Skip to main content

பதவி போனபிறகு அரசியலில் அனாதைகளாக நிற்பார்கள்: சி.ஆர்.சரஸ்வதி கடும் தாக்கு

Published on 10/03/2018 | Edited on 10/03/2018


அதிமுக அமைச்சர்கள் எல்லோருமே பதவிக்காக இன்றைக்கு எல்லா துரோகங்களை செய்கிறார்கள். பதவி போன பிறகு இவர்கள் எல்லோரும் அரசியலில் அனாதைகளாக நிற்பார்கள் என கூறியுள்ளார் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி.
 

டி.டி.வி. தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் கிடைத்தது தொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த சி.ஆர்.சரஸ்வதி,
 

ஆர்.கே.நகரில் பொதுமக்கள் குக்கர் சின்னத்திற்கு மிகப்பெரிய வெற்றியை தந்தார்கள். அடுத்து உள்ளாட்சித் தேர்தல் வந்தால் குக்கர் சின்னமே பயன்படுத்த அனுமதி கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றமும் குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. விரைவில் நாங்கள் எதிர்பார்க்கும் கட்சி பெயரும் வந்துவிடும். 
 

நாங்கள் நீதிமன்றம் சென்றவுடனேயே சசிகலாவால் முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்த எடப்பாடியும், தினகரனால் சென்னை அழைத்துவரப்பட்ட ஓ.பன்னீர்செல்வமும் தினகரன் அணிக்கு குக்கர் சின்னமும், கட்சி பெயரும் வழங்கக் கூடாது என்று மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் நீதிமன்றம் விசாரணை நடத்தி ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. 

 

CR Saraswathi


 

அதிமுக அம்மா என்ற பெயரை வைக்கக்கூடாது. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று ஜெயக்குமார் கூறியுள்ளாரே?
 

எங்களுக்கு இந்த சின்னத்தை ஒதுக்கக்கூடாது, கட்சி பெயரை கொடுக்கக்கூடாது என்று சொல்வதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆட்சியில் இருப்பதால் மத்தியில் ஒட்டிக்கொண்டார்கள். அதனைப் பயன்படுத்தி அஇஅதிமுக என்ற கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் வைத்துள்ளனர். அப்படியிருந்தும் அவர்களால் ஆர்கே நகரில் வெற்றிபெற முடியவில்லை. ஆனால் நாங்கள் சுயேட்சையாக நின்று குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளோம். மக்கள் இவர்களை ஏற்கவில்லை என்பதற்கு ஆர்கே நகர் தேர்தல் முடிவே போதும். எங்கள் அணி சார்பாக 3 பெயர்களை கொடுத்துள்ளோம். நாங்கள் விரும்பியபடியே அதில் ஒன்று எங்களுக்கு ஒதுக்கப்படும். மக்களை சந்திப்போம். வெற்றி பெறுவோம். இதேபோல் 18 எம்எல்ஏக்கள் வழக்கிலும் எங்கள் அணிக்கு சாதகமாக தீர்ப்பு வரும். 
 

குக்கர் சின்னத்தால் தமிழகத்தில் எந்த மாற்றமும் கொண்டு வரமுடியாது என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளாரே?
 

நோட்டாவைவிட குறைவான வாக்குகள்தான் பாஜகவுக்கு இருப்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். இதற்கு மேல் என்ன சொல்வது.
 

உலகத்திலேயே கட்சியே இல்லாமல் ரோட்டில் செல்பவர்களுக்கெல்லாம் பதவியை கொடுத்து வருகிறார் டிடிவி தினகரன் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பேசியிருக்கிறாரே?
 

எங்களிடம் கட்சி இல்லை என்கிறார்கள். பிறகு ஏன் மாவட்ட வாரியாக தினகரன் ஆதரவாளர்களை நீக்குகிறோம் என்று அறிவிக்கிறார்கள். நீக்குவதோடு இல்லாமல், புதிதாக ஏன் யாரையும் நியமிக்கவில்லை. அதிமுகவில் உறுப்பினரை சேர்ப்பதாக சொன்னார்கள். எத்தனைப் பேரை சேர்த்துள்ளார்கள். தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் கடையை விரித்தார்கள். ஒருத்தர் கூட அவர்களிடம் போய் சேர தயாராக இல்லை. நரம்பில்லாத நாக்கு என்பார்கள். அதற்கு உதாரணமாக உதயகுமாரை சொல்லலாம். ஜெயலலிதா சமாதியில் வணங்கிவிட்டு, பின்னர் சசிகலா காலில் சாஸ்தாங்கமாக விழுந்து நீங்கதான் பொதுச்செயலாளர், நீங்கள்தான் முதல் அமைச்சர், நீங்கள் போட்டியிட என்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று சொல்லிவிட்டு, ஒ.பன்னீர்செல்வத்தை துரோகி என கடுமையாக தாக்கி பேசினார். மறுநாள் ஓபிஎஸ்ஸை தியாகி என்று பேசிவிட்டு ஓடினார். 
 

இந்த மந்திரிகளையெல்லாம் கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்பலாம். நேற்று என்ன பேசினோம், அதற்குள் இப்படி பேசலாமா என மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். உதயகுமார் மந்திரி பதவியை இழந்தால் அவருடைய சொந்த ஊருக்கே போக முடியாது. தன்னை வளப்படுத்திக்கொண்டிருக்கிறார். தனக்கு வேண்டிய சொத்துக்களை சேர்த்துக்கொண்டுள்ளார். மக்களுக்கு அவர் எதையுமே செய்யவில்லை. அமைச்சர்கள் எல்லோருமே பதவிக்காக இன்றைக்கு எல்லா துரோகங்களை செய்கிறார்கள். பதவி போன பிறகு இவர்கள் எல்லோரும் அரசியலில் அனாதைகளாக நிற்பார்கள். இவ்வாறு கூறினார். 
 

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.

Next Story

அ.ம.மு.க.வுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கீடு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Allotment of election symbol to AMmK

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க.விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. டி.டி.வி. தினகரன் வரும் 24 ஆம் தேதி தேனியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த பின் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க.விற்கு கேட்ட 2 தொகுதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். எந்தெந்த தொகுதியில் போட்டி என்பதை பா.ஜ.க. அறிவிக்கும். நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. அ.ம.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளில் குக்கர் சின்னத்தில் தான் எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து பின்னர் முடிவெடுக்கப்படும். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத்தான் எங்கள் கட்சி நிர்வாகிகள் விரும்புகின்றனர். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. அதன் அடிப்படையில் ஒரு தொகுதி போதும் என்றுதான் கூறினேன். குறைந்தபட்சம் 2 தொகுதிகளாவது போட்டியிடுங்கள் என பா.ஜ.க. கூறியது” எனத் தெரிவித்திருந்தார்.

Allotment of election symbol to AMmK

இதற்கிடையே வரும் மக்களவைத் தேர்தலில் அ.ம.மு.க.விற்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் டி.டி.வி. தினகரனின் கோரிக்கையை ஏற்று அ.ம.மு.க.விற்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அ.ம.மு.க., பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறது.