Skip to main content

தினகரனுடனேயே சேர்ந்து அ.தி.மு.க.வை ஒற்றுமைப்படுத்தலாம் எனக் கூறிய ஓபிஎஸ்!

Published on 01/07/2019 | Edited on 01/07/2019

ஒருவழியாக,  அ.ம.மு.க.வை விட்டு தங்க.தமிழ்ச் செல்வனை நீக்கிவிட்டேன். இனி அவர் பற்றி பேச ஒன்றுமில்லை'' என அறிவித்துள்ளார் டி.டி.வி. தினகரன். கடந்த ஒரு வாரமாக மீடியாக்களில் பெரிய அளவில் விவாதத்தை கிளப்பிய விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது. ஆனால் "டி.டி.வி. தினகரனின் இந்த அறிவிப்போடு தங்க.தமிழ்ச்செல்வன் விவகாரம் முடிந்துவிடாது' என்கிறார்கள் அ.ம.மு.க. மற்றும் அ.தி. மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

 

ops



தங்க.தமிழ்ச்செல்வன் டி.டி.வி.தினகரனை அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளில் திட்டும் ஆடியோ ஒன்று மீடியாக்களில் வெளியானது. தினகரனின் செயலாளர்களில் ஒருவரான தொழிற்சங்கத்தை சேர்ந்த செல்ல பாண்டியன் என்பவரிடம் பேசிய பேச்சு என சொல்லப்பட்ட அந்த ஆடியோவை வெளியிட்டது அ.ம.மு.க.வினர்தான். "ஏன் இந்த கோபம்' என அ.ம.மு.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரான வெற்றி வேலை கேட்டோம். "தங்க .தமிழ்ச்செல்வன் எனக்கும் நண்பராக இருந்தவர்தான். அவர் ஜெ. காலத்திலேயே தேனி மா.செ. வானவர். ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் என்பதால் டி.டி.வி. உள்பட நாங்கள் அவருக்கு மதிப்பு கொடுத்தோம். யாரையும் எகத்தாளமாக பேசும் இயல்பு உடையவர் தங்க. தமிழ்ச்செல்வன். தி.மு.க.வுடன் சேர்ந்து எடப்பாடி ஆட்சியை கவிழ்ப்பேன் என்றார். 18 எம்.எல். ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியை பற்றி அவதூறாக பேசினார். "இப்படி வாய்க்கு வந்ததை மீடியாக்களில் பேசாதீர்கள்' என எங்கள் பொதுச்செயலாளர் எச்சரித்தார். உடனே அவரை அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளில் பேசுகிறார். அதனால்தான் அவரது தரத்தை எடுத்துச் சொல்ல அவர் பேசிய ஆடியோவை வெளியிட்டோம்'' என்றார்.

 

admk



இதுபற்றி நம்மிடம் பேசிய தங்க.தமிழ்ச்செல்வன், "எனக்கு நேர்ந்த அவமானம் பற்றி உணர்ச்சிவசப்பட்டு நான் பேசு வதை வெளியிடுவது என்ன வகையிலான தலைமைப் பண்பு என தெரியவில்லை. ஓ.பி.எஸ்., விஜயபாஸ்கர், பொன்னார் என யார் இவர்களிடம் பேசினாலும் அதை பதிவு செய்து வெளியிடு கிறார்கள்'' என வெடித்தார்.


உண்மையான பிரச்சினை என்ன என்று அ.ம.மு.க. வட்டாரங்களில் கேட்டோம். "தங்க.தமிழ்ச்செல்வனை அனுமானிக்க முடியாது. திடீரென தினகரனின் தீவிர விசுவாசியாக மாறுவார். திடீரென தினகரனை திட்டுவார். கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் தேனி எம்.பி. தொகுதியில் ஓ.பி.எஸ். மகனை தோற்கடிப்பேன் என களமிறங்கினார். அதற்கு 25 கோடி ரூபாய் வேண்டுமென கோரிக்கை வைத் தார். ஆனால், இளவரசி மகன் விவேக் அவரிடம் தேர்தல் செலவுக்காக கொடுத்த 25 கோடி ரூபாயை செலவு செய்யவில்லை. தேர்தல் முடிந்ததும் செந்தில் பாலாஜி மூலம் தி.மு.க.வுக்கு வலைவிரித்தார். அவர்கள் ஏற்கவில்லை. உடனே அ.தி.மு.க.விடம் பேரம் பேசினார். ராஜ்யசபா எம்.பி. சீட்டுடன் வெயிட்டான விஷயங்களையும் தங்கமணி, வேலுமணி மூலம் எடப்பாடியிடம் பேசினார். அது செட் ஆகவில்லை. அதற்குப் பிறகு வாரிய தலைவர் பதவி என அவர் நடத்திய பேரம் எடப்பாடியிடம் படிந்தது. ஓ.பி.எஸ்.சிடம் செல்ல வில்லை. "தங்க.தமிழ்ச்செல்வனை சேர்ப்பதைவிட, தினகரனுடனேயே சேர்ந்து அ.தி.மு.க.வை ஒற்றுமைப்படுத்தலாம்' என தன்னை சந்தித்த ஜெயக்குமாரிடம் ஓ.பி.எஸ். கூறிவிட்டார். அதனால் திரிசங்கு சொர்க்கத்தில் தங்க.தமிழ்ச்செல்வன் தொங்கிக் கொண்டு இருக்கிறார். அந்த கோபத்தில்தான் தினகரனை திட்டுகிறார்'' என்கிறார்கள் கூலாக.

