Skip to main content

மருத்துவர்களின் அர்ப்பணிப்பை கொச்சைப்படுத்தும் மத்திய அரசு!

Published on 26/04/2021 | Edited on 26/04/2021
ddd

 

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை, முன்பைவிட வெகுதீவிரமாகப் பரவிவரும் சூழலில், கொரோ னாவுக்கு எதிரான யுத்தத்தில் முன்நின்று பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு, கடந்த 2020, மார்ச் மாதத்தில் அறிவிக்கப் பட்டிருந்த ரூ.50 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் திட்டம் முடிவுக்கு வந்ததாக வெளியான தகவல், மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

கொரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களாகச் செயல்படுவோர், உயிரிழக்க நேர்ந்தால், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் ரூபாய் காப்பீட்டுத்தொகை கிடைக்கும். இதுவரை 287 பேருக்கு காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ள தாகக் குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், இந்த காப்பீடு தற்போது முடிவுக்கு வருவதாகவும், இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேறொரு காப்பீட்டு நிறுவனத்துடன் பேசிவருவதாகவும் கூறியிருக்கிறது. இதனை எதிர்க் கட்சித்தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர் சித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராகப் போரா டும் சுகாதாரப் பணியாளர்களிடம் நன்றியில்லாமல் நடந்துகொண்டுள்ளதாகவும், தற்போது அவர்கள், காப்பீடு இல்லாத சூழலில் பணியாற்றிவருகிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

 

சுகாதாரப்பணியாளர்களுக்கு இதுவரை மத்திய அரசு அறிவித்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், காப்பீட்டுத்தொகை உரியவர்களுக்குக் கிடைத்திருக்கிறதா, இத்திட்டம் நன்முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திர நாத்திடம் கேட்டபோது, ""மத்திய அரசு அறிவித்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்மூலம், கடந்த ஓராண்டு காலத்தில் உயிரிழந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு, காப்பீட்டுத்தொகை முறையாக வழங்கப்பட வில்லை. கொரோனாவுக்கு எதிரான போரில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை வழங்குவதற்கு, முதலில் அதுகுறித்த விவரங்கள் மத்திய அரசிடம் இருக்க வேண்டும்.

 

கொரோனா நோய்த்தொற்றுப்பரவல் தொடங்கியதிலிருந்து கடந்த மாதம் வரைக்குமே, 800க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த டேட்டாவையே மத்திய அரசும், மாநில அரசும் சரியாகக் கணக்கெடுக்கவில்லை. வெறும் 120 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே குறிப்பிட்டுள்ளார். மாநில அரசோ, தனியாரிடம் இதுகுறித்த விவரங்களைக் கேட்டுள்ளது. இப்படி மத்திய, மாநில அரசுகளே, கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்த மருத்துவர்களை மதிக்காமல், பொறுப்பில்லாமல் செயல்படும்போது, எப்படி உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைத்திருக்கும்?

 

'மருத்துவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம்' என்று வெளியில் காட்டிக்கொள்ள மட்டுமே இந்த இன்சூரன்ஸ் அறிவிப்பு பயன்படும். இப்படி கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் குறிப்பிட்டால், அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்துக்குத்தான் லாபமாக அமையுமேயொழிய, சுகாதாரப்பணி யாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பேரிழப்பு தான். கொரோனாவால் உயிரிழந்தவர்களைக் கணக்கிடுவதில் இன்னொரு நடைமுறைக் குழப்பமும் இருந்தது. இதில், ஆர்.டி. பி.சி.ஆர். டெஸ்ட்டில் நெகடிவ் என்று வந்தவர்களைக் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாகக் கணக்கில் கொள்வதில்லை. ஆனால், இதில் நெகடிவாக வந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு. எனவே இத்தகைய விதிமுறைகளால் உரியவர்களுக்கு இழப்பீடு கிடைக்காமல் போகிறது.

ddd

இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்க, அரசாங்கம் வழங்க நினைக்கும் இழப்பீட்டுத் தொகையை, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலமாகச் செய்யாமல், நேரடியாகவே வழங்க வேண்டும். மத்திய அரசு 50 லட்சம் ரூபாயும், மாநில அரசு தனது பங்காக 50 லட்சம் ரூபாயும் வழங்கி, அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாத்திட வேண்டும். இதுவே கொரோனா வுக்கு எதிரான போரில் உயிரையும் துச்சமாக மதித்து, 24 மணி நேரமும் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள வீரர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும்'' என்றார்.

 

கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியதுமே கொரோனா நோயாளிகளை, அவர்களைச் சார்ந்தவர்களே நெருங்குவதற்கு அச்சப்படும் சூழலில், அந்த நோயாளி களுக்கு உரிய சிகிச்சைகளை அளித்து குணப்படுத்துவது சவாலான விஷயமாகும். கொரோனா நோயாளிகளிடமிருந்து தங்களுக்கு நோய் பரவிவிடாமலிருக்க மருத்துவர்கள் நாள்முழுக்க அணியும் பாதுகாப்பு உடைகள், அவர்களுக்கு மிகுந்த சிரமத்தைத் தரக்கூடியவை. எனினும், நோயாளிகளைக் குணப்படுத்த வேண்டுமென்ற உயரிய நோக்கத்துக்காகத் தங்களுக்கு நேரும் சிரமத்தைப் பொறுத்துக் கொண்டு சேவையாற்றும் மருத்துவர்கள், தெய்வத்துக்கு நிகரானவர்கள்.

 

அவர்களைப் போற்றுவதாகக் கூறிக்கொண்டு, ஹெலிகாப்டரில் பறந்து, மருத்துவமனையின் மீது பூக்களைத் தூவிய மத்திய அரசின் ஸ்டன்ட்டை விட, அவர்களுக்கு உளப்பூர்வமான மரியாதையை வழங்குவதே அவசியமாகும். எனவே, நிறுத்தப் பட்டுள்ள இன்சூரன்ஸ் திட்டத்தை மீண்டும் தொடங்குவது அல்லது நேரடியாகக் இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசே வழங்குவது என ஏதேனுமொரு வழியில், மத்திய, மாநில அரசுகள் துரிதமாகச் செயல்பட்டால்தான், மருத்துவர்களும் எவ்விதத் தொய்வுமின்றி, முழு ஈடுபாட்டோடும், எதிர்கால நம்பிக்கையோடும் தங்களது சேவையைத் தொடர்வார்கள்.

 

-தெ.சு.கவுதமன்

 

 


 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.