Skip to main content

சிந்துவெளி குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் கண்டுபிடிப்பு..!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

Discovery of pottery tiles with Indus Valley symbols

 

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை அருகே அரசுப் பள்ளி மாணவர்களின் வரலாற்றுத் தேடலில் சிந்துவெளி எழுத்து போன்ற குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கீழக்கரை அருகே வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் கு.முனியசாமியின் வழிகாட்டலில், தற்போது இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மு.விஷால், த.அருள்தாஸ் ஆகியோர் ஏழாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து வரலாற்றுத் தேடலில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் ஏற்கனவே கீழக்கரை அருகில் குலபதத்தில் சீனநாட்டுப் பானை ஓடுகள், மேலமடையில் சேதுபதி கால சூலக்கல் கல்வெட்டு, நத்தத்தில் சங்ககால ஊர் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

 

இந்நிலையில் உத்தரகோசமங்கை அருகில் மரியராயபுரம் என்ற ஊர் கண்மாய் பொட்டலில், ஆசிரியர் முனியசாமியுடன் இணைந்து கள மேற்பரப்பாய்வு செய்தபோது, 20 பானை ஓடுகளில் குறியீடுகள் இருந்ததைக் கண்டறிந்தனர். இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்கு தகவல் தந்துள்ளனர். 

 

இதுகுறித்து ஆய்வு செய்த வே.ராஜகுரு கூறியதாவது; “அப்பகுதியில் மீண்டும் கள ஆய்வு செய்தபோது, நுண் கற்காலக் கருவி, ரௌலட்டட் வகை ரோமானிய பானை ஓடு, கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக் கழிவுகள், வட்டச் சில்லுகள், சுடுமண் தாங்கிகள், துளையுள்ள பானை ஓடுகள், சிவப்புநிற சிறிய குவளை, சிறிய இரும்புக் கோடரி, சுடுமண் கெண்டியின் மூக்குப்பகுதிகள், மூடிகள், மான் கொம்பின் உடைந்த பகுதிகள், நீர் ஊற்றும் பகுதியுடைய பானையின் விளிம்புப் பகுதிகள், அலங்காரப் பானை ஓடு, சங்கு வளையல், பாசி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பொட்டல் பகுதி முழுவதும் பழைமையான பானை ஓடுகள் காணப்படுகின்றன. 

 

Discovery of pottery tiles with Indus Valley symbols

 

*பானை ஓட்டுக் குறியீடுகள்*

இங்கு கண்டுபிடிக்கப்பட்ட 20 குறியீடுகளில், கருப்பு சிவப்பு பானை ஓடுகளில் 15 குறியீடுகளும், சிவப்பு பானை ஓடுகளில் 5 குறியீடுகளும் உள்ளன. இதில் உள்ள 3 குறியீடுகள் சிந்துசமவெளிப் பகுதியில் கிடைத்த குறியீடுகள் எண் 125, 137, 365 போல அமைந்துள்ளன. இதில் எண் 125 குறியீடு ‘த’ எனும் தமிழி எழுத்து போலவும், எண் 137 குறியீடு பெருக்கல் குறியீடு போலவும் அமைந்துள்ளன.  எண் 365 குறியீடு மூன்று கோடுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் சூலம் போல உள்ளது. இக்குறியீடு கீழடியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு குறியீட்டில் இரண்டு ஏணிகளை எதிரெதிரே வைத்தது போல உள்ளது. 

 

பொதுவாக தொல்லியல் ஆய்வுகளில் பொருள் புரிய இயலாத வரிவடிவங்கள், கீறல்களைக் குறியீடுகளாகக் கருதுகிறார்கள். இவை தொல் எழுத்துகளாகவும் இருக்கலாம். இங்கு கிடைத்த பெரும்பாலான குறியீடுகள் கிண்ணம், குவளை, தட்டு உள்ளிட்ட மட்கலன்களின் தோள் பகுதிகளில் கீறப்பட்டவையாகவே உள்ளன.

 

*ரோமானிய பானை ஓடுகள்*

 

கீழக்கரையிலிருந்து தேரிருவேலி வழியாக மதுரை செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது. தேரிருவேலியில் தமிழ்நாடு தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் ரோமானிய பானை ஓடுகள், நுண்கற்காலக் கருவிகள், தமிழி எழுத்துப் பொறிப்புள்ள பானை ஓடுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேர்பாதையில் இங்கிருந்து தேரிருவேலி 4 கி.மீ. தூரத்தில்தான் உள்ளது. சமீபத்தில் ரோமானிய பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்ட கீழ்ச்சீத்தை இவ்வூருக்கு அருகிலேயே அமைந்துள்ளது. சங்ககாலத்தில் இவ்வூர் மக்களின் வாழ்விடப் பகுதியாக இருந்துள்ளதை அறியமுடிகிறது. தொல்லியல் துறை இப்பகுதியில் அகழாய்வு செய்து இப்பகுதியின் தொன்மையை வெளிக்கொணர வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.

Next Story

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Ban for tourists to go to Dhanushkodi

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (31.03.2024) மாலை 6 மணியளவில் தனுஷ்கோடி 3வது சட்டம் முதல் அரிச்சல்முனை வரை உள்ள தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் 6 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராட்சத அலைகளும் எழுந்துள்ளன.

இதன் காரணமாக தேவலயாம், சாலையோரங்களில் உள்ள கடைகளிலும் கடல் நீர் உட்புகுந்தன. கடல் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மதிப்பிலான மீன் பிடி வலைகள் மணலில் புதைந்து சேதமடைந்துள்ளன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் தற்போது சூறைக்காற்றுடன் 5 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுவதால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி கடலுக்குச் செல்ல தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.