Skip to main content

கமல், சீமானால் தினகரனுக்கு வாக்கு பறிபோனதா?

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

எதிர்பார்த்த மாதிரியே தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது தி.மு.க. கூட்டணி. ஆனால் எதிர்பாராத அளவுக்கு சிலபல தொகுதிகளில் தினகரனின் அ.ம.மு.க.வை பின்னுக்குத் தள்ளி கமலின் மக்கள் நீதி மய்யமும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் வாக்குகள் பெற்றள்ளன. 2009-ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்து அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆனார் சீமான். இவர் கட்சி ஆரம்பித்த அந்த ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்தார். 2011-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' எனச் சொல்லி வெளிப்படையாகவே அ.தி.மு.க.வை ஆதரித்தார். 

 

seeman



2016 சட்டமன்றத் தேர்த லில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது நாம் தமிழர் கட்சி. அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினாலும் கணிசமான வாக்குகளை வாங்கியது. இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு, நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப் பட்டது. இந்தத் தேர்தலிலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி யைவிட தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியைத்தான் அதிகம் விமர்சித்தார் சீமான். 

 

kamal



2018 பிப்ரவரி 21-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார் நடிகர் கமல். கட்சி ஆரம்பித்ததும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார் கமல். கட்சி ஆரம்பித்து பதினைந்து மாதங்களில் வந்த நாடாளு மன்றத் தேர்தலில் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது மக்கள் நீதி மய்யம்.  40 எம்.பி. தொகுதிகளிலும் 22 எம்.எல்.ஏ. தொகுதி களிலும் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்தார் கமல். இரண்டு கூட்டணிகளையுமே சரமாரியாக விமர்சித்த கமல், "சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே' என அரவக்குறிச்சியில் அதிரடி கிளப்பினார். 

 

ttv



பிரச்சார மேடைகளில் உணர்ச்சிப் பொறி பறக்க சீமான் பேசினார் என்றால், ஆரவாரம் இல்லாமல் அமைதியாக பேசினார் கமல். இந்த இருவரின் பிரச்சார பாணிக்கும் மக்களிடம் கிடைத்த வரவேற்பின் அளவுதான் அக்கட்சிகள் பெற்ற வாக்குகள். கோவை எம்.பி. தொகுதி யில் ம.நீ.ம.வின் வேட்பாளர் மகேந்திரன் 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் வாங்கி மூன்றாம் இடத்திலும், பொள் ளாச்சி ம.நீ.ம.வின் வேட்பாளர் மூகாம்பிகை மூன்றாம் இடத்திலும், வடசென்னை வேட்பாளர் மூன்றாம் இடத்திலும், ஈரோடு, நாகை, கடலூர் தொகுதிகளின் வேட் பாளர்கள் நான்காம் இடத்திற்கும் வந்து  ஆச்சர்யப்படுத்தி னார்கள். பல சட்டமன்றத் தொகுதிகளில் அ.ம.மு.க. வேட் பாளர்களை பின்னுக்குத் தள்ளி னார்கள் மக்கள் நீதி மய்யம் வேட் பாளர்கள். இதேபோல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் தஞ்சை, ஈரோடு, நாகை, வடசென்னை, கடலூர், மயிலாடுதுறை, கோவை  உட்பட 6 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு வந்தனர். இதே போல் பாதிக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தனக்கான வாக்கு களை வாங்கி கவனம் ஈர்த்துள்ளது நாம் தமிழர் கட்சி. 

நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் நாங்கள் வாங்கியிருக்கும் வாக்குகள், எங்கள் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நிச்சயம் கைகொடுக்கும். எங்களின் வாக்கு வங்கி, பல கட்சிகளை யோசிக்க வைக்கும். அடுத்து வரும் தேர்தலில் எங்கள் தலைவர் கமலின் வியூகம் இன்னும் சிறப்பாக இருக்கும், வெற்றியும் எங்கள் வசப்படும்''’என்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் கோமகன்.  இந்த இரு கட்சிகளும் பெற்ற வாக்குகள், டெபாசிட்டை மீட்பதற்குப் பயன்படவில்லை. பெரிய கட்சிகளுக்கு சவாலை ஏற்படுத்த இன்னும் பலம் தேவை. எனினும் கமல், சீமான் என்ற சினிமா பிரபலங்கள் இனிவரும் தேர்தல் களத்தில் விறு விறுப்பையும் சுறுசுறுப்பையும் கூடுதலாக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. 
 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.