Skip to main content

தேங்காய் சீனிவாசனான திண்டுக்கல் சீனிவாசன்

Published on 11/01/2021 | Edited on 11/01/2021

 

dindigul srinivasan


மீடியாக்களும் சோஷியல் மீடியாக்களும் எப்போது கன்ட்ன்ட் கிடைக்கும் என ஆலாய்ப் பறக்கின்றன. அவற்றுக்கு அரசியல்வாதிகள் அடிக்கடி தீனி போடுகிறார்கள். இதில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட எந்தக் கட்சிகளும் விதிவிலக்கல்ல.

 

பழமொழிகளை மாற்றிச் சொன்ன ஸ்டாலின், சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் என அதிர வைத்த எடப்பாடி பழனிசாமி, தெர்மோகோல் விஞ்ஞானி செல்லூர் ராஜூ, சோப்பு நுரை புகழ் கருப்பணன், ஆமைக்கறி சீமான் எனப் பலரும் கன்டன்ட் தந்தாலும் பஞ்சமே இல்லாமல் கன்டன்ட் தருபவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

 

நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ம.க.வுக்கு ஆப்பிள் சின்னத்தில் ஓட்டுப் போடும்படி அவர் சொன்னது அதிர்ச்சி கலந்த சிரிப்பை வாக்காளர்களிடம் ஏற்படுத்தியது. "மாங்காய், மாம்பழம் ஆகும், அமைச்சர் வாயால் அது ஆப்பிளாகிவிட்டதே' என சிரித்தனர். வேட்பாளர் ஜோதி முத்துவையும் சோலை முத்துவாக்கி விட்டார் அமைச்சர்.

 

எம்.ஜி.ஆரைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர்' என்றும், ‘ஜெயலலிதா கொள்ளையடித்து வைத்த பணத்தை சசிகலா எடுத்துக்கொண்டார்' என்றும் அ.தி.மு.க. மேடைகளிலேயே பேசி அதிர வைக்கவும் செய்தார்.

 

பிரதமர் நரேந்திர மோடி என்பதற்கு பதில், நரசிம்மராவ், மன்மோகன் சிங் என மாற்றி மாற்றி பெயர்களை உச்சரித்ததும் நகைப்புக்கிடமானது.

 

நத்தம் தொகுதிக்குட்பட்ட கணவாய்ப்பட்டி, முளையூர் பகுதியில் நடந்த மினி கிளினிக் திறப்பு விழாவில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "பொங்கல் பரிசாக 2500 ரூபாய் கொடுத்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டுகிறார். அவங்கப்பா கொடுத்திருந்தால் புத்தர் வாரிசு, இயேசு வாரிசு என்றிருப்பார். நாங்கள் கொடுத்தால், இயேசுவை சுட்ட கோட்சே வாரிசா?'' என்று பகீரடைய வைத்தார். "காந்தியைத்தானே கோட்சே சுட்டார். இயேசுவையுமா?” என்று சொந்தக் கட்சிக்காரர்களே புலம்பினர்.

 

அதையடுத்து, இன்னொரு மேடையில் பேசும்போது, "திருக்குறளை எழுதிய ஔவையார்'’ என உளறினார். மேடையில் இருந்தவர்கள் சிரிப்பிற்கிடையே, ‘திருவள்ளுவர்’ என மெலிதாக குரல் கொடுக்க, “இரண்டு பேரும்தான் எழுதினாங்க'' என்று மறுபடியும் சிரிக்க வைத்தார் அமைச்சர்.

 

பொங்கல் பரிசுத் தொகுப்பு விழா மேடையில் சமீபத்தில் பேசிய அமைச்சர், "பையில் இருக்கிற அரிசி, வெல்லம் எல்லாம் வீட்டில் உள்ள பெண்கள் கிட்ட போயிடும். பணத்தை ஆண்கள் எடுத்துக்கிட்டு அதை டாஸ்மாக்கில் செலவழிச்சிடுவாங்க. அது அரசாங்கத்துக்கே திரும்பி வந்திடும்'' என்று ஒரு போடு போட்டார்.

 

அமைச்சர் பேச்சைக் கேட்டு அதிகாரிகளும் ஆளுங்கட்சியினரும் அதிர்ந்தனர். "ஒவ்வொரு மீட்டிங்லேயும் மீம்ஸ்க்கு கன்டன்ட் தருகிறோரே, இவர் திண்டுக்கல் சீனிவாசனா? காமெடி நடிகர் தேங்காய் சீனிவாசனா?'' என்றபடி கலைந்தனர்.

- கீரன், சக்தி

 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.