Skip to main content

பதவி... நீக்கம்... நியமனம்! சேலம் திமுகவில் பரபரப்பு!!

Published on 31/07/2020 | Edited on 31/07/2020

 

 

திமுகவில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத ஒருவரை முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்பட்டதற்கு, சேலம் கிழக்கு மாவட்டத்தில் உடன்பிறப்புகள் கொதித்து எழ, பத்தே நாளில், அவரை நீக்கிவிட்டு புதியவரை நியமித்திருக்கிறது அக்கட்சி தலைமை.

 


சேலம் மாவட்டத்தில் திமுக அமைப்பு ரீதியாக சேலம் மத்தி, கிழக்கு, மேற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில், பஞ்சாயத்துகளில் ஆளுங்கட்சியை வீழ்த்தி பரவலாக வெற்றி பெற்ற திமுக, 20 ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பதவிகளில் ஒன்றைக்கூட கைப்பற்ற முடியாமல் கோட்டை விட்டது.

 

குறிப்பாக, சேலம் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியத்தில் 'வாஷ் அவுட்' ஆனது திமுக. திமுக வலுவாக இருக்கும் ஓமலூர், ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி, அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி ஆகிய ஒன்றியங்களில்கூட தலைவர் பதவியை நழுவவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு, சேலம் மாவட்டத் திமுகவில் அதிரடியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

 

அதுவரை சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த வீரபாண்டி ராஜா தடாலடியாக நீக்கப்பட்டார். அந்தப் பதவியில் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த எஸ்.ஆர்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டார். சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக முன்னாள் எம்.பி., டி.எம்.செல்வகணபதியை நியமித்தது அக்கட்சி தலைமை. 

 

இது ஒருபுறம் இருக்க, சேலம் கிழக்கு மாவட்டத்தில் சில நிர்வாகிகள் நீக்கம் மற்றும் நியமனங்களில் உள்குத்துகள் இருப்பதாக உடன்பிறப்புகளிடையே தொடர்ந்து சலசலப்புகள் கிளம்பிய வண்ணம் இருந்தன. அதன் தொடர்ச்சியாக, மல்லூர் பேரூர்க் கழக பொறுப்பாளராக கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, வி.கே.சீனிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவருடைய நியமனம், பனமரத்துப்பட்டி ஒன்றிய திமுகவில் பெரும் புகைச்சலை உருவாக்கியதுடன், ஒட்டுமொத்த திமுகவினரும் மாவட்டத் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் அளவுக்கும் சென்றது. 

 

ஏனெனில், சீனிவாசன், திமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை என்கிறார்கள். அவர், வீர வன்னியர் பேரவை என்ற சாதி அமைப்பை சேர்ந்தவர் என்றும் கூறுகின்றனர். கட்சியினர் மட்டுமின்றி சீனிவாசனே குடிபோதையில், தான் வீர வன்னியர் பேரவையைச் சேர்ந்தவர் என்று கூறி, திமுகவை விமர்சிக்கும் காணொலி பதிவு ஒன்றும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின.

 

இதையடுத்து, மல்லூர் பேரூர் திமுக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக திரண்டு வந்து, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்திடம் முறையிட்டனர். இந்த நிலையில்தான் சீனிவாசன், குடும்ப சூழ்நிலை காரணமாக பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாகவும், அவருக்கு பதிலாக மல்லூர் பேரூர்க்கழக புதிய பொறுப்பாளராக சுரேந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், வியாழக்கிழமை (ஜூலை 30) முரசொலியில் ஓர் அறிவிப்பை வெளியிட்டது, கட்சி தலைமை.

 

பத்தே நாளில் பதவி... நீக்கம்... நியமனம்... என அடுத்தடுத்து கச்சேரிகள் நடந்ததன் பின்னணி குறித்து சேலம் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசினர்.

 

surendran-dmk

 

                                                                                          சுரேந்திரன்


''சீனிவாசன் நியமிக்கப்படுவதற்கு முன்பு, மல்லூர் பேரூர்க் கழக பொறுப்பாளராக விஜயகுமார் என்பவர் இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரை நாய் கடித்து விட்டதால், அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார். அதனால், அவர் கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டாமல் சற்று ஒதுங்கி இருந்தார். இது தொடர்பாக அவரிடம் கருத்துக்கூட கேட்காமல் திடீரென்று அவரை நீக்கிவிட்டு சீனிவாசன் என்பவரை கட்சி தலைமை நியமித்துள்ளது. 

