Skip to main content

"பெரியாரை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டில் யாரும் கட்சி நடத்த முடியாது.." - முத்தரசன் பேச்சு!

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

பெரியார் நினைவு நாள் கூட்டம் சென்னையில் உள்ள பெரியார் திடலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் பங்கேற்று பெரியார் தொடர்பான கருத்துக்களை பேசினார்கள். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த  முத்தரசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " பெரியார் நினைவுநாள் தற்போது சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. நான் யாரையும் மனதில் வைத்து பேசாமல் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த நாள்தான் இன்று அதிகம் நின்று கொண்டிருக்கிறது. நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கான அவசியம் உள்ளது. அது காலத்தின் கட்டாயமும் கூட. தற்போது பெரியார் தொடர்பாக முகநூலில் தவறான முறையில் சில செய்திகளை பதிவிட்டுள்ளனர். இதற்கு அனைத்து கட்சிகளும் , அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

jk



நான் அதை முதலில் பார்க்கவில்லை, எனக்கு தெரியாது. திமுக தலைவர் தளபதியும் அதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். வேறு சிலரும் அதற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள். ஏனென்றால் பெரியாரை விட்டுவிட்டு வேறு யாரும் தமிழ்நாட்டில் கட்சி நடத்த முடியாது. வேறு சிலர் கண்டனம் தெரிவித்திருந்தாலும் அவர்கள் தற்போது தவறான இடத்தில் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.  இருந்தாலும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கும் சேர்ந்தே வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பெரியார் குறித்து தவறாக பதிவு செய்ததை பிறகு நீக்கியிருக்கிறார்கள். இந்த போடுவது நீக்குவது எல்லாம் அவர்களுக்கே உரிய ஒன்று. நாம் அத்தகைய முறைகளை ஒருபோதும் கையாள்வது கிடையாது. பெரியாரிசம் என்பது விஞ்ஞானம். விஞ்ஞானம் ஒருபோதும் அழியாது. யாராலும் அழிக்க முடியாது. 

 

மார்க்ஸ்சியம் ஒரு விஞ்ஞானம், அதையும் அழிக்க முடியாது. அது மேலும் மேலும் வளரத்தான் செய்யும். ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் விளையாட்டாக நண்பர் ஒருவரை பார்த்து சொன்னேன், எப்போது போனை பார்த்தாலும் பேசிக்கொண்டே இருக்கிறீர்களே, அந்த போனை முதுகில் கட்டிக்கொள்ளுங்களேன் என்று விளையாட்டாக கூறுவேன். ஆனால் இன்று என்ன நடைபெற்று கொண்டுள்ளது. நாம் எல்லோரிடமும் பாக்கெட்டில் செல்போன் உள்ளது. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாதிரி நடக்கும் என்று நினைத்தோமா? அதுதான் விஞ்ஞானம். அதை போலவே பெரியாரின் கருத்துக்களும் விஞ்ஞானத்தை போன்றே இருக்கும், மக்களுக்கு பயனளிக்கும் விதமாக இருக்கும்.

இந்த மேடையில் திருமுருகன் காந்தி கவுரவப்படுத்தப்பட்டுள்ளார். உங்களை இயக்குவது யார் என்று நீதிமன்றமே அவரை பார்த்து கேட்டுள்ளது. இன்று அதற்கான பதில் கொடுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு கூட அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அரசாங்கம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் தேவையா என்று நாம் யோசிக்க வேண்டும். வழக்கு போடுவது ஒரு பிரச்சனையே இல்லை. இந்த சர்க்கார் எதற்கெல்லம் வழக்கு போட்டார்கள் என்று பார்த்தால் வெட்கமாக இருக்கும். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தற்காக வழக்கு போட்டதுதான் இந்த அரசாங்கங்கத்தின் மிக முக்கிய சாதனை. எனவே அவர்கள் வழக்கு போடுவார்கள் என்று நாம் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை. நமக்கான் உரிமைகளை நாம் போராடியாவது பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது" என்றார்.