Skip to main content

OPS - EPS க்கு உற்சாகம் கொடுத்த உயர்நீதிமன்ற உத்தரவு! என்ன செய்ய போகிறார் சசிகலா?

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

court order on a case about admk internal law change

 

அதிமுகவுக்கான உரிமைப்போரில் அண்மையில் வெளியாகியிருக்கும் உயர்நீதிமன்ற உத்தரவு சசிகலாவை அப்செட்டாக்கி, ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இருவருக்கும் உற்சாகம் தந்திருப்பதாக தெரிகிறது. 

 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக கட்சியின் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டார் சசிகலா. இது தற்காலிக ஏற்பாடு எனச் சொல்லப்பட்டாலும், அ.தி.மு.க.வின் சட்ட விதிகளின்படி, சசிகலாவின் நியமனம் செல்லாது என்பதைச் சுட்டிக்காட்டி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு செய்திருந்தார் அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி.யான கே.சி. பழனிச்சாமி. ஆனாலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் முதலமைச்சராவதற்காக அப்போதைய கவர்னர் வித்யசாகர்ராவை சந்தித்து உரிமையும் கோரினார் சசி. அதனை ஏற்பதில் வித்யாசாகர் காலதாமதம் செய்ய, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு அவரை 4 ஆண்டுகாலம் சிறையில் தள்ளியது. அப்போது ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்த காரணத்தால், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிவிட்டு சிறைக்குச் சென்றார் சசிகலா.

 

அதன்பிறகான சில அரசியல் மாற்றங்களுக்கு பிறகு, 2017, செப்டம்பர் 12-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில், பொதுச்செயலாளர் என்ற பதவி ஒழிக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற 2 புதிய பதவிகளை உருவாக்கி, பொதுச்செயலாளருக்குரிய அனைத்து அதிகாரங்களும் இந்த பதவிகளுக்கு மாற்றப்பட்டன. இதற்காக அ.தி.மு.க.வின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பொதுக்குழுவின் ஒப்புதலும் பெறப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்.சும், இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ்.சும் நியமிக்கப்பட்டார்கள். அ.தி.மு.க.விலிருந்து சசிகலாவும், தினகரனும் நீக்கப்பட்டனர்.

 

இதனை எதிர்த்து தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார் சசிகலா. கே.சி.பழனிச்சாமியும் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக மனு செய்தார். இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறுக்கிட்டதால், ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். தலைமைக்கே கட்சியின் பெயரையும், பயன்படுத்தும் உரிமையை கொடுத்தது தலைமைத் தேர்தல் ஆணையம். அதேசமயம், சசிகலாவால் தொடரப்பட்ட வழக்குகள் இப்போதுவரை நிலுவையில்தான் உள்ளன.

 

இந்தநிலையில்தான், திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம் குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், "அ.தி. மு.க.வின் சட்ட விதிகளின்படி பொதுச்செயலாளர் பதவியையும் அதற்குரிய அதிகாரங்களையும் மாற்றவோ, புதிய பதவிகளை உருவாக்கவோ பொதுக் குழுவுக்கு அதிகாரமில்லை. ஆனால், கட்சியின் சட்டவிதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவால் அளிக்கப்பட்டிருந்த கட்சி விதிகளின்படி இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டதா என்பதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை. அதனால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரங்கள் அளித்து திருத்தம் செய்யப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது தவறானது. ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்வதுடன் 2016, டிசம்பர் 5-ல் (ஜெயலலிதா மறைவின்போது) இருந்த அ.தி.மு.க.வின் சட்டவிதிகளை கட்சியினர் கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.

 

இந்த மனு மீது கடந்த 22-ந் தேதி விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு, "அ.தி.மு.க. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்புவரை அ.தி.மு.க. கட்சிதான் ஆட்சியில் இருந்துள்ளது. 2018-க்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அந்த கட்சி போட்டியிட்டிருக்கிறது. பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியால் அளிக்கப்படும் ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்பதில் தவறில்லை. இதில் ஆட்சேபனை இருந்தால் சிவில் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம்''‘என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

 

சசிகலாவுக்கு எதிராக அரசியல் செய்துவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த உத்தரவு பெரிய பூஸ்ட் என்கிற எடப்பாடி ஆதரவு சீனியர்கள், "கட்சியின் சட்ட விதிகளை முன் வைத்துதான் இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி வந்தார் சசிகலா. அவரால் தொடரப்பட்ட வழக்கு எதிர்காலத்தில் ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ்.சிடமுள்ள அதிகாரத்தை பறித்துவிடுமோ என எங்களுக்குக்கூட சந்தேகம் இருந்தது. ஆனால், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். சார்பில் மதுசூதனன் தாக்கல் செய்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதில் முரண்பாடுகளோ, தவறுகளோ இல்லையென்று தற்போது சென்னை உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கும் நிலையில், எதிர்காலத்திலும் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு தான் கிடைக்கும்' என்கிறார்கள் அழுத்தமான நம்பிக்கையுடன்.

