Skip to main content

யதார்த்தமான சென்னை பேச்சு... பொய்யில்லாத சிரிப்பு... கம்யூனிச சிந்தனை... ஜனநாதன் போல ஒருவர் தமிழ் சினிமாவில் இல்லை!

Published on 14/03/2021 | Edited on 14/03/2021
s.p.jananaathan

 

இயக்குனர் ஜனநாதன் மறைந்துவிட்டார். இயக்குனராக இவர் கொடுத்திருப்பது நான்கு படங்கள் மட்டுமே. ஆனாலும் இவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு. இவரைப் போல ஒருவர் சமகாலத்தில் இல்லை. அத்தனை தனித்துவம் மிக்கவர் ஜனநாதன். எப்படி? ஏன்?

 

தனது நாற்பது வயதுக்கு மேல்தான் 'இயற்கை' படத்தை முதல் படமாகக் கொடுத்தார் ஜனநாதன். ஷ்யாம், அருண் விஜய், குட்டி ராதிகா ஆகிய நடிகர்களோடு ஒரு சிறிய படமாகத்தான் வெளியானது 'இயற்கை'. சீமா பிஸ்வாஸ் நடித்திருக்கிறார் என்ற செய்தி சற்றே கவனத்தை ஈர்த்தது. அப்போது உச்சத்தில் இருந்த இசையமைப்பாளர் வித்யா சாகரின் பாடல்கள் கூடுதல் கவனத்தை தந்தன. படம் வெளிவந்த பிறகு ஒரு அழகிய புதினம் போன்ற திரைக்கதை, மிகவும் புதிய கதைக்களம் என பாராட்டை பெற்றது. வெற்றிதான் என்றாலும் பெரிய சூப்பர் ஹிட் இல்லை. தேசிய விருதை பெற்றது. படத்தின் தெளிவும் தனித்தன்மையும் ஜனநாதனை ஒரு நம்பிக்கை தரும் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தன.

 

இவரது அடுத்த படமான 'ஈ', மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு 2006ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக விஜயகாந்த், அஜித், சிம்பு படங்களுடன் வெளியாகி வெற்றி பெற்றது. இவரது பொதுவுடைமை கருத்துகள், உலக அரசியல் பார்வை உள்ளிட்டவை முழுமையாக வெளிவந்த படமாக 'ஈ' அமைந்தது. சென்னையின் ஒரு மூலையில் உள்ள குப்பத்தை உலக அரசியல் எவ்வாறு பாதிக்கிறது, உலக வியாபாரம் எப்படி எளிய மக்களை சோதனை எலிகளாக்குகிறது என்று பசுபதி ஏற்ற 'நெல்லை மணி' பாத்திரத்தின் மூலம் விளக்கிய ஜனநாதனின் முக்கியத்துவத்தை இந்தப் படம் சொல்லியது. 80களில் பொதுவுடைமை பேசிய பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் 'ஹீரோ ஒரு தொழிலாளி, முதலாளி பொண்ணை லவ் பண்ணுவார்' என்ற அளவில் பேசப்பட்டு வந்த வர்க்க அரசியலை தெளிவான புரிதலோடும் வீச்சோடும் அதே நேரம் சுவாரசியமான விறுவிறு திரைக்கதையோடு சொன்னவர் ஜனநாதன்.

 

இவரது கருத்துகளை சுமந்து வந்த கலைக்கு உச்சமான வெற்றியை கொடுத்தது 'பேராண்மை' படம். ஜெயம் ரவி நடிப்பில் வந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு படத்துக்கும் பெரிய இடைவெளி விட்டே அடுத்த படத்தை இயக்கினார். அதற்கான காரணத்தையும் அவரே கூறியுள்ளார். "எனக்கு சினிமா வியாபாரம் அல்ல, அதன் மூலம் கோடி கோடியாக சம்பாரிக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு இல்லை. இந்த மிகப்பெரிய ஊடகத்தில் நான் நம்பும் அரசியலை பேச வேண்டும். அதுதான் என் நோக்கம்" என்றார். இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. இவர் சொன்ன கதை ரஜினிக்கும் பிடித்தது. ஆனால், அதன் பின்னர் வேறு சிலரிடம் ஆலோசித்த ரஜினி, இவரது படத்தில் பேசப்படும் அரசியல் குறித்த தயக்கத்தால் அந்தக் கதையை கைவிட்டார். தன் அரசியலும் கருத்தும் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை சென்றடையும் என்ற ஆவலில் தயக்கமில்லாமல் ரஜினிக்கு கதை சொன்னார் ஜனநாதன். நேரடி அரசியல் பேசும் படங்களாக இருந்தாலும் ஒரு போதும் வெறுப்பை விதைத்ததில்லை இவரது படங்கள். அதுதான் ஜனநாதனின் திரைத்தனித்தன்மை. இவரது இயக்கத்தில் வெளிவந்த கடைசி படமான 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை', எழுத்தில் வெளியான 'பூலோகம்' படங்களும் புதிய களங்களில் மக்கள் அரசியலை பேசின. இயக்கி, இறுதிக்கட்ட பணிகளில்  இருக்கும் 'லாபம்' படமும் அந்த அரசியலைத்தான் பேசும் என்பது உறுதி.

 

திரையை தாண்டி மிக இயல்பான மனிதராக, எந்த நிலையிலும் கொள்கை போற்றும் தோழராகவே இருந்தார் ஜனா. தன் திறமை குறித்தோ, தனது இயக்கம் குறித்தோ எந்தப் பெருமையும் கொள்ளாதவர் அவர். தனது படத்தின் பாடல்கள் குறித்து பேசும்போது, "என் படத்துல பாட்டு நல்லாருக்காதுன்னு நிறைய பேர் சொன்னாங்க. என்னடான்னு யோசிச்சுப் பார்த்தா நான் அதுல அதிகமா ஈடுபட்டிருக்கேன். நான் ஈடுபட்டா பாட்டு நல்லாருக்காது. முதல் படமான 'இயற்கை'ல வித்யாசாகர்- வைரமுத்து ன்னு பெரிய ஆளுங்க இருந்தாங்க. அவங்களே முடிவெடுத்தாங்க. அதுனால 'காதல் வந்தால்...' பாட்டு ரொம்ப நல்லா அமைஞ்சது" என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

 

"என்னை சில பேர் நல்லவர், நல்லவர்னு சொல்லுவாங்க  நான் ஸ்கூல் முடிச்சுட்டு எங்க வட்டத்துல ஒரு கட்சியோட இளைஞர் அணி செயலாளரா இருந்தேன். அப்போ பட்டாணி விப்பேன், சைட்ல சாராயமும் வித்தேன். என்னை இப்போ சில பேர் ரொம்ப நல்லவர், எளிமையானவர்னு சொல்றாங்க. அவுங்க இதையும் தெரிஞ்சுக்கணும்" என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் சொன்னவர் ஜனநாதன். நண்பர்கள், உதவி இயக்குனர்கள், சினிமா சூழ வாழ்ந்த இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது திரைப்படங்களாலும் இயல்பாலும் மிகுந்த தனித்துவம் வாய்ந்திருந்த ஜனநாதன் போல இன்னொருவர் தமிழ் சினிமாவில் இல்லை என்பது உண்மை. 
 

 

 

Next Story

‘காதலே காதலே...’ - ‘96’ பட ரசிகர்களுக்கு குட் நியூஸ்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
vijay sethupathi trisha 96 movie re released

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 96. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படமும் காதலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. 

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதன் பிறகு தற்போது வரை எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில் இப்படம் தற்போது ரீ ரிலீஸாகவுள்ளது. காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக அளவில் இப்படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இப்பட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  

Next Story

5 நிமிடம் நிற்காத கைதட்டு - சர்வதேச அரங்கில் ‘விடுதலை’க்கு பாராட்டு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
viduthalai get standing ovation in Rotterdam Film Festival

53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழா, கடந்த ஜனவரி 25 தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 4 வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு நாடுகளிலிருந்து திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. அந்த வகையில், பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில் ராம் இயக்கியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' தேர்வாகியது. இப்படம் இன்னும் வெளிவராத நிலையில் முதல் முறையாக அங்கு கடந்த 30ஆம் தேதி திரையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த விழாவின் லைம்லைட் பிரிவில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படமும் தேர்வாகியது. மேலும் விடுதலை இரண்டாம் பாகமும் இதில் ப்ரீமியர் செய்யப்பட தேர்வாகியது. அதன்படி ‘விடுதலை பாகம் 1’ நேற்று (31.02.2024) திரையிடப்பட்டது. படம் முடிந்தவுடன் திரையரங்கில் அமர்ந்திருந்த அனைவரும், எழுந்து நின்று 5 நிமிடம் கைதட்டி பாராட்டு தெரிவித்துள்ளனர். இதை தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்து, அது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளது. விடுதலை இரண்டாம் பாகம் வருகிற 3ஆம் தேதி திரையிடப்படவுள்ளது.

விடுதலை படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாகம் 1 கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.