Skip to main content

அண்ணே தினகரன் சரிப்பட்டு வரமாட்டார், நாமெல்லாம் தி.மு.க.வுக்குப் போயிரலாம்!

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

மே 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதிகளான திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர்களை, எம்.பி. தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் போதே அறிவித்தார் மு.க.ஸ்டாலின். சூலூரில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 22-ஆம் தேதி அ.ம.மு.க.வின் வேட்பாளர்களை அறிவித்தார் தினகரன். ஆனால் ஆளும்கட்சியான அ.தி.மு.க.விலோ நான்கு தொகுதிகளுக்கும் விருப்ப மனு, நேர்காணல் என சீன்கள் ஓடிக்கொண்டிருந்தன. முதல்வர் பழனிச்சாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அமர்ந்து, யாரை வேட்பாளராக அறிவிப்பது என கட்சி நிர்வாகிகளிடம் சீரியசாக டிஸ்கஸ் பண்ணினார்கள். 

 

ops eps



இந்த சீரியஸ் டிஸ்கஸனுக்குப் பின்னணியில் செம சீரியஸான, காரசாரமான மேட்டர் ஒன்று நடந்துள்ளது. இந்த மேட்டரின் பின்னணியில் இருந்தவர் மாஜி மந்திரியும் முன்னாள் மேயருமான செ.ம.வேலுச்சாமிதான். ஜெயலலிதா ஆட்சியின் போது, கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் வீட்டுவசதித்துறை, தொழில் மற்றும் வணிகவரித்துறை, கூட்டுறவுத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் இருந்தவர் வேலுச்சாமி. கோவை மாநகராட்சியின் மேயராகவும் கோலோச்சியவர் வேலுச்சாமி. 
 

velumani



ஜெ. மறைவுக்குப் பின் சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ். பக்கம் உறுதியாக நின்றார்கள் செ.ம.வேலுச்சாமியும் அவரது ஆதரவாளர்களும். ஜெ.வின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வேலுச்சாமியும் குரல் கொடுத்தார். பிறகு, இ.பி.எஸ்.சுடன் கைகோர்த்துக் கொண்டு ஓ.பி.எஸ். துணை முதல்வரானதும் தரமான, சிறப்பான எதிர்காலம் இருக்கும் என நம்பினார் வேலுச்சாமி.
 

velusamy



கோவை எம்.பி. தொகுதிக்கு சீட் கேட்டுப் பார்த்தார், கிடைக்கவில்லை. பா.ஜ.கவுக்குப் போய்விட்டது. வேலுச்சாமிக்கு சீட் கிடைக்கவிடாமல் பா.ஜ.க.வுக்கு சீட் கிடைப்பதை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டவர் அமைச்சர் வேலுமணி. சரி கொஞ்சம் காத்திருப்போம் என வேலுச்சாமி நினைத்த போதுதான் சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மறைந்தார். வேலுச்சாமியின் சொந்த ஊர் சூலூர் என்பதால், அவருக்குத்தான் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர் செ.ம.வின் ஆதரவாளர்கள். 

 

stalin



சென்னைக்கு போய் இ.பி.எஸ்.சிடமும் ஓ.பி.எஸ்.சிடமும் சூலூர் தொகுதிக்கு சீட் கேட்டார் வேலுச்சாமி. அதற்கும் பிரேக் போட்டார் அமைச்சர் வேலுமணி. இனிமேல் சீட் கிடைக்காது என நிச்சயமாக தெரிந்ததும் நேரடியாக இ.பி.எஸ்.சிடம் போனார். “இந்தக் கட்சிக்காக எவ்வளவோ பாடுபட்டிருக்கேன், ஜெயிலுக்குப் போயிருக்கேன். கட்சியில படிப்படியா முன்னுக்கு வந்தவன். எனக்கு சீட் கொடுக்கக் கூடாதுன்னு யார் சொன்னாலும் கேட்பீங்களா? என்னை கேவலப்படுத்தணும்னு முடிவு பண்ணிட்டீங்க. நான் இப்ப கிளம்பிப் போறேன். நான் போனதும் என்னை சமாதானப்படுத்தணும்னு நினைச்சு, சூலூர் வேட்பாளரா என்னை அறிவிச்சீங்கன்னா, நான் வேட்பாளர் இல்லைன்னு பத்திரிகைகாரங்களை கூப்பிட்டு சொல்லிருவேன். அப்புறம் நீங்க ரெண்டு பேரும் அசிங்கப்பட வேண்டியிருக்கும்''’என சரவெடியாய் வெடித்ததும், அருகில் இருந்த ஓ.பி.எஸ். கிறுகிறுத்துப் போனார். கோவை வட்டாரத்தில் தன்னை மீறி மீண்டும் ஒரு அ.தி.மு.க. புள்ளி உருவாகக்கூடாது என நினைக்கும் வேலுமணிக்கு வெளிப்படுத்த முடியாத உற்சாக மனநிலை. 

