Skip to main content

“கோடிகள் இல்லை... கொள்கைதான் இருக்கு..!” சீண்டிய தயாநிதி... கொந்தளித்த பா.ம.க..! முதல்வர் மாவட்டத்தில் ரசாபாசம்!

Published on 23/12/2020 | Edited on 23/12/2020

 

dayanidhi maran about PMK and reaction PMK members
                                                    கோப்புப் படம்

“ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கும் கட்சியுடன்தான் பா.ம.க. கூட்டணி வைக்கும்; அவர்களுக்குக் கொடுக்கும் அளவுக்கு தி.மு.க.விடம் கோடிகள் இல்லை; கொள்கைகள்தான் இருக்கிறது” என தயாநிதி மாறன் எம்.பி, சொன்ன ஒரு கருத்து, பா.ம.க.வினரிடையே கடும் உஷ்ணத்தைக் கிளப்பி விட்டிருக்கிறது.


 

'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பேரில் தி.மு.க.வினர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். தயாநிதி மாறன் எம்.பி., சேலம் மேற்கு, ஓமலூர் தொகுதிகளில் கடந்த இரு நாள்களாக பரப்புரையில் ஈடுபட்டார். டிச.21ஆம் தேதி, கட்டுமானத் தொழிலாளர்கள், வெள்ளித் தொழிலாளர்கள், கைவினைஞர்கள், விவசாயத் தொழிலாளர்கள், உருக்காலை, மேக்னசைட் தொழிலாளர்கள் என ஒவ்வொரு பிரிவினராகச் சந்தித்துக் கலந்துரையாடினார். பொதுமக்கள் சந்திப்பும் நடந்தது.


 

டிச.22ஆம் தேதி, பனை, செங்கல் சூளை உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கரும்பாலை உரிமையாளர்கள், கரும்பு விவசாயிகள், மலர் விவசாயிகள், வியாபாரிகள், பழங்குடியினரிடம் கலந்துரையாடினார். சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி ஆகியோர் எங்கெங்கு பேச வேண்டும், ஒவ்வொரு பகுதியின் தன்மை, மக்களின் வர்க்க நிலை குறித்தெல்லாம் விரிவாகவே குறிப்புகள் தயாரித்துக் கொடுத்து இருந்தனர்.
 

 

எல்லா இடங்களிலுமே தயாநிதி மாறன், மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்கள், குடியுரிமைச்சட்டம் மற்றும் அ.தி.மு.க. அரசின் ஊழல்கள் ஆகிய மூன்று அம்சங்களைத் தவறாமல் பேசினார். கிராமப்புறங்களில் தி.மு.க.வினர் மட்டுமின்றி, பொதுமக்களும் அவரைக் காண ஆர்வத்துடன் திரண்டு வந்திருந்தனர். குறிப்பாக, வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேசும்போது பல இடங்களில் கைத்தட்டல்களும் எழுந்தன. 

 

 

இந்த தேர்தல், உங்களுக்கானத் தேர்தல் மட்டுமல்ல; உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற தேர்தல்; புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

ஆனால், அ.தி.மு.க.வின் ஒரே ஒரு எம்.பி.யான ரவீந்திரநாத் ஆதரித்து வாக்களித்தார். ராஜ்யசபா எம்.பி. அன்புமணியும் வேளாண் சட்டத்தை ஆதரித்தார். அ.தி.மு.க.,- பாஜக கூட்டணி மக்களுக்கு துரோகம் செய்கின்றன என்று தயாநிதி பேசும்போது மக்களிடையே பரவலான வரவேற்பு இருந்தது.

 

நேற்று ஓமலூர் தொகுதியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தி.மு.க. கூட்டணிக்கு பாமக வருமா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு தயாநிதி மாறன், “கடந்த தேர்தலின்போது அ.தி.மு.க.விடம் 400 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டுதான் பா.ம.க., அக்கட்சியுடன் கூட்டணி வைத்தது. ஒருவேளை பா.ம.க., தி.மு.க. கூட்டணிக்கு வருவதாக இருந்தால் இப்போது 500 கோடி, 1,000 கோடி ரூபாய் கேட்பார்கள்.

