நெல்லை மாவட்டத்திலுள்ள நாங்குநேரி வட்டம், போலீஸ்படை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கிறது. திடீரென்று கிளம்பிய 9 பேர் கொண்ட மர்ம கும்பல் அந்தப் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசி கண்ணில் பட்ட 8 பேரை வெட்டி வெறியாட்டம் போட்டதால் அங்கே பதட்டமும் பீதியும் நிலவுவதே காரணம். மார்ச் 2 இரவு சுமார் ஏழரை மணியளவில் நாங்குநேரி அருகேயுள்ள பெரும்பத்து இந்திரா காலனிக்குள் 3 பைக்குகளில் புகுந்த 9 பேர் கொண்ட ஆயுத மர்ம கும்பல் ஒன்று திடீரென அங்குள்ள தெருக்களுக்குள் நுழைந்து பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியுள்ளது.
இதில் குண்டுகள் வெடித்துச் சிதற சத்தம் கேட்டு அலறிய பொதுமக்கள் வெளியே ஓடிவந்திருக்கிறார்கள். இதனைக் கண்ட அந்த மர்ம கும்பல் கண்ணில் தென்பட்டோர்களையும் அந்தப்பகுதி தேநீர் கடையில் நின்றவர்களையும் காரணமே இல்லாமல் அரிவாளால் கொடூரமாக வெட்டியது. இதில் 5 பேருக்கு சரமாரியாக வெட்டுக்கள் விழ அலறிய அவர்கள் இரத்த வெள்ளத்தில் சரிந்திருக்கிறார்கள். கடும் போராட்டத்திற்கு பிறகு இரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை கிராம மக்கள் மீட்டிருக்கிறார்கள். இந்தக் கொடூரத் தாக்குதலில் அங்குள்ள செங்கல் சூளைத் தொழிலாளியான வடமாநிலத்தின் ஒடிசாவைச் சேர்ந்த திரிநாத்கட்டா (40) என்ற தொழிலாளியும் இந்திரா காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மாற்றுத்திறனாளி ஜான் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள்.
தொடர்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3 பேரை அங்கிருந்த மக்கள் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்களில் படுகாயமடைந்த நெல்சன் கனேசன் ஆபத்தான நிலையிலிருப்பதால் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். இப்படி இந்திரா காலனியில் வெறியாட்டமாடிய மர்மஆயுத கும்பல் அங்கிருந்து களக்காடு செல்லும் வழியிலுள்ள கடம்போடு வாழ்வு என்ற கிராமத்தில் சாலையோரம் நின்றிருந்த 3 பேரை சரமாரியாக போகிறபோக்கில் வெட்டிக் காயப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. இந்த மர்ம கும்பலின் வெட்டுக்காயத்தால் படுகாயமடைந்த பிரபாகரன், இராமசாமி, சசிகுமார் ஆகியோர் நாங்குநேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/04/nan-john-2026-03-04-10-00-15.jpg)
இதனிடையே இந்த மர்ம கும்பலின் வெறியாட்டத்தையும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் இந்திரா காலனி பெரும்பத்து மற்றும் அக்கம்பக்கமுள்ள கிராம மக்கள் ஏர்வாடி-நாங்குநேரி பிரதானச் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த நாங்குநேரி மற்றும் ஏர்வாடி காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பைப் பலப்படுத்த நெல்லை சரக டி.ஐ.ஜி.யான சரவணன் எஸ்.பி. பிரசன்னகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதோடு பல போலீஸ் டீம்களை கிராமத்திற்குள் அனுப்பியும் டி.ஐ.ஜி சரவணன் ஒரு டீமோடு அந்த இருளிலும் கிராமத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசி ரகளையில் ஈடுபட்ட 9 பேரையும் விடிய விடிய தேடி வந்திருக்கிறார்கள்.
