Skip to main content

பா.ரஞ்சித் மீதான விமர்சனங்கள்! - படைப்பு ரீதியா பகையுணர்வா?

Published on 10/05/2018 | Edited on 10/05/2018

நடிகர் ரஜினிகாந்த் - இயக்குனர் ரஞ்சித் கூட்டணியில் வெளிவர இருக்கும் இரண்டாவது படம் காலா. மும்பை வாழ் தமிழ் மக்களின்  வாழ்வியலை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்தப் படம் கபாலி ஏற்படுத்திய தாக்கத்தினாலும் நானா படேகர், ஹுமா குரேஷி போன்ற பிரபல ஹிந்தி நடிகர்கள் இடம் பெற்றிருப்பதாலும் இந்திய அளவில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

 

kaala ranjith



மேலும் தற்போது ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக செயல்படும் மோடி தலைமையிலான இந்திய அரசு ஆட்சியில் இருக்கும் சூழலில், ரஞ்சித்தின் அடுத்த படத்திற்கு அவர் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். தன் அரசியல் நிலைப்பாட்டினாலும், சாதி முறையினையும்  அடித்தட்டு மக்கள் மீது அதன் விளைவுகளையும் பற்றி  அடிக்கடி கேள்வி கேட்பதாலும் கபாலி படம் வெளியான நேரத்திலிருந்தே இயக்குனர் ரஞ்சித் படைப்பைத் தாண்டி சாதி ரீதியாகவும் பலவகையான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில் ரஞ்சித்தின் அடையாள அரசியலும், ஒடுக்கப்பட்டவர்களுக்கான சிந்தனையும் வலுவாக இடம் பெற்றிருக்கும் காலா திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தில் பல முரண்பாடான விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியாகியுள்ளன. ’காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‘ என அதிமுக  அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

குத்து, ராப், ஹிப்-ஹாப், மெலடி வகைகள் என 9 பாடல்கள் உள்ளடங்கியுள்ளது காலாவின் ஆல்பம். மும்பை தாராவி பகுதியை சார்ந்த 'டோப்அடெலிக்ஸ்' (dopeadelicz) என்னும் குழுவினரும் இயக்குனர் ரஞ்சித்தினால் சில மாதங்கள் முன்பு ஒன்று சேர்க்கப்பட்ட  'தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' (The Casteless Collective) இசைக் குழுவும் இப்படத்தில் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. சிலர் பாடல்களின்  உயிரோட்டமான ஒலி அமைப்பையும், வரிகளையும்  பாராட்ட, பிறர் பாடல்கள் எதிர்பார்த்த அளவில் பாதியளவு கூட  இல்லை என ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

 

ranjith directs rajnikanth


 

 


மேலும் சிலரோ, 'பாடல்களை விமர்சனம் செய்தால் சாதி வெறியன் என முத்திரை குத்தி விடுவார்கள்' என பகடி செய்து வருகின்றனர். இது, கடந்த சில நாட்களாகவே, அதாவது காலா படத்தின் டீஸர் வெளியான சமயத்தில் இருந்தே வைக்கப்படும் கேலி. எல்லா நகைச்சுவையும் ஒருவித உயர்வு  மனப்பான்மையின் வெளிப்பாடு  என்பது கிரேக்க தத்துவவாதி அரிஸ்டோட்டலின் கூற்று . இது எல்லா இடங்களில் பொருந்தாவிட்டாலும் இங்கே கனகச்சிதமாய் பொருந்தும். ரஞ்சித்தின் கலை முயற்சிகளை அவரவர் மதிப்பீட்டினை அளவுகோலாக வைத்து கேலியோ விமர்சனமோ செய்வது வேறு, அவர் கலைப் படைப்பின் மீதுள்ள தங்கள் மதிப்பீட்டினை காரணம் காட்டி அவரின் சமூக நிலைப்பாட்டையும் அவர் எழுப்பும் எதிர்க்குரலையும் கேலி செய்வது வேறு . 

  pa.ranjith on stage



இங்கே வெளிப்படும் அரிஸ்டாட்டில் கூறும் உயர்வு மனப்பான்மை சாதி தருவது. இந்த நகைச்சுவை தற்கால தமிழ் சூழலில் ரஞ்சித்தின்  முக்கியத்துவத்தையும் அவர் பேசும் அரசியலையும் சிறுமைப்படுத்தும் முயற்சி. தெரிந்தோ தெரியாமலோ தன் கலையையும் அரசியலையும் பிரித்துப்பார்க்க முடியாத ஒரு கட்டத்திற்கு இப்பொழுது ரஞ்சித் வந்துவிட்டார். அவர் சினிமா வாழ்வில் நிகழும் ஒவ்வொரு சறுக்கலும் அவர் அரசியல் பேச நினைக்கும் குரலினை நசுக்க பயன்படுத்தப்படும். 

 

 


இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரை இரண்டாவது முறையாக இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்திற்கு அவரது படைப்புத்திறன் மூலமாக  கிடைத்துள்ளது. தனக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, முடிந்த அளவு ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியலை பேசிவரும் அவர், இந்த விமர்சனங்களையும் தன் படங்களின் வெற்றி மூலம் கடந்து, தான் பேச நினைப்பதை தன் கலையின் வாயிலாக பேசி, தான் குரல் கொடுக்க நினைக்கும் மக்களின் குரலாக ஒலிப்பார் என எதிர்பார்ப்போம்.  

 

 

 

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.