 

மல்லூர் பேரூர்க்கழக முன்னாள் செயலாளர் சுரேந்திரன், கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். அதனால் அவர் பேரூர்க் கழக செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டு, தனது ஆதரவாளரான விஜயகுமாருக்கு அந்த பதவியை விட்டுக்கொடுத்தார். எனினும், கடந்த முறை சுரேந்திரனுக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்படவில்லை. 


கட்சிக்காக எப்போதும் சின்சியராக உழைக்கக் கூடியவர் மட்டுமின்றி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட எந்த ஒரு வம்புதும்புக்கும் போகாதவர். அவர், சேலம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் எம்எல்ஏவின் ஆதரவாளர் என்பதால், அவரை கிழக்கு மாவட்டத்தில் இருந்து ஓரங்கட்ட முயற்சிக்கின்றனர். அவர் பொறுப்பில் இருந்தால், அடுத்து வரும் தேர்தலில் சீட் கேட்டு, குடைச்சல் கொடுப்பார் என 'சிலர்' கருதுகின்றனர்.

 

அதனால்தான் சுரேந்திரனுக்கு 'செக்' வைக்கும் உள்நோக்கத்துடன் அவருடைய ஆதரவாளரான விஜயகுமாரை சொல்லாமல் கொள்ளாமல் மாவட்டத் தலைமை பரிந்துரை செய்து, அவரை நீக்கம் செய்ய வைத்திருக்கிறது. பனமரத்துப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் பரிந்துரையின்பேரில், மல்லூர் பேரூர்க் கழக பொறுப்பாளராக கட்சியில் உறுப்பினராகக்கூட இல்லாத சீனிவாசனை நியமிக்க வைத்துள்ளனர். தெரிந்தே கட்சி தலைமையை ஏமாற்றியுள்ளதாக கருதுகிறோம்.

 

சீனிவாசன் நியமனம் குறித்து, கழக நிர்வாகிகள் பலர் ஒரு வாரத்திற்கு முன்பு, கிழக்கு மாவட்ட பொறுப்பாளரை நேரில் சந்தித்து முறையிட்டோம். அதன்பிறகே, தற்போது சீனிவாசன் நீக்கப்பட்டு, அந்தப் பதவியில் சுரேந்திரனை புதிதாக நியமித்து தளபதி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்,'' என்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.

 

 

sivalingam-sr

                                                                               எஸ்.ஆர்.சிவலிங்கம்

 

இது தொடர்பாக சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்திடம் கேட்டபோது, ''பனமரத்துப்பட்டி ஒன்றிய திமுக பொறுப்பாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் பரிந்துரை கடிதம் கொடுத்ததன் பேரில்தான் மல்லூர் பேரூர் கழகத்திற்கு பொறுப்பாளராக சீனிவாசன் என்பவரை நியமிக்கக்கோரி கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பினேன். நானாக எதையும் செய்யவில்லை. 

 

இதுகுறித்து ஆட்சேபணைகள் வந்த உடனேயே, சீனிவாசனை நீக்கிவிட்டு புதியவரை நியமித்து விடலாம் என கட்சிக்காரர்களிடம் அப்போதே சொல்லி விட்டேன். கட்சியை வளர்ப்பதும், வரும் தேர்தலில் திமுக வேட்பாளர்களை வெற்றிபெற செய்து, தளபதியை முதல்வராக்குவதும்தான் என்னுடைய ஒரே லட்சியம்,'' என்றார். 

 

மறைந்த திமுக தலைவர் கலைஞர், கட்சி கூட்டங்களில் பேசுகையில், ''கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பால் வளர்ந்த இயக்கம், திமுக. அவர்களின் வளர்ச்சிக்கு எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் எப்போதும் உதவியாக இருக்க வேண்டும்,'' எனக்குறிப்பிடுவார். ஆனால், அண்மைக் காலங்களாக உழைக்கும் தொண்டர்களுக்கு கட்சியில் மரியாதை இல்லை என புலம்புகின்றனர் சேலம் மாவட்ட திமுகவினர். மேலும், 71 ஆண்டு கால திமுக வரலாற்றில், அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத ஒருவருக்கு முக்கிய பதவி கொடுத்திருக்கும் விந்தையும் இப்போதுதான் நடந்திருக்கிறது என்றும் குமுறுகிறார்கள் கழக உடன்பிறப்புகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.