Skip to main content

அமைச்சரின் அண்ணனிடம் டீலிங்! குடிபோதையில் எகத்தாளம்! -நடவடிக்கை எடுத்த சிறைத்துறை!

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

 

“மதுரை மத்திய சிறைச்சாலை ரொம்பவே ஸ்ட்ரிக்டாம். யாரோ முன்னாள் கைதியாம். பேரு முத்துகிருஷ்ணனாம். அவரு ஜாமீன்ல வெளிய வந்து மதுரைல இருக்கிற ஹெரிடேஜ் ஸ்டார் ஹோட்டல் பார்ல பார்ட்டி வச்சாராம். முத்துகிருஷ்ணன் ஜெயில்ல இருக்கும்போதே உதவி ஜெயிலர் முனியாண்டி எல்லா வசதியும் பண்ணிக் கொடுத்தாராம். அந்த நட்புல, முனியாண்டியும், முதுநிலை காவலர்களான மணியும் மூர்த்தியும் அந்தப் பார்ட்டியில் குஷியா கலந்துக்கிட்டாங்களாம். இந்தத் தகவல், மதுரை மத்திய சிறை சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு தெரிஞ்சு போச்சாம். நேர்மையான அதிகாரியாச்சே! மூணு பேரையும் சும்மா விடுவாங்களா? சஸ்பென்ட் பண்ணிட்டாங்களாம்.”
 

bar



-சிறைத்துறையின் இந்த நடவடிக்கையை கலாய்க்கும் விதத்தில் நம்மிடம் சொன்ன  ‘சிறை பட்சி’  “உண்மையிலேயே நடந்தது என்னன்னா..?” என்று அந்த விவகாரத்தை விவரித்தது. 

 

madurai central jail


தமிழக அமைச்சர் ஒருவரின் அண்ணன் முன்னிலையில்தான், இரண்டு துறைகள் சம்பந்தப்பட்ட ‘டீலிங்’ அனைத்தும் நடந்துவருகிறது. மகன் குறித்த சொந்தக் கவலை ஒருபுறம் இருந்தாலும், தான் குஷியாக இருப்பதற்கு அந்த அண்ணனுக்கு மதுரைதான் வசதியாக இருக்கிறது. அதனால், அடிக்கடி மதுரைக்கு வருவார்.  அப்படி ஒரு விசிட்டாகத்தான், ஸ்டார் ஹோட்டலான ஹெரிடேஜ் மதுரைக்கு அன்று வந்தார். மதுரை மத்திய சிறை,  தனது வழக்கமான கவனிப்பை, முதல்நிலை தலைமைக் காவலரான நாகேந்திரபாண்டியன் மூலம் அவருக்குச் செய்தது. அதற்காகவே ஹெரிடேஜ் ஹோட்டலுக்குப் போனார் நாகேந்திரபாண்டியன். அப்போதுதான், எதிர்பாராதவிதமாக உதவி ஜெயிலர் முனியாண்டியையும், முதுநிலை காவலர்கள் மணியையும் மூர்த்தியையும் ஹெரிடேஜ் பாரில் சந்திக்க நேர்ந்திருக்கிறது.  


 

மத்திய சிறையில் பணி என்றாலும்,  ‘லம்ப்’ ஆக வருவாய் ஈட்டுவதற்கு, வளமான இன்னொரு தொழிலை சிலர் ‘சைடு பிசினஸ்’ ஆகப் பார்த்து வருகிறார்கள்.  அந்த விஷயமாக அமைச்சரின் அண்ணனைச் சந்தித்து ‘டீல்’ நடத்தவே நாங்களும் வந்திருக்கிறோம் என்று அந்தச் சந்திப்பின்போது, நாகேந்திரபாண்டியனிடம், உதவி ஜெயிலர் முனியாண்டி தரப்பு போதையில் தெனாவட்டாகப் பேசியிருக்கிறது.  “நான் மந்திரியின் அண்ணனைப் பார்க்க வந்தேன்..” என்று நாகேந்திரபாண்டியன் அழுத்தமாகச் சொல்ல.. “நாங்க மட்டும் என்னவாம்? அந்த நொண்ணனைப் பார்க்கத்தான் வந்தோம். நாங்களும் மந்திரி வரைக்கும் பணம் கொடுத்துத்தான் எல்லாமும் பண்ணுறோம்.  எங்களுக்கு மந்திரியையும் தெரியும். அவரோட அண்ணனையும் தெரியும்.” என்று உச்சஸ்தாயியில் உளறியிருக்கின்றனர்.  