தொடர்ந்து பதட்டத்தில் இருந்த கிராம மக்களிடம் போலீசார் சமரசப் பேச்சு வார்த்தை நடத்திவருவதோடு அங்குள்ள தெருக்களில் வெடிக்காமல் கிடந்த பெட்ரோல் குண்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார்க்ள. திடீரென்று கிராமத்திற்குள் புகுந்து வெடிகுண்டு வீசியும் அரிவாட்களால் கண்ணில் பட்டவர்களை வெட்டியும் அட்ராசிட்டியில் ஈடுபட்ட அந்த மர்ம கும்பலின் செயல்பாடுகள் தற்போதைய தேர்தல் காலச் சூழ்நிலையை மையமாக வைத்து எதிர்கட்சிகளால் ஆளும் கட்சியை நோக்கி கடும் விமர்சனக் கணைகளைப் பறக்கவிட்டது ஏகப் பரபரப்பாகியிருக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/04/nan-ins-2026-03-04-10-01-03.jpg)
இதுகுறித்து நாம் உளவுத்தறை மற்றும் காவல்துறை வட்டாரங்களில் உள்ள முக்கிய அதிகாரிகளிடம் பேசியபோது, எந்த வித மோட்டிவ்வும் இல்லாமல் திடீரென்று ஆயுதங்களுடன் கிளம்பிய 9 பேர் கொண்ட மர்ம கும்பல் இப்படியான தாக்குதலில் ஈடுபட்டது முன்னெப்போதும் நடந்ததில்லை. ஆனால் இந்த சம்பவம் தற்போதைய தேர்தல் காலச் சூழலில் நடந்ததுதான் பரபரப்பான விஷயமாகியிருக்கிறது. நகரின் பல்வேறு பகுதியில் நாங்கள் விசாரித்தவரை இந்த அட்ராசிட்டியில் ஈடுபட்ட அந்த கும்பல் மருகால்குறிச்சி, மாஞ்சான்குளம், பெரும்பத்து உள்ளிட்ட கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பலதரப்பட்ட வாலிபர்கள் குரூப்பாகச் சேர்ந்து செயல்படுகின்றனர்.
எந்நேரமும் கஞ்சா போதையில் இருக்கும் இந்தக் கும்பல் கட்டப்பஞ்சாயத்து நாங்குநேரி விவசாய நிலங்களின் பிரச்சினைகள் போன்றவைகளில் தலையிட்டு அதிரடிகாட்டி பணம் பார்ப்பதையே வழக்கமாகக் கொண்டுவந்திருக்கிறது. மேலும் இதுபோன்ற கும்பல்கள் தொழில் சார்ந்தவர்களுக்கு அனுசரணையாக இருப்பதால் இந்தக் கும்பலின் நடவடிக்கைகள் வெளியே தெரியாமல் இருந்திருக்கின்றன. ஆனால் இவர்கள் நடவடிக்கைகள் அனைத்தும் அங்குள்ள காவல்நிலைய அதிகாரிகளுக்குத் தெரியாமல் இல்லை. இந்தச் சூழலில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு நாங்குநேரி பெருந்தெருவில் இரண்டு மாணவர்கள் வெட்டப்பட்டனர். அது பரபரப்பையும் அச்சத்தையும் அப்போது கிளப்பியது. இந்நிலையில் அந்த அச்சமும் பீதியும் அடங்கியதையடுத்து அந்தக் கும்பலே தற்போது பெரும்பத்து சம்பவத்திலும் ஈடுபட்டவர்கள் என்கிற சந்தேகமும் இருக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/04/nan-arrested-2026-03-04-10-03-03.jpg)
சம்பவ இடத்திலுள்ள மக்களை விசாரித்த போது, வந்த அந்த மர்ம கும்பலின் அத்தனை பேரும் மாஸ்க் அணிந்து வந்தனர் என்றும் குறிப்பிடுகிறார்கள். சம்பவத்திற்கு காரணமானவர்களை விரைவில் வளைத்துவிடுவோம் என்ற அந்தப் போலீஸ் அதிகாரி சந்தேகத்திற்கிடமான 7 பேர்களை பிடித்து விசாரணை செய்துவருவதோடு அருகிலுள்ள மருகால்குறிச்சி கிராமத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை வளைத்துக் கொண்டு வந்து அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இதன் பிறகே இந்த சம்பவத்தின் உள் விஷயங்கள், சதி வேலையா, வேறு ஏது உள் நோக்கம் இருக்கிறதா, இதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார் யார் என்பன போன்ற பல சந்தேகங்களுக்கான பதில்கள் தெளிவாகத் தெரியவரும் என்றார்.
நாங்குநேரியில் வெறியாட்டம் நடத்திய மர்மக் கும்பலின் அட்ராசிட்டி சாதாரணமானதல்ல. அது தேர்தல் காலத்திற்காக விடப்பட்ட எச்சரிக்கை என்பதே தென்மாவட்டத்தில் பிரதானமாகப் பேசப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/03/04/nan-police-2026-03-04-09-59-15.jpg)