Skip to main content

குழந்தைவரம் கேட்டு காட்டேரியிடம் முறத்தால் அடிவாங்கும் பெண்கள்! பகுத்தறிவு மண்ணில் தொடரும் அவலம்!

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

Different temple festival in salem

 

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பரப்புரைகளும் சோதனைக்குழாய் குழந்தை வரையிலான விஞ்ஞான வளர்ச்சியும் ஒருபுறம் இருந்தாலும், கிராமங்களில் இன்றும் குழந்தைவரம் கேட்டு காட்டேரி வேடம் அணிந்த பூசாரிகளிடம் முறத்தால் அடி வாங்கும் நம்பிக்கையும் தொடர்கிறது.

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி குறிப்பாக, காணும்பொங்கல் விழாவன்று எருதாட்டம், மஞ்சுவிரட்டு, பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், கபடி உள்ளிட்ட பாரம்பரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது. வங்கா நரி ஜல்லிக்கட்டும் நடத்தப்பட்டு வந்த நிலையில், நடப்பு ஆண்டில் வனத்துறையில் அதற்கு தடை விதித்தனர்.

 

காணும்பொங்கலன்று வித்தியாசமான நிகழ்ச்சிகளால் மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் பெயர்பெற்ற வாழப்பாடி சுற்றுவட்டாரக் கிராமங்களில் இந்த ஆண்டும் நூதனமான விழா நடத்தப்பட்டது. வாழப்பாடி அருகே உள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தில் காணும்பொங்கலன்று (ஜன. 17) பேய் விரட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்தக் கிராமத்தில் பேய் விரட்டும் நிகழ்ச்சி என்பது தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

 

இந்த விழாவை, உள்ளூரில் உள்ள ஒரு சில குடும்பத்தினர் மட்டுமே எடுத்துக்கட்டிச் செய்கின்றனர். விழா நடத்தும் குடும்பத்துப் பெரியவர்கள் பொங்கல் விழா தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே காலணிகள் அணியாமல், தினமும் ஒரு வேளை விரதம் இருந்து வருவதை சம்பிரதாயமாகப் பின்பற்றி வருகின்றனர். அதேநேரம் அசைவ உணவு வகைகளை அவர்கள் எப்போதும் போலவே எடுத்துக் கொள்கின்றனர்.

 

ஒரு காட்டேரி முறத்தால் அடித்து பேய்களை விரட்டுவதுதான் நிகழ்ச்சியின் அடிப்படை செயல்முறை. காட்டேரி வேடத்திற்காக நோன்பிருந்து வந்த ஒருவர், கருப்பு நிற ஆடை அணிந்தும், அடர்த்தியான நீளமாக தொங்கும் சவுரி முடியும் அணிந்து கொண்டு காட்டேரி போல் ஒப்பனை செய்து கொள்கிறார். நீளமான சவுரி கிடைக்காதபட்சத்தில் கிராப் வெட்டிய காட்டேரியாகவே வலம் வருகின்றனர்.

 

பூசாரிகள் மேளவாத்தியங்களை முழங்க காட்டேரியை உள்ளூரில் உள்ள ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு கூடியிருக்கும் பெண்களின் தலைமுடியைப் பிடித்து, அவர்களின் தலையில் மூங்கிலால் முடையப்பட்ட முறத்தால் மூன்று முறை காட்டேரி வேடமிட்ட நபர் அடிக்கிறார். பின்னர் அவர், முறத்தால் அடிவாங்கிய பெண்களுக்கு நெற்றியில் விபூதி வைத்து விடுகிறார்.

 

காட்டேரியிடம் முறத்தால் அடி வாங்கினால், அதன் வலி தாங்க முடியாமல், பெண்களின் உடலை விட்டு பேய் ஓடிப்போய் விடும் அல்லது அவர்களை இனி ஒருபோதும் பேய்கள் அண்டாது என்பது அந்தக் கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. முறத்தடியை அந்தக் கிராமப்பெண்கள் பாதுகாப்புக் கவசம் போலவே கருதுகின்றனர்.

 

இது மட்டுமின்றி, காட்டேரியிடம் முறத்தால் அடி வாங்கும் பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றெல்லாம் கூட நம்புகின்றனர். இதற்காகவே உள்ளூர் மட்டுமின்றி, சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று காட்டேரியிடம் முறத்தால் அடி வாங்கினர். அடி வாங்குவதில் கூட சீனியாரிட்டி உண்டு என்கிறார்கள். கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டெல்லாம் சென்று அடி வாங்க முடியாதாம்.

 

சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி; பெரியார் மண்; பகுத்தறிவு பரப்புரைகள் ஒருபுறம் இருந்தாலும், முறத்தால் அடி வாங்கினால் பேய் ஓடும்; குழந்தை பிறக்கும்; திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கைகளும் இன்றும் கிராமங்களில் ஆழமாகப் பதிந்து கிடப்பதையும் காணமுடிகிறது.

 

சம்பவம் நடந்த பொன்னாரம்பட்டி என்பது பாரதிராஜா படங்களில் வருவது போன்ற நாகரீகமே என்னவென்று தெரியாத பட்டிக்காடு கிடையாது. அங்கும் செல்போன் கோபுரங்கள் முளைத்துள்ள அளவுக்கு எல்லா தொழில்நுட்பங்களும் சென்றடைந்திருக்கின்றன. ஆனாலும் இத்தகைய அர்த்தமற்ற நம்பிக்கைகளும் தொடர்வது நம் பகுத்தறிவு மண்ணுக்கு இழுக்குதான்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.