Skip to main content

"சாலை விபத்துக்களும் ஒரு திட்டமிட்ட படுகொலை தான்" இயக்குநர் லெனின் பாரதி ஆவேசம்!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

இளம் பத்திரிகையாளராக சிறப்பாக செயல்பட்டு வந்த ஷாலினி எதிர்பாராத விதமாக சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கவிதை எழுதுவதில் அதீத விருப்பம் கொண்டிருந்த அவரின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக அவரின் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து 'பாரதி யாழ்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட அவரின் ஊடக நண்பர்கள் முடிவு செய்தனர். இந்த நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய இயக்குநர் லெனின் பாரதி அதிகார வர்க்கத்தின் அலட்சியமே விபத்துக்களுக்கு காரணம் என்று கூறினார். அவரின் முழுமையான உரை வருமாறு,

 

 Director Lenin Bharathi angry speech about road acciden



தங்கை ஷாலினிக்கு சமூக அவலத்தின் மீதான தீராத கோபம் இருந்துள்ளது. அதனை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஒருவருடைய மரணம் என்பது அவருடைய உடற்பிரிவு மட்டும் தான். அவருடைய சிந்தனையும், எண்ணமும் எப்போதும் உயிர்ப்போடு இருக்கும். தங்கை ஷாலினி நூறு வருடம் உயிரோடு இருந்திருந்தாலும் இப்படிதான் சமூகத்துக்கு ஆதரவாக எழுதிக் கொண்டிருப்பார். இங்கு நிறைய பத்திரிக்கையாளர்கள் இருக்கிறீர்கள். அவர்கள் அனைவரும் இணைந்து ஷாலினியின் கனவை நிறைவேற்றி உள்ளீர்கள். ஆனால், இந்த சாலை விபத்துக்கு பின்னால் உள்ள இந்த அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தை யாரும் எடுத்து சொல்வதில்லை. ஒரு எப்.ஐ.ஆர்-ல் கூட விபத்து நடந்த சாலை போட்ட ஒப்பந்ததாரரை குற்றவாளியாக சேர்ப்பதில்லை. சாலையை சரியாக செப்பனிடாத, மேடு பள்ளமாக இருப்பதற்கு காரணமான அதிகாரிகளை பற்றி யாரும் எதுவும் எழுதுவதில்லை, பேசுவதில்லை.

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பர் ஒருவர் சாலை விபத்தில் இறந்தார். கிண்டி கத்திபாராவில் அப்போது பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டது. ஒரு குழியை மட்டும் சரியாக மூடாமல் அதிகாரிகள் சென்றுள்ளனர். அன்று மழை பெய்ததால், அந்த குழி முழுவதும் நீரால் மூடப்பட்டது. சிறுவயதில் இருந்து அந்த சாலையை பயன்படுத்தும் அவன், அந்த வழியாக செல்லும் போது நிலைத் தடுமாறி விழுந்துள்ளார். அந்த நேரத்தில் பின்னால் வந்த லாரி மோதி அவன் இறந்தான். இதற்கு யார் பொறுப்பேற்பார்கள், யார் இந்த குற்றத்துக்கு காரணம். அவர்களையும் நாம் இந்த சமூகத்துக்கு அடையாளம் காட்டி, தண்டிக்க வேண்டும். இங்கு இருக்கும் ஊடக நண்பர்கள் ஷாலினியின் பெயரால் சாலை பாதுகாப்பு இயக்கம் ஆரம்பித்து, அதனை ஊடகங்கள் வாயிலாக அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள். அதிகாரிகளை சட்டையை பிடித்து கேள்வி கேளுங்கள். இந்த குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவர்களை எல்லாம் வழக்கில் சம்பந்தப்படுத்துங்கள். சாலை விபத்துக்களும் ஒரு திட்டமிட்ட கொலைதான். அதனால் ஊடகவியலாளர்கள் இந்த விபத்துக்கு பின்னால் இருக்கும் அதிகார வர்க்க அரசியலுக்கு எதிராக குரல் கொடுங்கள்.



 

 

Next Story

மத்திய அமைச்சரின் கார் கதவை திறந்ததால் விபத்து; பா.ஜ.க தொண்டருக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
 Tragedy of BJP worker on Union minister's car door opened in accident

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

பெங்களூர் வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஷோபா, தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது, கார் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று (08-04-24) காலை வழக்கம்போல், தனது காரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார், கே.ஆர்.புரம்  பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று போது, ஷோபாவின் கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது, மத்திய அமைச்சரின் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மத்திய அமைச்சர் காரின் கதவி மீது மோதினார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் சாலையிம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, கீழே விழுந்த அவர் மீது ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விபத்தில் பலியானவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (55), என்பதும், பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டரான பிரகாஷ், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மத்திய அமைச்சர் ஷோபாவின் கார் கதவை திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

150 அடி தேர் கவிழ்ந்து விபத்து; வெளியான பரபரப்பு காட்சி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
150 feet chariot overturned accident; Exciting scene released

திருவிழாவில் பக்தர்களால் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்ட 150 அடி உயரம் கொண்ட தேர் சாய்ந்து விழும் பரபரப்பு வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹூஸ்கூர்  என்னும் கிராமத்தில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. சுமார் 150 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தேர் சாய்ந்து விழுந்தது. தேர் சாய்ந்து விழுவதை சுதாரித்துக்கொண்ட பக்தர்கள் உடனடியாக அங்கிருந்து ஓடியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இதில் ஏராளமான பக்தர்கள் காயத்துடன் மீட்கப்பட்டு அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 150 அடி தேர் சாய்ந்து விழுந்த இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.