Skip to main content

ஆவினில் தீபாவளி இனிப்புகள் தயாரிப்பில் குளறுபடி; ஒப்பந்ததாரர் திணறல்! 

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

Diwali Sweets Making Mistake in Aawin; The contractor is stuck!

 

சேலம் ஆவினில் தீபாவளி ஸ்பெஷல் இனிப்பு வகைகளை தயாரித்து, பேக்கிங் செய்வதற்கு போதிய கூலி ஆட்கள் கிடைக்காததால், குறித்த காலத்திற்குள் இனிப்புகளை சந்தைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

 

சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டியில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நுகர்வோருக்கு நேரடி பால் விற்பனை மட்டுமின்றி, நெய், பால் பவுடர், நறுமணப்பால் உள்ளிட்ட பால் பொருள்கள் தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் இனிப்பு, கார வகைகளை தயாரித்தும் விற்பனை செய்கிறது. 

 

நடப்பு ஆண்டில், நவ. 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஸ்பெஷல் மைசூர்பா, கேரட் மைசூர்பா, முந்திரி கேக், மில்க் கேக், லட்டு ஆகிய இனிப்பு வகைகளும், மிக்சர் வகைகளும் தயாரிக்க ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது. இவற்றில் ஸ்பெஷல் மைசூர்பா மட்டும் அதிகபட்சமாக 24 டன் தயாரிக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்த அறிவிக்கை, பத்திரிக்கைளில் வெளிப்படையாக அறிவிக்காமல், ஆன்லைன் மூலம் வெளியிட்டு இருந்தது சேலம் ஆவின். 

 

Diwali Sweets Making Mistake in Aawin; The contractor is stuck!

 

சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்த பாலமணிகண்டன் என்பவர் இனிப்பு தயாரிப்புக்கான மாஸ்டர்கள், உதவியாளர்கள், பேக்கிங் பணிகளுக்கான ஆட்களை ஈடுபடுத்த கிலோவுக்கு 60 ரூபாய் விலைப்புள்ளி கோரியுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த ரெட்டி என்பவருக்குச் சொந்தமான, சென்னையில் இயங்கி வரும் ரமேஷ் மேன்பவர் கன்சல்டன்சி என்ற நிறுவனம், கிலோவுக்கு 41 ரூபாய் விலைப்புள்ளி குறிப்பிட்டு இருந்தது. 

 

குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரிய ரமேஷ் மேன்பவர் கன்சல்டன்சி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. மேலும், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தரப்பில் இருந்தும் இந்த நிறுவனத்திற்கே ஒப்பந்தம் வழங்கச் சொல்லி பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

 

Diwali Sweets Making Mistake in Aawin; The contractor is stuck!

 

ஒப்பந்தம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், ரமேஷ் மேன்பவர் கன்சல்டன்சி நிறுவனம், சேலம் ஆவினில் வந்து இறங்கிய போது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது தெரிய வந்தது. இனிப்பு தயாரிப்புக்கான பாத்திர பண்டங்கள் போதிய அளவில் ஆவினில் கையிருப்பு உள்ளதாக ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பு வரை சொல்லப்பட்டு உள்ளது. ஆனால் ஒப்பந்த நிறுவனம் நேரில் வந்து பார்த்தபோது, பாத்திர வசதி இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், எதிர்பார்த்த அளவில் கூலி ஆட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படவே, அந்நிறுவனம் மேலும் குழப்பம் அடைந்தது. 

 

இது தொடர்பாக ஆவின் வட்டாரத்தில் விசாரித்தோம், சேலம் ஆவினில், கடந்த 2022ம் ஆண்டு 50 டன் தீபாவளி இனிப்புகள் தயாரிக்கப்பட்டன என்றும், அதற்கு பயன்படுத்தப்பட்ட கடாய் உள்ளிட்ட அனைத்து வகை பாத்திரங்களும் ஆவின் வசம் உள்ளதாகவும் ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்திடம் ஆவின் தரப்பில் இருந்து சொல்லப்பட்டு உள்ளது. 

 

சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு 5 டன் குறைவாகத்தானே இனிப்புகள் தயாரிக்கப்படுகிறது என்பதால் ஆவின் வசம் உள்ள பாத்திரங்களே போதுமானது என ரமேஷ் மேன்பவர் கன்சல்டன்சியும் நினைத்து, வெறுங்கையுடன் வந்துவிட்டது. இங்கு வந்து பார்த்தபோதுதான் ஆவின் வசம் பாத்திரங்களே இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் வேறு வழியின்றி, ஒப்பந்தம் எடுத்த நிறுவனமே 2.75 லட்சம் ரூபாய் வாடகைக்கு கடாய், கரண்டிகள், ராட்சத அண்டாக்கள் உள்ளிட்ட பாத்திர பண்டங்களை ஏற்பாடு செய்து கொண்டுவந்தது. 

