Skip to main content

சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள பகுதி கண்டுபிடிப்பு! 

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

Discovery of the passage mentioned in the Sangam literature!

 

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மருங்கூர் மற்றும் ஓரியூரில் 2000 ஆண்டுகள் பழமையான சங்ககாலத்தைச் சேர்ந்த இரு ஊர்களின் தடயங்களை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இங்கு அகழாய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்கள், மருங்கூர்பட்டினம், ஊணூர் என்ற அருகருகே இருந்த இரு சங்ககால ஊர்களைக் குறிப்பிடுகின்றன. மருங்கூர்பட்டினம் கடற்கரையின் அருகில் கடற்கரைச்சோலை, உப்பங்கழி, நவமணிகள் விற்கும் கடைவீதிகளுடன் இருந்துள்ளது. ஊணூர் கடலின் ஓசை கேட்கும் தொலைவில், பழமையான பலவகை நெல் விளையும் செம்மண் பூமியாக, வழுதுணைத் தழும்பன் என்பவனின் கோட்டை மதில்களுடன் இருந்துள்ளது. 

 

அழகன்குளம் தான் இவ்வூர்கள் என சொல்லப்படுவது பொருத்தமானதாக இல்லை. இந்நிலையில் பெயர் ஒற்றுமை கொண்டு தொண்டி அருகே மருங்கூர் மற்றும் ஓரியூரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த வே.ராஜகுரு, வை.வெற்றிவேல், வே.சேர்மராஜ் ஆகியோர் கள மேற்பரப்பாய்வு செய்தனர். தீர்த்தாண்டதானம் கடற்கரையிலிருந்து மருங்கூர் 2 கி.மீ. தூரத்திலும், நேர்வழியில் ஓரியூர் கோட்டை 5 கி.மீ. தூரத்திலும் உள்ளன.

 

Discovery of the passage mentioned in the Sangam literature!

 

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது; மருங்கூர் மகாகணபதி ஆலயத்தின் மேற்கில் கண்மாய் அருகிலுள்ள திடலிலும், கண்மாய் உள்ளேயும் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பழமையான பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இங்கு கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், அறுத்த சங்குகள், பானை மற்றும் கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத் தாதுக்கள், வட்டச் சில்லுகள், அரைப்புக் கல், சீன நாட்டு போர்சலைன், செலடன் வகை பானை ஓடுகள், சுடுமண் உறைகிணறின் உடைந்த ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. 


மேலும் மருங்கூரின் கடற்கரைப் பகுதியான தீர்த்தாண்டதானம் சிவன் கோயிலின் ஏழு கல்வெட்டுகளில் நான்கு இங்கு தங்கி இருந்த வணிகக்குழுக்களையும், வணிகர்களையும் குறிப்பிடுகிறது. இவ்வூரில் அலையாத்திக் காடுகள் சூழ்ந்த பாம்பாற்றின் ஒரு உப்பங்கழியும் உள்ளது. மருங்கூரில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் தீர்த்தாண்டதானம் கல்வெட்டுகள் மூலம் இவ்வூர் சங்க காலம் முதல் கி.பி.15ஆம் நூற்றாண்டு வரை வணிக மையமாக இருந்ததை அறியலாம். எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் மருங்கூர்பட்டினம் இதுதான் என்பது உறுதியாகிறது. 


அதேபோல் ஓரியூர் கோட்டை மகாலிங்க சுவாமி கோயில் மற்றும் சேதுபதி அரண்மனை உள்ள வட்டவடிவமான சுமார் 20 ஏக்கர் பரப்பளவுள்ள பகுதியில் கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், வட்டச் சில்லுகள், சீனநாட்டு போர்சலைன், செலடன் வகை பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
 

இக்கோயிலின் தெற்கில் ஆறடி உயரத்தில் ஒரு செங்கல் கட்டுமானம் உள்ளது. இதில் உள்ள ஒரு முழு செங்கலின் நீளம் 23 செ.மீ., அகலம் 14 செ.மீ., உயரம் 4 செ.மீ. ஆகும். இது இடைக்கால செங்கல் அளவில் உள்ளதால் பிற்காலப் பாண்டியர்களால் கி.பி.13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையின் எச்சமாக இருக்கலாம். இங்கு சங்ககாலத்தில் மண்கோட்டையும், பாண்டியர் காலத்தில் செங்கல் கோட்டையும், சேதுபதிகள் காலத்தில் அரண்மனையும் பயன்பாட்டில் இருந்த தடயங்கள் உள்ளன. மேலும் இப்பகுதி தற்போதும் அதிக நெல்விளையும் இடமாகவும், செம்மண் நிலமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே ஓரியூர் கோட்டை மகாலிங்கசுவாமி கோயில் பகுதி தான் ஊணூர் என்பது உறுதியாகிறது. இவ்விரு ஊர்களிலும் அகழாய்வு செய்து அதன் சிறப்பை வெளிக்கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.

Next Story

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Ban for tourists to go to Dhanushkodi

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (31.03.2024) மாலை 6 மணியளவில் தனுஷ்கோடி 3வது சட்டம் முதல் அரிச்சல்முனை வரை உள்ள தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் 6 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராட்சத அலைகளும் எழுந்துள்ளன.

இதன் காரணமாக தேவலயாம், சாலையோரங்களில் உள்ள கடைகளிலும் கடல் நீர் உட்புகுந்தன. கடல் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மதிப்பிலான மீன் பிடி வலைகள் மணலில் புதைந்து சேதமடைந்துள்ளன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் தற்போது சூறைக்காற்றுடன் 5 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுவதால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி கடலுக்குச் செல்ல தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.