தங்க.தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்களை கேட்டோம். "டி.டி.வி. அ.ம.மு.க.வை உருவாக்கும் போதே அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அவர் அ.ம.மு.க.வை தொடங்கியதோடு அதை தனி அரசியல் கட்சியாக பதிவு செய்த டி.டி.வி. மனைவி மற்றும் அவரது நண்பர்கள் அடங்கிய குழுவாக மாற்றிவிட்டார். மாணிக்கராஜா என்பவரை நெல்லை மண்டல பொறுப்பாளராக நியமித்தார். "சேலஞ்சர்' துரை என்பவரை கோவை மண்டல பொறுப் பாளராக நியமித்தார். யார் இந்த மாணிக்கராஜா என்றால் அவர் ஒரு ஜமீன்தார் பரம்பரையை சேர்ந்தவர். தினகரனின் நெருங்கிய நண்பர் என்கிறார்கள். அவர் ஒருமுறை விருதுநகர் நகரசபை சேர்மனாக இருந்தார். அதுதான் அவரது அரசியல் அனுபவம். சென்னையில் வெற்றிவேல் பொறுப்பாளராக வந்ததும் கலைராஜன் தி.மு.க.வுக்கு சென்றார். சேலஞ்சர் துரை வந்ததும் செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு போனார். அதே போல் மாணிக்கராஜா நெல்லை மாவட்ட அ.ம.மு.க.வை அப்படியே அ.தி.மு.க.விற்கு அனுப்பி வைத்தார்.

சசிகலா, டி.டி.வி. தினகரனுக்கு நாடாளுமன்றத் தேர்தல் செலவுகளுக்காக 1,500 கோடி ரூபாய் கொடுத் தார். அதை யாருக்கும் தர வில்லை. அதைப் பற்றி கேள்வி கேட்டால் மாணிக்கராஜா போன்றவர்களை வைத்து எங்களது மாவட்டத்திலேயே எங்களுக்கு எதிராக கூட்டம் நடத்துகிறார். அதைத்தான் தங்க.தமிழ்ச் செல்வன் தட்டிக் கேட்டார். உடனே அவரது பேச்சை ஆடி யோவாக வெளியிடுகிறார்கள். தங்க.தமிழ்ச்செல்வன் பதினோரு கோடி ரூபாய் கடனில் இருக்கிறார். காசு வைத்திருப்பவர் களைத் தான் தினகரன் மதிப்பார். செந்தில்பாலாஜி தினகரனுக்காக செலவு செய்து கடனாளியாக போனதால்தான் அவரை மதிக் காமல் சேலஞ்சர் துரையை வைத்து அவரை அவமானப் படுத்தி தி.மு.க.வுக்கு அனுப்பி வைத்தார்கள்'' என்கிறார்கள் விரிவாக.

இந்த விவகாரம் பற்றி நம்மிடம் பேசிய சசிகலாவின் உறவினர்கள்,  தினகரனின் செயல்பாடுகள் பற்றி சசியிடம் தினமும் புகார் கடிதம் சென்று கொண்டி ருக்கிறது. 1500 கோடியை செல வழித்தும் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்கிற கோபம் சசிகலாவிற்கு இருக்கிறது'' என்கிறார்கள். அதே நேரத்தில், ஓ.பி.எஸ்.சை எதிர்த்த தங்க.தமிழ்ச்செல்வனை கட்சியில் சேர்த்தால் தனக்கு வலுச்சேர்க்கும் என நினைக் கிறார் இ.பி.எஸ். அதை தனது பழைய தொடர்புகள் மூலம் ஓ.பி. எஸ்.சை தூண்டி தடுக்க பார்த் தார் தினகரன். இந்த முக்கோண ஆடு-புலி ஆட்டம் நீடித்த நிலையில், அ.தி.மு.க.வில் கிளம்பிய எதிர்ப்பையும், சசியை ஜெயிலில் சந்திக்க நேரம் கிடைக்காத சூழலை யும் உணர்ந்து ஐ.பெரியசாமி மூலம், சபரீசனுக்கு தகவல் அனுப்பி, தி.மு.க.வில் ஐக்கியமாகும் முடிவை தங்க.தமிழ்ச்செல்வன் எடுத்தார் என்கிறார்கள் அவரது தரப்பினர்.
 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார்.