இதிலே பணம் கட்டி ஏமாற்றியவர்களும், ஏமாந்தவர்களும் ஏராளம்).





சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவதற்குள் பாடாய் படுத்தும் போக்குவரத்து நெருக்கடி. இதனால் இப்படிப்பட்டவர்களுக்கு தீபாவளி சந்தோஷமே இல்லாமலும் போகிறது. எனவே அப்பட்டவர்களுக்கு பலகாரங்கள் செய்ய நேரம் ஏது. அதனால கடைகளில் வாங்கிக் கொள்கிறோம். மேலும் வீட்டில் செய்தால் ஒன்றிரண்டு பலகாரமே செய்ய முடியும். கடைகளில் பலவிதமான ஐட்டங்களை வாங்கி சாப்பிட்டு சுவை பார்க்க முடிகிறது. அவசர உலகம் அதற்கு தகுந்த மாதிரி நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டுமல்லவா. எப்படியோ நாங்களும் அவசர சந்தோஷத்திலும் சந்தோஷமாக தீபாவளியை கொண்டாடுகிறோம்" என்கிறார்கள் இப்போதைய குடும்பத் தலைவி திருமதி கீதா இளவரசன், சிவசக்தி ஆகியோர்.

இப்போது சாதாரண ஏழை எளிய மக்கள் முதல் பெரிய வசதி படைத்த குடும்பங்கள் வரை ரெடிமேடு தீபாவளியையே விரும்புகிறார்கள். 

"அதைவிட தீபாவளி சீட்டு பிடித்து ஒரு ஆண்டு முடிந்ததும், 600 ரூபாய் மதிப்புள்ள பிராந்தி பாட்டில் 2, பீர் 2, 1 லிட்டர் வாட்டர் பாக்கெட், பெப்சி 2 லிட்டர், சோடா 3, உருளை சிப்ஸ் 1 பாக்கெட், பிளாஸ்டிக் கிளாஸ் 8, சிக்கன் 65, ஒரு கிலோ ஸ்வீட் பாக்ஸ், ஊறுகாய் ஒரு சரம் என,. 10 அயிட்டங்கள் கொடுக்கப்படும் என ஸ்ரீசாய் பசித்திரா ஆண்கள் தீபாவளி பண்டு மந்தைவெளி சென்னை 28 என்ற முகவரியை செல்போன் செல்போன் எண்ணோடு வழங்கியுள்ளனர். இது குடிமன்னர்களின் தீபாவளி கொண்டாட்டமாம்", என்கிறார் வேலைக்குப்போகும் சிந்தாமணி.

நண்பர்கள் பார்ட்டி வைத்தும், நகர மக்கள் பட்டாசு வெடித்தும், கிராம மக்கள் பிள்ளைகளோடும், உறவினர்களோடும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

மொத்தத்தில் ஒளியின் சிறப்பை உணர்த்துவது தீபாவளி. தீபங்களின் வரிசை என்பதே தீபாவளி. வெளியுகலத்திலுள்ள இருள் மட்டுமில்லாமல், மனதில் இருக்கும் தீமை என்றுமே அகன்று, இருளும் நீங்க தீபாவளி வழிகாட்டுகிறது. புத்தாடை, பலகாரம், பட்டாசு, உறவினர்களைச் சந்திப்பது என வெறும் கொண்டாட்ட நாளாக மட்டுமில்லாமல் தன்னையோல பிறரை நேசிக்கும் அன்பு மனம் நமக்கு வேண்டும் என்பதை உணர்த்துகிறது. எளியவர்களுக்கு இயன்ற உதவி செய்யும் நன்னாளாக  அமைந்துள்ளது.

எஸ்.பி.சேகர்.

சார்ந்த செய்திகள்