 

 

அவர்களுக்கும் பணம் கொடுத்து கூட்டணியில் சேர்க்கும் அளவுக்கு தி.மு.க.விடம் கோடிகள் இல்லை. கொள்கைகள் மட்டுமே இருக்கிறது. எம்.பி.சி.க்கு இட ஒதுக்கீடு, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு எல்லாம் கலைஞர் ஆட்சியின்போதே வழங்கப்பட்டது. தேர்தல் நேரத்தில்தான் அவர்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்துவார்கள். இதெல்லாமே பா.ம.க. நடத்தும் தேர்தல் கால அரசியல் நாடகம்'' எனச் சொன்னார். 

 

 

தயாநிதி மாறன் சொன்ன இந்தக் கருத்து, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவ, பா.ம.க. தரப்பு ரொம்பவே கொதிப்படைந்தது. உடனடியாக பா.ம.க. மாநில துணைச்செயலாளர் அருள், தயாநிதி மாறனுக்குக் கண்டனம் தெரிவித்து பேட்டி அளித்தார்.

 

ஆரம்பத்தில், ஒருவரின் கருத்துக்கு எதிர்த்தரப்பின் எதிர்வினை எல்லாமே கருத்தியல் மோதலாகத்தான் இருந்தது.

 

dayanidhi maran about PMK and reaction PMK members

 

நேற்று இரவு 7 மணியளவில், பொட்டியபுரத்தில் பூ வியாபாரிகளுடன் கலந்துரையாடலை முடித்துவிட்டு, காடையாம்பட்டி அடுத்த கண்ணப்பாடி அருகே பழங்குடி மக்களைச் சந்திப்பதற்காக தயாநிதி மாறன் தனது பரப்புரை வேனில் சென்று கொண்டிருந்தார்.

 


அப்போது, திடீரென்று பா.ம.க. நிர்வாகிகள் அண்ணாமலை, மாணிக்கம் ஆகியோர் தலைமையில் நூறுக்கும் மேற்பட்டோர் கையில் கறுப்புக்கொடி ஏந்தியபடி தி.மு.க. மற்றும் தயாநிதி மாறனுக்கு எதிராகச் சாலையோரம் நின்றபடி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். என்ன ஏதென்று அவதானிப்பதற்குள் தயாநிதி மாறன் வந்த பரப்புரை வேன், அந்த கும்பலைக் கடந்து சென்று விட்டது. 

 


ஆனால், பா.ம.க.வினர் பின்னர் சாலை மறியலில் இறங்கினர். போதிய மின்விளக்கு வெளிச்சம் இல்லாத பகுதி என்பதோடு, தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என தி.மு.க. நிர்வாகிகளும் ரொம்ப ஜாக்கிரதையாகவே நிலைமையைக் கையாண்டனர். உடனடியாக மாவட்ட எஸ்.பி., ஓமலூர் டி.எஸ்.பி. உள்ளிட்டோருக்குத் தகவல் கொடுத்தனர். 

 

dayanidhi maran about PMK and reaction PMK members

 

இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு கும்பல் கல் வீச்சிலும் ஈடுபட்டது. இருதரப்புமே கல்வீச்சில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இதில், பார்த்திபன் எம்.பி., சென்ற கார் லேசாகச் சேதம் அடைந்துள்ளது. பெங்களூருவிலிருந்து சேலம் நோக்கி வந்த ஒரு கார் கண்ணாடியும் சேதம் அடைந்தது. தி.மு.க. தொண்டர்களும் களத்தில் இறங்க, இருதரப்பினருக்கும் இடையே லேசாகக் கைகலப்பும் நடந்தது.

 

 

ரசாபாசம் ஆகிவிடும் சூழல் உருவானது. பா.ம.க.வினர் கறுப்புக்கொடி கட்டி வந்த தடிகளால் தாக்கத் தொடங்கினர். அதற்குள் ஓமலூர் டி.எஸ்.பி. தலைமையில் காவல்துறையினரும் அங்கு குவிந்து விட, நிலைமை கட்டுக்குள் அடங்கியது. காவல்துறையினர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். 


 

பா.ம.க.வினர் திடீரென்று இப்படியான சம்பவத்தில் ஈடுபடுவார்கள் என தி.மு.க. கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். அதனால்தான் சுதாரித்துக் கொள்வதற்குள் அவர்கள் சாலையில் அமர்ந்ததுடன், கல் வீச்சிலும் ஈடுபட்டனர் என்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க., பா.ம.க. ஆகிய இருதரப்பும் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றன. 


