Skip to main content

ரஜினிக்கும் கமலுக்கும் என்ன வேறுபாடு?

Published on 02/06/2018 | Edited on 02/06/2018

ரஜினி முதலில் கட்சி தொடங்குவாரா? கமல் முதலில் கட்சி தொடங்குவாரா என்ற கேள்வி எழுந்தபோது கமல் முந்திக் கொண்டார்.


உன் நண்பனைச் சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்ற பழமொழி புகழ்பெற்றது.

அந்த அடிப்படையில் கமல் தனது நண்பர்களாக வெளிப்படையாக காட்டியவர்கள் அனைவருமே கருப்பு மற்றும் சிவப்புக்காரர்கள். இடதுசாரிகள்.


 

KAMAL - RAJINI


 

கமலை வம்பிழுக்காதீர்கள். அவர் அரசியலை நன்கு கற்றுக்கொண்டு வருவார் என்று பாரதிராஜா சொன்னார். பொதுவாகவே, கமல் ஒரு விஷயத்தை பேச வேண்டுமென்றாலும், திரைப்படமாக எடுக்க வேண்டும் என்றாலும் அதுகுறித்து நன்றாக தெரிந்துகொள்ள விரும்புவார் என்பார்கள்.

 

 

 

அந்த அடிப்படையில் புதிய பாணியில் தனது பாணியில் ஒரு அரசியல் கட்சியை தொடங்கிவிட்டார். கமல் படங்களைப் போலவே ஏ, பி, சென்டர் ரசிகர்களை கவரும் கட்சியாக அது உருப்பெற்றுக் கொண்டிருக்கிறது என்றுகூட சொல்லலாம்.

 

கட்சி தொடங்கிய விஷயத்தில் கமல் தன்னை ஒரு தமிழனாகவும், தமிழ் குடும்பங்களின் பிள்ளையாகவும் காட்டிக்கொண்டார். தனக்கு முன்னோடியாக குறிப்பிட்ட பல தலைவர்களில் பெரியார் இருக்கிறார். கலைஞரைக்கூட பிடிக்கும் என்றார்.

 

 

ஆனால், ரஜினி தனது கட்சி தொடங்கும் வேலையை இன்னும் இழுத்துக் கொண்டிருக்கிறார். கட்சியைத் தொடங்கி, தமிழ்நாடு முழவதும் வார்டுகள் அளவில் கிளைகள் ஏற்படுத்தும் வேலைகளை முடித்தால்தான் கட்சியை முழுமையாக இயக்க முடியும் என்பது ஆரம்ப அரிச்சுவடி.

 

2017 டிசம்பர் 31 ஆம் தேதி ஒரு பல்கலைக்கழகத்தில் எம்ஜியார் சிலையைத் திறந்து வைத்த ரஜினி, தனது அரசியல் வருகை உறுதி என்றார். அப்போது, எம்ஜியாரைப் புகழ்ந்த அவர், எம்ஜியார் ஆட்சியைக் கொடுப்பேன் என்று பகிரங்கமாகவே அறிவித்தார்.

அப்புறம் பல சமயங்களில் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது கட்சி தொடங்குவது பற்றிய கேள்விக்கு நேரம் வரும்போது அறிவிப்பேன் என்று மழுப்பத் தொடங்கினார். அவருக்கு எந்திரன் 2.0 படத்தை வெளியிட முடியாமல் இழுத்தடிப்பதும், காலா படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் முன்வராத நிலையும் பெரிய பிரச்சனையாக இருப்பதாக கூறப்பட்டது. ஒருவழியாக காலா படத்தை வெளியிட தேதி குறித்தாகிவிட்டது. அதற்கான புரமோஷன் நடைபெற வேண்டிய நிலையில்தான் தூத்துக்குடிக்கு போனார்.


 

KAMAL - RAJINI


 

கமல் போராட்டம் நடக்கும்போதே போனார். அந்த மக்கள் மத்தியில் ஸ்டெர்லைட்டிடம் பணம் கேட்டதாக தனக்கு தகவல் வந்ததாக வார்த்தையை விட்டு வாங்குப்பட்டார். உடனே அதை மடைமாற்ற ஒரு சின்னப்பையனை கோஷம்போட வைத்து சமாளித்தார். சில பெண்களிடம் பேசி செண்டிமென்ட் சீன் போட்டார். 


பிறகு, கலவரத்துக்கு பிறகு மறுநாளே மருத்துவ மனைக்கு போனார். காயம்பட்டவர்களை சந்தித்தார். வெளியில் வந்து தனது வேதனையை பகிரந்துகொண்டார். எதற்கெடுத்தாலும் போராடுவதைக் காட்டிலும் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்ற கருத்தையும் பதிவு செய்தார். ஆனால், அவர் சொன்ன விதம் ஏற்கும்படியாக இருந்தது. ரத்தக்களறிக்கு எதிரான கருத்தாக இருந்தது.

 

ஆனால், ரஜினி தூத்துக்குடிக்கு கிளம்பும்போது சென்னையிலேயே இதுபற்றிக் கேட்டார்கள். அதற்கு பதிலளித்த ரஜினி…

 

“நான் ஒரு நடிகன். நான் அங்குபோவது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடும். நடந்து முடிந்த சம்பவங்களுக்கு ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டுக்கொள்வது எனக்கு பிடிக்காது” என்று சொல்லியிருந்தார்.

 

துப்பாக்கிச்சூடு நடந்து முடிந்து 8 நாட்களுக்குப் பிறகு அவர் செல்கிறார். துப்பாக்கிச் சூடு நடந்து இரண்டு நாள் வரை அமைதி காத்த அவர், கமல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்ற பிறகு ஒரு வீடியோ வெளியிட்டார். அதில்கூட…

 

“போலீஸாரின் நடவடிக்கை காட்டுமிராண்டித்தனமானது” என்றுதான் கூறியிருந்தார்.

 

எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. சென்னையிலிருந்து தூத்துக்குடி போகும்போதே, காலா பட புரமோஷனுக்காக ரஜினி புறப்பட்டுவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல்களும் புறப்பட்டுவிட்டன.

 

அதற்கு ஏற்றபடி, சோகம் கப்பியிருந்த ஒரு இடத்துக்கு போகிறவர், முன்கூட்டியே தூத்துக்குடி விமான நிலையத்துக்கும், மருத்துவமனைக்கும் கார்களில் தனது மன்ற நிர்வாகிகளை வரும்படி செய்து கூட்டம் சேர்த்தார். மருத்துவமனை வளாகத்தில் அவர் நடந்துகொண்ட விதத்தை மனிதாபிமானம் உள்ளவர்களால் ஏற்க முடியாது.

 

மருத்துவமனைக்குள் சந்தோஷ் குமாரை சந்திக்கும்வரை அவர் சந்தோஷமாகத்தான் இருந்திருக்கிறார். அந்த இளைஞரிடம் வந்தபோது அவர் ரஜினியைப் பார்த்து “யார் சார் நீங்க?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு “நான் ரஜினிகாந்த்பா” என்று ரஜினி கூறியிருக்கிறார்.


 

KAMAL - RAJINI

 
 

 

 

“சென்னையிலிருந்து தூத்துக்குடி வர 100 நாள் ஆகுமா?” என்று அந்த இளைஞர் கேட்ட கேள்விதான் ரஜினியை ஆத்திரமடையச் செய்தது. மருத்துவமனையில் இருந்து வேகமாக வெளியேறிவிட்டார். தன்னை மிகப்பெரிய ஆளாக கற்பனை செய்து அந்த கற்பனை உலகத்திலேயே தமிழக முதல்வராக அவர் வாழ்ந்து வருகிறார். அவருடைய கற்பனை உலகத்தை அந்த இளைஞர் சிதைத்துவிட்டார். அது ரஜினியை காயப்படுத்திவிட்டது.

 

உடனே, தன்னை எதிர்த்து கேள்வி கேட்டவரை சமூகவிரோதிகளாக புரிந்துகொண்டுவிட்டார். அதன் தொடர்ச்சியாகத்தான் மருத்துவமனை முன்பாகவே தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பல கருத்துகளை அவர் வெளியிட்டார். போராட்டத்தில் சமூகவிரோதிகள் கலந்திருந்தனர் என்று மிகப்பெரிய குற்றச்சாட்டை சுமத்தினார்.

 

 

 

இதே குற்றச்சாட்டைத்தான் பாஜக தலைவர்களும், தமிழக முதல்வரும் தெரிவித்திருந்தனர். அதே கருத்தை ரஜினி தூத்துக்குடியில் வெளிப்படுத்தியது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் தூத்துக்குடியில் இருந்து சென்னை வருவதற்குள் தலைவர்கள் பலர் ரஜினியின் கருத்து விஷம் தோய்ந்தது என்றும், மக்களைக் கொச்சப்படுத்துவது என்றும் கூறினார்கள்.

 

சென்னை விமான நிலையத்தில் இறங்கிய ரஜினியிடம் தலைவர்களின் கருத்து குறித்து கேட்டபோது, அவர் மேலும் ஆவேசமடைந்து, தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாளிலும், தூத்துக்குடி போராட்டத்தின் கடைசி நாளிலும் சமூக விரோதிகள்தான் கலவரத்துக்கு காரணமாக இருந்தார்கள் என்று போலீஸுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தார்.

 

ரஜினி யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்பது அம்பலமாகிவிட்டதாக பாஜக மற்றும் அதிமுக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் கருத்துத் தெரிவித்துள்ளன. சமூக வலைத்தளங்களில் ரஜினியை பிரித்து மேய்கின்றனர்.

 

கமல் முறைப்படி கட்சியை தொடங்கி, தனிப்பட்ட பாதை அமைத்து மக்களை நெருங்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில்,

 

கட்சியே தொடங்காமல் மக்கள் விரோத சக்திகளின் குரலாய், மக்களுக்கு எதிரான குரலை ரஜினி வெளிப்படுத்தி இருக்கிறார்.

 

இப்போது, அவருக்காக ஒரு ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ரஜினி கட்சியைத் தொடங்க வேண்டியதில்லை. அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்கலாம் என்ற யோசனையை சிலர் முன்வைக்கிறார்கள். ஆக, ரஜினி இனியாவது கட்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது ஏற்கெனவே இருக்கிற கட்சியில் இணையப் போகிறாரா? என்பதே இப்போதுள்ள குழப்பம்.

 

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.