Skip to main content

தினமும் லேட்டாக வந்த மகள்... தந்தையை பற்றி போலீஸிடம் பொய்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Published on 29/10/2019 | Edited on 30/10/2019

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்ற தாயை மகளே காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ஹயத் நகரில் வசித்து வருபவர் சீனிவாஸ். இவருடைய மனைவி ரஞ்சிதா. இந்த தம்பதிக்கு கீர்த்தி என்ற மகள் உள்ளார். இவர் விசாகபட்டணத்தில்  இருக்கும் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். லாரி டிரைவரான சீனிவாஸ் வேலைக்கு சென்று விட்டு நான்கு நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மகள் கீர்த்தியிடம் ரஞ்சிதா எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு கீர்த்தி நான் கல்லூரிக்கு சென்று விட்டேன். அதனால் எனக்கு தெரியவில்லை என்று தனது தந்தையிடம் கூறியுள்ளார். பின்பு சீனிவாஸும், கீர்த்தியும் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் ரஞ்சிதாவை காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர். 

 

incident



இது பற்றி போலீஸார் முதலில் கீர்த்தியிடம் விசாரித்துள்ளனர். அப்போது எனது அப்பா மீது எனக்கு சந்தேகம் உள்ளது. அவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து எனது அம்மாவை அடித்து துன்புறுத்துவார். அதனால் அவர் கொலை  செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார். அதன் பின்பு சீனிவாஸிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் நான் நான்கு நாட்கள் வேலைக்கு சென்றுவிட்டேன், வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை என்று கூறியுள்ளார். அதன் பின்பு ரமணாப்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தின் அருகில் அழுகிய நிலையில் ஓர் பெண் சடலம் இருப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது. அந்த உடலை கைப்பற்றிய போலீஸாருக்கு அது ரஞ்சிதாவின் உடல் என்று உறுதியானது. இதற்கு பிறகு கீர்த்தி மீது போலீஸாருக்கு அதிக சந்தேகம் வந்துள்ளது. 

 

ranjitha



பின்பு கீர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் பெரும் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதில் கீர்த்தி தனது வீட்டருகே சசி எனும் வாலிபரை காதலித்து வந்துள்ளார். தினமும் சசியுடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு லேட்டாக வந்துள்ளார். இதை கீர்த்தியின் அம்மா ரஞ்சிதா கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கீர்த்தி தனது காதலன் சசியுடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு ரொம்ப லேட்டாக வந்துள்ளார். இதனால் கீர்த்தியின் அம்மா ரஞ்சிதா இனிமேல் இப்படி வந்தால் உனது அப்பாவிடம் கூறிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பிறகு தான் தனது அம்மாவை கொலை செய்ய கீர்த்தி திட்டம் தீட்டியுள்ளார் அதற்கு காதலனும் உடந்தையாக இருந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.


மேலும் விசாரணையில், ரஞ்சிதா இரவில் தூங்கும் போது தனது காதலன் சசியை வீட்டிற்கு வரவழைத்து ரஞ்சிதாவின் கை, கால்களை இறுக்க பிடிக்க சசியிடம் கூறியுள்ளார். அதன் பின்பு தனது தாயின் கழுத்தை நெரித்து கீர்த்தி கொன்றுள்ளார். கொலை செய்து விட்டு ரஞ்சிதாவின் உடலை வீட்டிலேயே வைத்துள்ளார் கீர்த்தி. பிறகு உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து ரஞ்சிதாவின்  உடலை  காதலனோடு சேர்ந்து ரயில் தண்டாவாளத்தில் போட்டு விட்டு வந்துள்ளார். காதலுக்காக பெற்ற மகளே தனது தாயை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

 

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.