 

Diwali Sweets Making Mistake in Aawin; The contractor is stuck!

 

ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்திற்கு தீபாவளி இனிப்புகள் தயாரிக்கும் பணிகளுக்கு கூலி ஆள்களை அனுப்பியதில் போதிய அனுபவம் இல்லாததால், சாத்தியமில்லாத அளவுக்கு குறைந்த விலைப்புள்ளியை குறிப்பிட்டு இருந்தது. கிலோவுக்கு 41 ரூபாய் விலைப்புள்ளி குறிப்பிட்டதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு 10 சதவீத லாபம்கூட கிடைக்காது. இதே நிறுவனம் ஈரோடு ஆவினில் 12 டன் இனிப்புகள் தயாரிக்க கிலோவுக்கு 49 ரூபாய் விலைப்புள்ளி கொடுத்து இருக்கிறது. 

 

சேலம் ஆவினில் மிக மிகக் குறைந்த ஒப்பந்தப் புள்ளி குறிப்பிட்டுள்ளதால், எந்த வகையிலும் லாபம் கிடைக்காது என்பதை தாமதமாக தெரிந்து கொண்ட அந்த நிறுவனம், போதிய தொழிலாளர்களை அழைத்து வரவில்லை. நவ. 4ம் தேதி தான் சென்னை, கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து மாஸ்டர்கள், உதவியாளர்கள், பேக்கிங் தொழிலாளர்களை அழைத்து வந்து பணிகளை முழுவீச்சில் தொடங்கி உள்ளனர். உண்மையில், இந்த தொழிலாளர்கள் போதிய அளவில் இல்லை. சேலம் ஆவினில் உள்ள பெண் அதிகாரி ஒருவர்தான் ரமேஷ் கன்சல்டன்சி நிறுவனத்திடம் தவறான வாக்குறுதிகளை அளித்து குழப்பி விட்டுள்ளார் என்கிறார்கள். 

 

கடந்த காலங்களில் ஆவினில் தீபாவளி இனிப்பு தயாரிப்பில் ஒப்பந்தம் எடுத்திருந்த நிறுவன இயக்குநர்கள் சிலரிடம் கேட்டோம். ஆவினில் தீபாவளி இனிப்புகள் தயாரிக்கும்போது ஒரு கடாய்க்கு ஒரு மாஸ்டர், ஒரு உதவியாளர் வீதம் 40 அடுப்புகளுக்கு 80 வேலை ஆள்கள் தேவை. பேக்கிங் செய்வதற்கு மட்டும் தனியாக 120 தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். 

 

இனிப்புகளை பேக்கிங் செய்யும்போது அதற்கான பிளாஸ்டிக் அல்லது அட்டைப் பெட்டிகளில் அடியில் ஒரு பேப்பர் வைக்க வேண்டும். அதன்மீது இனிப்புகளை அடுக்குதல், எடை போடுதல், பெட்டிகளுக்கு மூடி போடுதல், ஆவின் ஸ்டிக்கர் ஒட்டுதல், பெட்டியைச் சுற்றிலும் செல்லுலோஸ் டேப் மூலம் சுற்றுதல், விலை மற்றும் காலாவதி தேதி குறித்த ஸ்டிக்கர் ஒட்டுதல், பெட்டிகளை அடுக்கி வைத்தல் மற்றும் சரக்கேற்றி விடுதல் வரை 10 படிநிலைகள் உள்ளன. இவைதான் பெரிய வேலை. 

 

ஒரு வாரத்தில் 45 டன் இனிப்புகள் தயாரிக்க குறைந்தபட்சம் 200 கூலி ஆட்கள் தேவை. நவ. 12ம் தேதி தீபாவளி என்றால், 9ம் தேதிக்கு முன்பாக அனைத்துப் பணிகளையும் முடித்துவிட வேண்டும். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் நிர்ணயித்த இலக்கை அடைவது சிரமம்தான் என்கிறார்கள் முன்னாள் ஒப்பந்ததாரர்கள். 

 

இதுகுறித்து சேலம் ஆவின் நிறுவன பொது மேலாளர் குமரேசனிடம் கேட்டபோது, “நான் இங்கு பொறுப்பு ஏற்பதற்கு முன்பே, தீபாவளி இனிப்புகள் தயாரிப்பதற்கான ஒப்பந்தப் பணிகள் முடிக்கப்பட்டு, தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. இருக்கும் ஆட்களை வைத்து இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் நல்லமுறையில் நடந்து வருகின்றன” என சுருக்கமாக முடித்துக் கொண்டார். 

 

தீபாவளியையொட்டி 3.70 கோடி ரூபாய்க்கு இனிப்பு பண்டங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இலக்கை எட்டுவது சவாலானது என்கிறது விவரம் அறிந்த வட்டாரங்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.