 

இந்த திடீர் தாக்குதலுக்குப் பின்னால் வேறொரு சம்பவம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 


 

அதாவது, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் சுழன்றடித்து வரும் உதயநிதி ஸ்டாலின், டிச. 22ஆம் தேதி, திடீரென்று மறைந்த காடுவெட்டி குருவின் வீட்டுக்கு நேரில் சென்றார். அங்கு குருவின் மகன் கனல் அரசன், அவருடைய தாயார் ஆகியோரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன், குருவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உதயநிதியை வரவேற்று, அவரின் தலையை வாஞ்சையுடன் தொட்டு ஆசீர்வதித்து இருக்கிறார் குருவின் மனைவி. 

 

dayanidhi maran about PMK and reaction PMK members

 

பா.ம.க.வின் முகமாக இருந்த காடுவெட்டி குரு, மரணப்படுக்கையில் இருந்தபோது அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் அவரை நிராதவராக விட்டுவிட்டதாக அப்போது சர்ச்சை எழுந்தது. இந்தநிலையில், காடுவெட்டியாரின் குடும்பத்தின் மீதான தி.மு.க.வின் இணக்கமான போக்கு, பா.ம.க.விடம் இருந்து வன்னியர் வாக்குகளைக் கணிசமாகப் பிரித்து விடுமோ என அக்கட்சி அஞ்சுகிறது.

 

இதையெல்லாம் மனதில் கொண்டுதான், சேலத்தில் தயாநிதி மாறனைத் தாக்கும் திட்டத்துடன் பா.ம.க. களம் இறங்கியிருப்பதாகவும் தி.மு.க. தரப்பில் ஒரு தகவல் சிலர் சொல்கிறார்கள்.

 

இதுபற்றி பார்த்திபன் எம்.பி.,யிடம் கேட்டபோது, ''திமுக கூட்டணியில் பா.ம.க. சேருமா என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேட்டபோது, அதற்கு தயாநிதி மாறன் அக்கட்சிக்கு ஆயிரம் கோடி, ஐந்நூறு கோடி கொடுத்து கூட்டணி வைக்கும் அளவுக்கு தி.மு.க.விடம் பணம் இல்லை.

 

எங்களிடம் கொள்கைகள் மட்டும்தான் இருக்கு. அ.தி.மு.க.தான் அவர்களைப் பணம் கொடுத்து கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும். 

 

dayanidhi maran about PMK and reaction PMK members
                                                     பார்த்திபன் எம்.பி.

 

இட ஒதுக்கீடு தொடர்பாக அக்கட்சி நாடகம் நடத்துகிறது என்றும் சொன்னார். எப்படி எங்களைக் கொச்சைப்படுத்தலாம் என்று பா.ம.க.வினர் ஒரு பத்து பேர் கறுப்புக்கொடி எடுத்துக்கிட்டு போராட்டம் நடத்தினர்.

 

நாங்களே பேசி சரி செய்துவிட்டோம். சிலர் வாட்ஸ்அப்பில் தயாநிதி மாறன் அளித்த பேட்டியைப் பகிர்ந்து சாதாரண விஷயத்தைப் பெரிதுபடுத்துகிறார்கள். இதில் ஒன்றுமே இல்ல... நத்திங்...,'' என்றார். 

 

இதுகுறித்து பா.ம.க. மாநில துணை செயலாளர் அருளிடம் கேட்டதற்கு, ''தயாநிதி மாறன் எங்கு போனாலும் கறுப்புக்கொடி காட்டுவோம் என்று என் மன ஆதங்கத்தைத் தெரிவித்தேன். காடையாம்பட்டி அருகே தி.மு.க.வினர் சென்றபோது எங்கள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டினர்.

 

அப்போது தி.மு.க.வினர் முதலில் கல் வீச்சில் ஈடுபட்டனர். அவர்கள் தாக்கும்போது நாங்கள் எப்படி சும்மா இருக்க முடியுமா? பதிலுக்கு நாங்களும் தாக்கினோம். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு 40 வருஷமாகப் போராடி வருகிறோம். அதை தயாநிதி மாறன் அரசியல் நாடகம் என்று பேசியது தவறு. 
 

 

dayanidhi maran about PMK and reaction PMK members
                                                                அருள்

பா.ம.க. கூட்டணியில் சேர 1,000 கோடி ரூபாய் கேட்கும் என்றதும் கண்டிக்கத்தக்கது. ஜனநாயக ரீதியில்தான் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினோம். தி.மு.க.வினர் தாக்கத் தொடங்கியதால் நாங்களும் தாக்குதலில் ஈடுபட வேண்டியதாயிற்று. தயாநிதி மாறன் எப்போது சேலம் வந்தாலும் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.