Skip to main content

ஸ்டாலின் குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம்... போட்டுத் தாக்கிய திண்டுக்கல் லியோனி!

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

jk

 

சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி நடப்பு அரசியல் குறித்தும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் பேசினார். அவரின் பேச்சு வருமாறு, "இன்றைக்கு தகுதியே இல்லாத பலபேர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர்களுக்குத் தற்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை. அன்றைக்குப் பார்க்கிறேன், நான்கு அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அமைச்சர் தங்கமணி, ஜெயக்குமார், சண்முகம், மதுசூதனன் ஆகிய நால்வரும் செய்தியாளர்களிடம் பேச திணருகிறார்கள். ‘நீ பேசு, நீ பேசு’ என்று ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். ‘அய்யா நீ பேசுங்க, அப்பா நீ பேசு’ என்று காமெடி செய்துகொண்டிருக்கிறார்கள். என்ன காரணம் இவர்கள் இப்படி செய்துக் கொண்டிருக்கிறார்கள். முந்திரிக் கொட்டை போல் பேசிக்கொண்டிருந்தாரே நம்முடைய ஜெயக்குமார், இப்போது ஏன் அடுத்தவரைப் பேச சொல்கிறார். நான்கு மைக்குகளைப் பார்த்தாலே பலமணி நேரம் பக்கம் பக்கமாக பேசும் ஜெயக்குமார், அடுத்தவர்களை தற்போது கைக்காட்ட என்ன காரணம். ஏன் அன்றைக்கு வார்த்தை வரவில்லை. கிடுகிடு என்று அவர்கள் அனைவருக்கும் நடுக்கம். வார்த்தை வராமல் அடுத்தவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது கூட சட்டத்துறை அமைச்சர் ஒரு மயக்கத்தில் பேசிவிட்டார். என்னப் பேசினார் தெரியுமா? ஊரை அடித்து உலையில் போட்ட சசிகலாவுக்கு எங்கள் கட்சியில் இடமில்லை என்பதை மிகத் தெளிவாகச் சொன்னார். 

 

உடனே பத்திரிக்கையாளர் அவர்களிடம், சசிகலா நீங்கள் சொல்வது போல ஊரை அடித்து உலையில் போட்டபோது அவர்கள் கூட ஜெயலலிதா தானே இருந்தார்கள் என்று எதிர் கேள்வி வைத்தார்கள். இந்தக் கேள்விக்கு சரியான பதில் சொல்ல முடியாமல் அவர்கள் அனைவரும் துண்டை காணோம் துணிய காணோம் என்று தெறித்து ஓடுகிறார்கள். ஒருவரும் கேள்வியை எதிர்கொள்ளவே பயப்படுகிறார்கள், திணருகிறார்கள். இதெல்லாம் ஒரு பிழைப்பு? இவர்கெல்லாம் அமைச்சர்களாக நமக்கு சேவை செய்து வருகிறார்கள். தமிழகத்தின் காலக்கொடுமை அவர்கள் எல்லாம் அமைச்சர்களாக நமக்கு வாய்த்துள்ளார்கள். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் தொடர்ந்து கத்திக்கொண்டே இருக்கிறார். ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழகம் முழுவதும் தொடர்ந்து பிரச்சாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனி ஆளாக பேசிக்கொண்டிருக்கிறார். எங்களைப் பார்த்து துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியுமா என்று கேட்கிறார். குழாய் சண்டை போட துண்டு சீட்டு தேவையில்லை. பைத்தியக்காரன் ரோட்டில் பேசிக்கொண்டு போகிறானே, அவன் என்ன துண்டு சீட்டை வைத்துக்கொண்டா பேசுகிறான். குடிகாரர்களுக்குத் துண்டு சீட்டு தேவையில்லை. ஆனால் மக்களுக்கு சேவை செய்கிற ஒரு பேராசிரியர் துண்டு சீட்டு வைத்துக்கொண்டுதான் பேசுவார். 

 

திட்டமிடுதல் என்பது ஒரு தலைவனுக்கு மிக முக்கியமான பண்பு. அதைத்தான் தலைவர் தொடர்ந்து செய்து வருகிறார். மக்கள் பணியாற்ற நினைப்பவர்கள், அவர்களுக்குக் கூற நினைப்பதை சரியாகச் சொல்ல துண்டு சீட்டு வைத்துதான் பேசுவார்கள். நான் 35 ஆண்டுகாலமாக பட்டிமன்றம் பேசுகிறேன். துண்டு சீட்டு வைத்துக்கொண்டுதான் பேசுகிறேன். எதற்காக என்றால், சரியான முறையில் நாம் நினைப்பதை மக்களுக்குப் புரிய வைப்பதற்காகதான். அதை போலத்தான் தலைவரும் மக்களுக்குச் சரியான முறையில் கருத்துகள் சொல்ல வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டமிடலை செய்கிறார். இன்றைக்கு மெரினாவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கின்ற என் தலைவர் தலைஞர், கடைசி மேடை வரை குறிப்பெடுத்துக்கொண்டுதான் மக்கள் முன் உரையாற்றினார். ஏன் அவருக்குக் குறிப்பில்லாமல் பேசத் தெரியாதா? இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேட்கிறார், துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியுமா என்று. அவர் பேசுவதற்கு துண்டு சீட்டு எதுவும் தேவையில்லை. ஏனென்றால் இன்றைக்கு அவர் தரம் தாழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். நீயெல்லாம் ஒரு ஆம்பளையா என்று முதல்வர் பேசுகிறார். இப்படி எல்லாம் ஒரு முதல்வர் பேசுவார்களா? இந்த வார்த்தை ஒருவருக்கு வருகிறது என்றால் அவருக்கு மேட்டர் தீர்ந்து போச்சு என்று அர்த்தம். அவரிடம் பேசுவதற்கு எதுவுமில்லை. அதனால்தான் இத்தகைய வார்த்தையைப் பயன்படுத்துகிறார்" என்றார்.

