ரஜினி முதலில் கட்சி தொடங்குவாரா? கமல் முதலில் கட்சி தொடங்குவாரா என்ற கேள்வி எழுந்தபோது கமல் முந்திக் கொண்டார்.
உன் நண்பனைச் சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்ற பழமொழி புகழ்பெற்றது.
அந்த அடிப்படையில் கமல் தனது நண்பர்களாக வெளிப்படையாக காட்டியவர்கள் அனைவருமே கருப்பு மற்றும் சிவப்புக்காரர்கள். இடதுசாரிகள்.
கமலை வம்பிழுக்காதீர்கள். அவர் அரசியலை நன்கு கற்றுக்கொண்டு வருவார் என்று பாரதிராஜா சொன்னார். பொதுவாகவே, கமல் ஒரு விஷயத்தை பேச வேண்டுமென்றாலும், திரைப்படமாக எடுக்க வேண்டும் என்றாலும் அதுகுறித்து நன்றாக தெரிந்துகொள்ள விரும்புவார் என்பார்கள்.
அந்த அடிப்படையில் புதிய பாணியில் தனது பாணியில் ஒரு அரசியல் கட்சியை தொடங்கிவிட்டார். கமல் படங்களைப் போலவே ஏ, பி, சென்டர் ரசிகர்களை கவரும் கட்சியாக அது உருப்பெற்றுக் கொண்டிருக்கிறது என்றுகூட சொல்லலாம்.
கட்சி தொடங்கிய விஷயத்தில் கமல் தன்னை ஒரு தமிழனாகவும், தமிழ் குடும்பங்களின் பிள்ளையாகவும் காட்டிக்கொண்டார். தனக்கு முன்னோடியாக குறிப்பிட்ட பல தலைவர்களில் பெரியார் இருக்கிறார். கலைஞரைக்கூட பிடிக்கும் என்றார்.
“சென்னையிலிருந்து தூத்துக்குடி வர 100 நாள் ஆகுமா?” என்று அந்த இளைஞர் கேட்ட கேள்விதான் ரஜினியை ஆத்திரமடையச் செய்தது. மருத்துவமனையில் இருந்து வேகமாக வெளியேறிவிட்டார். தன்னை மிகப்பெரிய ஆளாக கற்பனை செய்து அந்த கற்பனை உலகத்திலேயே தமிழக முதல்வராக அவர் வாழ்ந்து வருகிறார். அவருடைய கற்பனை உலகத்தை அந்த இளைஞர் சிதைத்துவிட்டார். அது ரஜினியை காயப்படுத்திவிட்டது.
உடனே, தன்னை எதிர்த்து கேள்வி கேட்டவரை சமூகவிரோதிகளாக புரிந்துகொண்டுவிட்டார். அதன் தொடர்ச்சியாகத்தான் மருத்துவமனை முன்பாகவே தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பல கருத்துகளை அவர் வெளியிட்டார். போராட்டத்தில் சமூகவிரோதிகள் கலந்திருந்தனர் என்று மிகப்பெரிய குற்றச்சாட்டை சுமத்தினார்.
இதே குற்றச்சாட்டைத்தான் பாஜக தலைவர்களும், தமிழக முதல்வரும் தெரிவித்திருந்தனர். அதே கருத்தை ரஜினி தூத்துக்குடியில் வெளிப்படுத்தியது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் தூத்துக்குடியில் இருந்து சென்னை வருவதற்குள் தலைவர்கள் பலர் ரஜினியின் கருத்து விஷம் தோய்ந்தது என்றும், மக்களைக் கொச்சப்படுத்துவது என்றும் கூறினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் இறங்கிய ரஜினியிடம் தலைவர்களின் கருத்து குறித்து கேட்டபோது, அவர் மேலும் ஆவேசமடைந்து, தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாளிலும், தூத்துக்குடி போராட்டத்தின் கடைசி நாளிலும் சமூக விரோதிகள்தான் கலவரத்துக்கு காரணமாக இருந்தார்கள் என்று போலீஸுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தார்.
ரஜினி யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்பது அம்பலமாகிவிட்டதாக பாஜக மற்றும் அதிமுக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் கருத்துத் தெரிவித்துள்ளன. சமூக வலைத்தளங்களில் ரஜினியை பிரித்து மேய்கின்றனர்.
கமல் முறைப்படி கட்சியை தொடங்கி, தனிப்பட்ட பாதை அமைத்து மக்களை நெருங்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில்,
கட்சியே தொடங்காமல் மக்கள் விரோத சக்திகளின் குரலாய், மக்களுக்கு எதிரான குரலை ரஜினி வெளிப்படுத்தி இருக்கிறார்.
இப்போது, அவருக்காக ஒரு ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ரஜினி கட்சியைத் தொடங்க வேண்டியதில்லை. அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்கலாம் என்ற யோசனையை சிலர் முன்வைக்கிறார்கள். ஆக, ரஜினி இனியாவது கட்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது ஏற்கெனவே இருக்கிற கட்சியில் இணையப் போகிறாரா? என்பதே இப்போதுள்ள குழப்பம்.