செ.ம.வேலுச்சாமியிடம் அவரது ஆதரவாளர்கள், "அண்ணே தினகரன் சரிப்பட்டு வரமாட்டார், அதனால நாமெல்லாம் தி.மு.க.வுக்குப் போயிரலாம்'' வற்புறுத்தி வருகிறார்கள். இது உண்மையா என தெரிந்துகொள்ள செ.ம.வை நாம் தொடர்புகொண்டபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப்.  செ.ம.வேலுச்சாமி அல்லது மாதப்பூர் பாலு ஆகிய இருவரில் ஒருவருக்கு சீட் கிடைக்கும் என அ.தி.மு.க.வினர் நினைத்துக்கொண்டிருந்தபோதுதான், யாருமே எதிர்பார்க்காத வி.பி.கந்தசாமியை களமிறக்கியிருக்கிறார்கள் இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும். 

பொள்ளாச்சி தொகுதியின் எம்.பி.யாக இருந்த சுகுமார் அ.ம.மு.க.வின் வேட்பாளர். இந்த சுகுமார்தான் நாடாளுமன்றத்தில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சாதகமாக கேள்வி கேட்க, லஞ்சம் வாங்கும் போது வீடியோவில் சிக்கியவர்.  சூலூர் களம் சூடு பறக்கிறது.
 

Next Story

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்? - இன்று வெளியாகும் அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
By-elections to inform?-Notices released today

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சாந்து  ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்டனர். அதேநேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து தேர்தல் தேதியை முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று  பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதியோடு சில மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒடிசா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும், தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வெளி மாநிலங்களில் இருந்து ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“அண்ட புளுகு, ஆகாச புளுகு என்பதைப்போல் இது மோடியின் புளுகு” - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Chief Minister M.K.Stal's criticized prime minister modi

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13-03-24) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். அதன் பிறகு, பொள்ளாச்சி பகுதிக்கு சென்ற அவர், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 57,325 பேருக்கு ரூ.1,273 கோடி செலவில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ரூ.560 கோடி மதிப்பில் நிறைவுற்றுள்ள திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அதே போல், ரூ.490 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். 

அதன் பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோவை மாவட்டத்துக்கு 13 புதிய அறிவிப்புகளை இப்போது வெளியிடுகிறேன். அதில், தென்னை வேர்வாடல் நோய் பாதிப்பை நீக்க ரூ.14 கோடி நிதி வழங்கப்படும். தென்னை விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்யப்படும். மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும். காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடியில் சாலை அமைத்து தரப்படும். பெரியநாயக்கன்பாளையம் உட்பட 4 ஊராட்சி ஒன்றியத்தில் பாலங்கள் கட்டித் தரப்படும். 

ரூ.2.8 கோடி செலவில் 3 லட்சம் தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். அதே போல், ஈரோடு மாவட்டத்துக்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். ஈரோட்டில் ரூ.15 கோடி செலவில் வ.உ.சி பூங்கா தரம் உயர்த்தப்படும். 8 சமூக நலக்கூடங்கள் அமைக்கப்படும். மஞ்சள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் இருப்பு வைத்து வியாபாரம் செய்ய குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அருங்காட்சியத்தில் வைக்கப்படும். 

வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா?. அதிமுக ஆட்சியில் அதிகாரமிக்க பதவியில் இருந்த அமைச்சர்கள், மேற்கு மண்டலத்துக்கு செய்தது என்ன?. மேற்கு மண்டலம் எங்கள் கோட்டை என்று கூறும் அதிமுக மக்களுக்கு என்ன செய்தது?. பெற்றோரை பதைபதைக்க வைத்த பொள்ளாச்சி கொடுமைதான் அதிமுக ஆட்சியில் நடந்தது. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரங்களை மறக்க முடியுமா?. கஞ்சா, குட்கா, மாமூல் பட்டியலில் அமைச்சரும், டி.ஜி.பியும் இருந்தது யார் ஆட்சியில்?. தமிழ்நாட்டை பதற வைத்த பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது அதிமுக. கோடநாடு பங்களாவில் கொலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது அனைத்தும் அதிமுக ஆட்சியில் தான். 

அதிமுக, பா.ஜ.க கள்ளக்கூட்டணிக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க திமுக கூட்டணி உள்ளது. நாட்டுமக்களுக்கு எதையுமே செய்யாத பிரதமர், மோடியின் உத்தரவாதம் என பக்கம் பக்கமாக விளம்பரம் செய்கிறார். தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர்கள் என்று பட்டியல் போட்டு பிரதமரிடம் மக்கள் கேட்க வேண்டும். பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்போதல்லாம், மத்திய அரசு கொண்டுவரும் திட்டத்தை திமுக எதிர்க்கிறது என்று கூறுகிறார். எந்த திட்டத்துக்கு நான் தடையாக இருந்தேன் என்று பிரதமர் சொல்ல முடியுமா? ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு தடுப்பதாக பிரதமர் மோடி கூறியது அப்பட்டமான பொய். அண்ட புளுகு ஆகாச புளுகு என்பதைபோல் இது மோடியின் புளுகு. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட நாங்கள் தடுத்தோமா? அல்லது ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தடுத்தார்களா? பா.ஜ.க.வின் பொய்யும் கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது” என்று கூறினார்.