Skip to main content

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: செய்யவேண்டியவையும், செய்யக்கூடாதவையும்...

Published on 29/01/2020 | Edited on 31/01/2020

உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் காரணமாக இதுவரை 213 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 7,000 க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் இந்த வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் ஆயிரக்கணக்கான பயணிகள், முழு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இந்தியாவில் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல சீனாவில் உள்ள நூற்றுக்கணக்கான இந்தியர்களை இந்தியா கொண்டுவருவதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

 

corono virus do's and dont's

 

 

சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் தான் இந்த கரோனா என கூறப்படுகிறது. சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ளது இந்த கரோனா வைரஸ். இந்த வைரஸ்கள் பாம்புகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த வைரஸை கட்டுப்படுத்த அதிகாரபூர்வமாக எந்த மருந்துகளும் கண்டறியப்படவில்லை. இப்படியான சூழலில் பொதுமக்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தனிப்பட்ட கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள உலக சுகாதார அமைப்பு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. 

அதன்படி, மக்கள் கரோனா வைரஸிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள... 

சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தியோ அல்லது சானிடைசரை பயன்படுத்தியோ அடிக்கடி தங்களது கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

இருமல் மற்றும் தும்மலின் போது கைகள் அல்லது திசு பேப்பரால் (tissue paper) வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். அத்தபின் கைகளை சுத்தமாக ஒருமுறை கழுவிவிட வேண்டும். 

காய்ச்சல் மற்றும் இருமல் உள்ள எவருடனும் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.

உங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள் மற்றும் முந்தைய பயண வரலாற்றை உங்கள் மருத்துவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்;

விலங்குகளுடன் பாதுகாப்பற்ற நேரடி தொடர்புகளை தவிர்க்க வேண்டும். 

சமைக்காத அல்லது சரியாக வேகவைக்கப்படாத மாமிசங்களை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதேபோல விலங்குகளில் பாலையும் நன்றாக கொதிக்கவைத்தே பயன்படுத்த வேண்டும். 

நேபாளம், இலங்கை உள்ளிட்ட இந்தியாவின் அண்டை நாடுகளிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சூழலில், நமது நாட்டில் இதன் பரவலை தடுக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைகளையும் கடந்து, மக்களும் தனிப்பட்ட வகையில் மேற்கூறிய முன்னெச்சரிக்கை அறிவுரைகளை பின்பற்றுவதும், வைரஸ் பரவலை தடுப்பதற்கு இன்றியமையாததாக பார்க்கப்படுகிறது.  

 

 

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

உளவு பார்ப்பதாக கைதான புறா; 8 மாதங்களுக்குப் பின் விடுவிப்பு!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Pigeon arrested for spying and Released after 8 months

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைகள் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து பூதாகரமாகி வருகிறது. அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்க்கும் இது குறித்து பேசியுள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே, சீனா, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 பகுதிகளின் பெயர்களை மாற்றியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தை அந்நாட்டுடன் சேர்த்து வரைபடத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இப்படி மோதல் போக்கு உருவாகி வரும் நிலையில், சீனாவில் இருந்து நம் நாட்டை உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட புறாவை 8 மாதங்கள் சிறையில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே பிர் பாவ் ஜெட்டி பகுதியில், கடந்த 2022 ஆண்டு மே மாதம் வித்தியாசமாக இருந்த புறா ஒன்று பிடிப்பட்டது. அந்த புறாவின் கால்களில் தாமிரம் மற்றும் அலுமினியத்திலுமான இரண்டு மோதிரங்கள் இருந்தன. மேலும், அந்த புறாவின் இரண்டு இறக்கையின் கீழ் பகுதியில் சீனா மொழியில் எழுதப்பட்ட செய்தி இருந்ததாக கூறப்படுகிறது. 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், சீனாவில் இருந்து உளவு பார்ப்பதற்காக புறா வந்திருப்பதாக சந்தேகமடைந்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக ஆர்சிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த புறா சீனாவில் இருந்து அனுப்பப்பட்டதா? என விசாரணை நடத்தி வந்தனர். மேலும், பிடிப்பட்ட புறாவை மும்பை கால்நடை மருத்துவமனையில் உள்ள கூண்டில் சிறை வைத்தனர். 

இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், பிடிப்பட்ட புறா தைவானில் திறந்தவெளி நீர் போட்டியில் பங்கேற்கும் புறா என்பது கண்டறியப்பட்டது. மேலும், அந்த புறா உளவு பார்ப்பதற்காக வரவில்லை என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, பிடிப்பட்ட புறாவை விடுவிப்பதற்கு போலீசாரிடம் கால்நடை மருத்துவமனை அனுமதி கோரியது. மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்றதை அடுத்து, 8 மாதங்களுக்கு பிறகு பிடிப்பட்ட புறா நேற்று முன்தினம் (30-01-24) விடுவிக்கப்பட்டது.