 

police



ஸ்டார் ஹோட்டல் பாரில், பலர் முன்னிலையில் மந்திரியின் பெயர் நாறிவிட,  இந்த விவகாரம், சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆபாஷ்குமார் வரை போனது.  அதன்பிறகுதான், மற்ற விஷயங்களை வசதியாக மறைத்துவிட்டு,  ஜாமினில் வெளிவந்த கைதியுடன் மது அருந்தினார்கள் என்பது பெரிதுபடுத்தப்பட்டு, மூவரையும் சஸ்பென்ட் செய்து உத்தரவு பிறப்பித்துவிட்டார் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா. 

 

police



இது சம்பந்தமாக அந்தத் தொழில் நடத்தும் ஒருவரிடம் பேசினோம்.  “அமைச்சர் அண்ணனுடன் சந்திப்பா?” என்று கேட்டுவிட்டு,   “முன்பு இந்தத் தொழிலில் கொடி கட்டிப்பறந்த ஒருவர் ஜெயலலிதாவிடமே நேரில் பேசும் அளவுக்கு செல்வாக்காக இருந்தார். அப்புறம் இன்னொருவரிடமிருந்தும்  அந்தத் தொழில் பறிக்கப்பட்டது. தற்போது, தமிழகம் முழுவதும் அந்தத் தொழிலில்  உச்சத்தில் இருப்பவர்கள் புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த இருவர்தான்.  திண்டுக்கல்காரரின்  அக்கா மகன்கள் இருவரைக்  ‘கம்பெனி’ என்று அழைக்கிறார்கள்.  இவர்களிடம் கப்பம் கட்டிவிட்டால் போதும். அந்தந்த மாவட்டங்களில் வருவாய்த்துறையிலிருந்து காவல்துறை வரை எந்தத் தொந்தரவும் வராமல் பார்த்துக்கொள்வார்கள்.   ஃபைல் க்ளியர் பண்ணுவது போன்ற  தொடக்க வேலைகளை  அமைச்சரின் அண்ணன் பார்த்துக்கொள்கிறார். அவரிடம் டீலிங் நடத்துவது இங்கே பலருக்கும் பிடித்தமானது. விரும்பியே அள்ளிக்கொடுப்பார்கள். அவருடைய கைக்குப் பணம் போய்விட்டால் கொடுத்தவர்களின் தேவை பூர்த்தியாகிவிடும். அப்படி ஒரு நல்ல பெயர் அவருக்கு உண்டு.” என்றனர்.  


 

நாம் அமைச்சரின் அண்ணனைத் தொடர்பு கொண்டோம். “சொல்லுங்க..” என்றவர்,  ‘மதுரை மத்திய சிறைச்சாலையில் மூவர் சஸ்பென்ட் ஆனது குறித்து..’ என்று சொல்ல ஆரம்பித்ததுமே வேகமாக லைனைத் துண்டித்தார். அடுத்து நம் லைனுக்கு வரவேயில்லை. 
 

ஆளும் கட்சியினர் ஆசியுடன் தமிழகமே சுரண்டப்படும்போது, மத்திய சிறையில் மூவர் பணியிடை நீக்கம் என்பதை,   வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே கருத வேண்டியிருக்கிறது. 


 

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.