 

Next Story

“மனித சமுதாயத்திற்கே பெரும் இழப்பு” - லியோனி வருத்தம்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
vijayakanth passes away “A great loss to the human community” – Leonie

திரைப்பட நடிகரும், தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், சட்டமன்ற முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான விஜயகாந்த், மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். இன்று (28.12.23) காலை சிகிச்சை பலனின்றி காலமானார். விஜயகாந்த் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி நம்மிடம் விஜயகாந்த் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது; “விஜயகாந்த் ஒரு அரசியல் தலைவர், திரைப்பட நடிகர் என்பதையெல்லாம் மீறி நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர். அவரின் மனிதத் தன்மையின் காரணமாகவே, இன்று அரசியல் கட்சியையெல்லாம் தாண்டி அனைவரும் அவரின் மரணத்திற்கு வேதனையுடன் இருக்கிறோம். தன் வீட்டிற்கு தேடி வருபவர்கள் தன் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களா இல்லையா என்பதையெல்லாம் பார்க்காமல், அவர்கள் சாப்பிட்டார்களா, அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களின் பிரச்சனை என்ன என்பதை கவனிப்பவர். அவ்வளவு இரக்க குணம் கொண்டவர்.  

vijayakanth passes away “A great loss to the human community” – Leonie

2011ம் ஆண்டு தேர்தலின் போது நான் கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி எனும் ஊரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தேன். அப்பொழுது நான் பிரச்சாரம் செய்துகொண்டு இருந்த இடத்திற்கு அருகேயே, அவரும் பிரச்சாரத்திற்கு தயாராக வந்துவிட்டார். என் பிரச்சாரத்தின் அருகே தே.மு.தி.க.வின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துவிட்டனர். அப்பொழுது விஜயகாந்த், ‘லியோனி பேசி முடிக்கும் வரை யாரும், எந்த தொந்தரவும் செய்யக் கூடாது. அவர் பேசி முடிக்கும் வரை நான் காத்திருக்கிறேன்’ என்று அவரின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். பிறகு நான் பேசி முடித்துவிட்டு செல்லும் வரை காத்திருந்து பிறகு அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த நிகழ்வின் போது இருவரும் எங்கள் பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டோம். அப்பொழுது, அவர் எனக்கு கை குலுக்கிவிட்டு, ‘வெற்றி பெற வாழ்த்துகள்’ என்று தெரிவித்துவிட்டு சென்றார். இப்படியான ஒரு நல்ல எண்ணம் கொண்ட மனிதர் விஜயகாந்த். எனவே, அவரின் இழப்பு என்பது அரசியலுக்கும், திரைத்துறைக்கும் மட்டுமின்றி மனித சமுதாயத்திற்கே பெரும் இழப்பு” என்று தெரிவித்தார்.

Next Story

“முதல்வர் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவுள்ளார்” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

 CM stalin will make Tamil Nadu the premier state in India says Minister Sakkarapani

 

திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டத்தில் உலக முதலீட்டாளர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் திண்டுக்கல் எம்.பிக்கள் வேலுச்சாமி, ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இதில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் தொழில்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக வரவேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்சி பொறுப்பேற்று கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இந்தியாவில் தொழில் துறையில் 14வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் முதலிடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தொழில் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

 

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான இடவசதி, தண்ணீர் வசதி, தொழிலாளர் தேவை, சாலை வசதி, சட்ட ஒழுங்கு, மின்சார வசதி எனப் பல்வேறு உதவிகளை வழங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார். அதுபோல் தமிழ்நாடு முதலமைச்சர்  துபாய், அபுதாபி, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்கிட முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்கள். அதனடிப்படையில், உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8  ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

 

 CM stalin will make Tamil Nadu the premier state in India says Minister Sakkarapani

 

அதுபோல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 13 இலட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் உயரும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வருவார்கள் என்பதற்காக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி, தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வருகிறது. 

 

தமிழகத்தில் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நிலையான நீடித்த வளர்ச்சியை நோக்கமாக கொண்டு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டின் வாயிலாக குறு, சிறு தொழில் முதலீடு ரூ.60,000 கோடி இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, அனுமதிகள், மானியங்கள், கடனுதவிகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப படித்த இளைஞர்களுக்கு புதிய தொழில் பயிற்சிகளை அளித்து, அவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தாட்கோ மூலமாக தொழில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. புதிய தொழில்கள் தொடங்கப்படும் மாவட்டங்களில், அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில், 143 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு மானியமாக ரூ.14.23 கோடியும், மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டத்தில் 318 உற்பத்தி, சேவை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு மானியமாக ரூ.7.49 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 23 நிறுவனங்கள் சார்பில் ரூ.331.33 கோடி அளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

5 பயனாளிகளுக்கு ரூ.59.81 இலட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது, இதில் ரூ.19.45 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியாக உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்கிட தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும். இந்த வாய்ப்புகளை தொழில் முனைவோர்கள், தொழில் முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.