 

சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியனிடம் கேட்டபோது, "இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், நிர்வாக ரீதியிலான பணிகளை மட்டும்தான் தேர்தல் ஆணையம் செய்யும். ஒரு கட்சியின் முக்கிய பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் கொடுக்கும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்வது ஆணையத்தின் பணி. அதைத்தான் அ.தி.மு.க. வழக்கில் செய்திருக்கிறது. உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை. மனுதாரர் விரும்பினால் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் என சொல்லியிருக்கிறது. சிவில் நீதிமன்றத்துக்கு வழக்கு வந்தால் அதில் சரியான பரிகாரம் கிடைக்கலாம். அதனால் எங்களுக்கு இது ஆரோக்கியமான தீர்ப்புதான்''‘என்கிறார் உறுதியாக.

 

சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்ததை எதிர்த்து தேர்தல் ஆணையத்திலும் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ள கே.சி.பழனிச்சாமியிடம் இது குறித்து விவாதித்தபோது, "ஒரு கட்சியின் பிரதிநிதி கொடுத்த ஆவணங்களைப் பதிவு செய்துகொள்கிறது ஆணையம். ஆனால், கொடுக்கப்பட்ட ஆவணங்கள், கட்சியின் விதிகளின்படி தவறானது என ஆதாரப்பூர்வமாக ஆணையத்தில் முறையிட்டாலும் அதனை ஆய்வு செய்கிற வேலை அதற்கு கிடையாது. கட்சியின் சின்னம் யாருக்கு என்பதை மட்டும்தான் ஆணையம் முடிவு பண்ணுகிறது. அதேசமயம், கட்சியின் சட்டவிதிகளுக்கு முரணாக ஆவணங்கள் இருந்தால் சிவில் கோர்ட்டில் முறையிட்டு பரிகாரம் தேடுங்கள் என சொல்கிறது நீதிமன்றம்.

 

என்னுடைய வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. நான் கேட்டது கட்சிக்கு டைரக்ஷன் கொடுங்கள் என்பதுதான். அது சிவில் சூட்டில்தான் வருகிறது. அதாவது, சசிகலா -தினகரனுக்கும், இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ்.சுக்கும் இடையிலான இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சிஸ்தானி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் சில உத்தரவை பிறப்பித்திருக்கிறது. குறிப்பாக, 52 முதல் 55 வரையிலான பத்தியில், பொதுச்செயலாளர் என்றோ, ஒருங்கிணைப்பாளர் என்றோ எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அடிப்படை உறுப்பினர்களால்தான் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற சட்ட விதியை திருத்தியது தவறு. கட்சியின் தலைமையை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு இல்லை. தொண்டர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை பறித்தது தவறு என்று டிவிஷன் பெஞ்ச் தனது உத்தரவில் சொல்லியிருக்கிறது.

 

அந்த வகையில், "இந்த டிவிஷன் பெஞ்ச் சொன்ன தீர்ப்பை அ.தி.மு.க. கட்சி அமல்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுங்கள்' என்று டெல்லி ஹை-கோர்ட்டில் நான் போட்டுள்ள வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. நான் இந்த வழக்கை 2019-ல் தாக்கல் செய்தபோது, டிவிஷன் பெஞ்ச் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். சென்றிருப்பதால் அதன் முடிவு தெரியாமல் நான் போட்ட வழக்கை விசாரிக்கக்கூடாது என சசிகலா தரப்பில் மனு போடப்பட்டது. அதனால் விசாரணை நிலுவையில் இருந்தது. அதேசமயம், "டிவிஷன் பெஞ்ச் கொடுத்துள்ள தீர்ப்பு செல்லும்' என உறுதி செய்தது உச்சநீதிமன்றம். இதனையடுத்து எனது வழக்கின் விசாரணையும் நடந்தது. ஆனால், கொரோனா விவகாரத்தால் பலமுறை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அக்டோபரில் வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கிறேன்.

 

சென்னை உயர்நீதிமன்றம் சிவில் கோர்ட்டில் பரிகாரம் தேடுங்கள் என சொல்லப்பட்டிருக்கும் நிலையில், எனது வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. அ.தி.மு.க.வின் சட்ட விதிகளை திருத்தம் செய்ததும், பொதுச்செயலாளராக சசிகலாவை பொதுக்குழு தேர்ந்தெடுத்ததும் கட்சியின் சட்டவிதிகளுக்கு முரணானது. அதனால், இரண்டு விசயங்களுமே செல்லாது என சிவில் கோர்ட்டில் தீர்ப்பு வரத்தான் போகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு அதற்கு வழிவகுத்துள்ளது. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., சசிகலா ஆகிய மூவருக்குமே சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மிக பின்னடைவைத் தந்திருப்பதுதான் நிஜம். இந்த மூவரிடமிருந்து கட்சியைப் பாதுகாக்கும் உயரிய தீர்ப்பு எனது வழக்கில் மிக விரைவில் கிடைக்கும்'' என்கிறார் கே.சி.பழனிச்சாமி.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.