Skip to main content

சிலை வைப்பதும், பெயர் மாற்றுவதும்தான் பாஜகவின் வளர்ச்சியா?

Published on 15/11/2018 | Edited on 12/12/2018

படேலுக்கு சிலை வைத்தால் இந்தியாவின் ஒற்றுமை பாதுகாக்கப்படும் என்பதுபோல மோடி முழக்கமிட்டார். ரூ.3 ஆயிரம் கோடி செலவிட்டு, சீனாவில் செய்யப்பட்ட சிலையை குஜராத்தில் மிகுந்த ஆடம்பரமாக திறந்துவைத்தார்.

 

 

bbb

 

 

அவர் தொடங்கிய அந்த சிலை விளையாட்டை, இந்து மதத்தின் பெருமையைக் காப்பாற்ற ராமருக்கு சிலை வைக்கப்போவதாக அறிவித்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாமியார் முதல்வர் ஆதித்யநாத்தும் தொடர்ந்திருக்கிறார்.

 

அவர் அப்படி அறிவித்த நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமியோ இப்போது காவிரித்தாய்க்கு சிலை வைக்கப்போவதாக அறிவித்துள்ளார். சிலைகளை வைத்து சுற்றுலாவை வளர்க்கப் போவதாக குமாரசாமி அறிவித்துள்ளார். நல்லவேளை காவிரித்தாயை வைத்து கன்னடர்களின் ஒற்றுமையை வளர்க்கப் போவதாக கூறவில்லை.

 

 

bb

 

 

ஒருபக்கம் இப்படி சிலைகள் வைக்கும் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற நகரங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை மாற்றும் விளையாட்டிலும் பாஜக தீவிரம் காட்டிவருகிறது. இஸ்லாமியர்கள் உருவாக்கிய பல நகரங்களின் பெயர்களை இந்துப் பெயர்களாக மாற்றுவதன் மூலம் இந்தியா இஸ்லாமியரின் பிடியில் இருந்ததை மறைத்துவிடலாம் என்று பாஜக நினைக்கிறதா என்பது தெரியவில்லை.

 

தங்களுடைய இந்த நடவடிக்கைகளை எதிர்த்தால் அவர்களை இந்துமத விரோதி என்று முத்திரை குத்தி அரசியல் ஆதாயம் தேடவே பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது என்று வரலாற்று அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

இந்த பெயர் மாற்றும் விளையாட்டை தங்களுக்கு மட்டுமே உரியதாக காட்டவும் பாஜக தவறவில்லை. ஆம், மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்றுவதற்காக அந்த மாநிலத்தின் சட்டப்பேரவை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும் இதுவரை நிறைவேற்றவில்லை. பங்களா என்ற பெயர் பங்களாதேசம் என்ற பெயருக்கு இணையாக இருப்பதாக மத்திய அரசு விளக்கம் கூறியிருக்கிறது.

 

bb

 

 

மேற்கு வங்கம் என்ற பெயரை மாற்றப்போவதாக 2011 ஆம் ஆண்டிலேயே மம்தா வாக்குறுதி அளித்திருந்தார். அப்போது மாநிலத்தின் பெயரை பஸ்சிம்பங்கா என்று மாற்றப்போவதாக கூறியிருந்த மம்தா, 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினார். அதில், ஆங்கிலத்தில் பெங்கால் என்றும், வங்கமொழியில் பங்களா என்றும், ஹிந்தி மொழியில் பெங்காலி என்றும் அழைக்க ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

 

பின்னர் மூன்று மொழியிலும் ஒரே பெயரில் அழைக்கும் வகையில் தீர்மாநத்தை மாற்ற யோசனை தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பங்களா என்ற பெயர் மாற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்போது, பங்களா என்ற பெயர் மாற்றத்தை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது.

 

பங்களா என்பது ஒரு மொழி என்றும் அதை ஒரு மாநிலத்தின் பெயராக மாற்ற முடியாது என்று மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியிருக்கிறார்.

 

பெயர் மாற்றத்திற்கு மம்தா கூறிய காரணங்களில் மேற்கு வங்கம் என்ற பெயர் மாநிலங்களின் பட்டியலில் கடைசியாக வருகிறது. பங்களா என்றால் இரண்டாவது இடத்தில் வந்துவிடும் என்று கூறினார். மம்தாவின் முடிவை மத்திய அரசு ஏற்க மறுப்பதற்கு ஒரே காரணம்தான் கூறப்படுகிறது. இந்த பெயர் மாற்றம் மம்தாவின் பெயரை மேற்கு வங்க வரலாற்றில் இடம்பெறச் செய்துவிடும் என்பதுதான் பாஜகவின் நிராகரிப்புக்கு காரணம் என்கிறார்கள்.

 

தமிழ் பேசும் மக்கள் நிறைந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றியதைப்போல, பங்களா மொழி பேசும் மக்கள் நிறைந்த மாநிலத்துக்கு பங்களா என்று பெயர் சூட்டுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

 

பங்களா என்று பெயர் மாற்றப்பட்டால், தமிழ்நாடு, தெலங்கானாவுக்கு அடுத்தபடியாக மொழியை மாநிலப் பெயராக கொண்ட மூன்றாவது மாநிலமாக இடம்பெறக்கூடும்.

 

 

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.