Skip to main content

சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே மாஸ்க் இல்லையா? நேரம் ஒதுக்காத விஜயபாஸ்கர்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! 

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

ஊரடங்கு நேரத்தில் வாகனத்தை நிறுத்தும் போலீஸ் கூட ஹெல்மெட் இருக்கிறதா? லைசென்ஸ் இருக்கிறதா? என்று கேட்காமல் முகத்தில் "மாஸ்க்' இருக்கிறதா? என்று கேட்டுத்தான் விரட்டியடிக்கிறார்கள். அந்தளவுக்கு, பொதுமக்களே "மாஸ்க்' மாட்டிக்கொண்டு உலாவும் சூழலில், கோரோனா கொடிய நோய்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு ச-95 மாஸ்க் கிடைக்கவில்லை.

2020 மார்ச் முதல் வாரத்திலேயே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேச, மருத்துவச்சங்க பிரதிநிதிகள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் செயலாளர் பீலா ஐ.ஏ.எஸ் ஸையும் சந்திக்க முயற்சித்தார்கள். ஆனால், அமைச்சரும் செயலாளரும் இரண்டுபேருமே டாக்டர்களாக இருந்தும் நேரம் ஒதுக்கப்படவில்லை. முன்பிருந்த சுகாதாரச் செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். யாருடைய கருத்தாக இருந்தாலும் காதுகொடுத்து கேட்பார். அவை மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பயன்படுத்திக்கொள்வார். ஆனால், பீலா ஐ.ஏ.எஸ். வந்தபிறகு யாருடைய கருத்துப் பரிமாற்றமும் இல்லாமல் போய்விட்டது. செயலாளர் பீலாவிடம் துறைரீதியாக பிரச்சனைகளைக் கொண்டு செல்லவேண்டிய டி.எம்.எஸ்., டி.பி.ஹெச்., டி.எம்.இ., ஆகிய மூன்று சுகாதார இயக்குனர்களுமே பேச முடியாமல் திணறிவருகிறார்கள்.

 

admk



இந்தச்சூழலில்தான், கொரோனா தமிழகத்திலும் பரவ ஆரம்பித்தது. நிலைமை மோசமாக ஆரம்பித்த நிலையில்தான் சுகாதாரத் துறை முன்னாள் செயலாளரும் பேரிடர் மேலாண்மைக்குழுச் செயலாளருமான இராதாகிருஷணன் சுகாதாரத்துறைக்கு கூடுதல் செயலளாராக ஈடுபடுத்தப்படுகிறார். அதற்குப்பிறகுதான், மருத்துவ உபகரணங்கள் என்னென்ன இருக்கிறது என்று பட்டியல் எடுக்கும் போதுதான் மிக முக்கிய பி.பி.இ. எனப்படும் புரஃபஷனல் புரடெக்ஷன் எக்யூப்மெண்ட்களான டிஸ்போஸபிள் தொப்பி, டிரிபிள் லேயர் மாஸ்க், என் -95 மாஸ்க், ஹேண்ட் சானிடஸைர், கவுன், பாலித்தின் கண்ணாடி உள்ளிட்ட உபகரணங்கள்கூட இல்லை என்பது தெரியவருகிறது.


அதற்குப்பிறகு, டி.என். எம்.சி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷனிடம் ஆர்டர் கொடுக்கிறது தமிழக சுகாதாரத்துறை. ஆனால், தனியார் துறையினர் ஏற்கனவே வாங்கி விற்பனை செய்து வருவதாலும் பொதுமக்களும் அதிகம் வாங்கிக்கொண்டதாலும் அரசாங்கத்தின் டி.என்.எம்.எஸ்.சி யால் பர்ச்சேஸ் செய்யமுடிய வில்லை.


இந்தநிலையில்தான், மருத்துவக்கல்லூரி டீன்கள், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்களே மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்களை வெளியில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று செயலாளர் பீலா ஆணை பிறப்பித்தார். அதன், விளைவுதான் சென்னை எழும்பூர் தாய்-சேய்நல மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சம்பத் குமாரி, "வெளியில் மாஸ்க் வாங்கிக்கொள்ளுங்கள்' என்று டாக்டர்களுக்கு உத்தரவிட்ட ஆணை பரவி "சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே மாஸ்க் இல்லையா?' என்று பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

dmk

மேலும், 10 ரூபாய் விற்ற சாதாரண மாஸ்க் 30 ரூபாய்க்கும் 90 ரூபாய் விலையுள்ள என் -95 மாஸ்க் 300 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வெளியிலும் மாஸ்க் வாங்க முடியாமலேயே நோயாளிகளுடன் ஆபத்தை சந்திக்க ஆரம்பித்தார்கள் அரசு டாக்டர்கள். அவுட் போஸ்ட்டுகளிலும் மாவட்ட பார்டர்களிலும் 5 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. அதில் பரிசோதனைகளில் ஈடுபடுகிறவர்களுக்கும் மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுக்கவில்லை.

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத் நம்மிடம், பொதுமக்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலே எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு டாக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் அவர் சிகிச்சை அளிக்கும் அத்தனை நோயாளிகளுக்கு எளிதில் தொற்றிவிடும் பேரபாயம் உள்ளது. அப்படியிருக்க, என் -95 மாஸ்க் உள்பட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்களுக்கு உடனே வழங்கவேண்டும். ஒட்டுமொத்த உடலையும் மறைக்கும் கவசமும் வழங்கவேண்டும். ஏற்கனவே, வெண்டிலேட்டர் கருவிகள் குறைவாக உள்ளன. அந்தக்கருவிகள் மற்ற ஹார்ட், கோமா உள்ளிட்ட நோயாளிகளுக்கும் பயன்பட்டுவருவதால் இன்னும் கூடுதலாக வெண்டி லேட்டர்களை வாங்கவேண்டும். அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கவேண்டும் என்கிறார் கோரிக்கையாக.

சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் அமைப்புச்செயலாளர் த.நடராஜனிடம் நாம் பேசியபோது, சென்னையில் சுமார் 300 மொத்த விற்பனையாளர்கள் இருக்கிறார்கள். இதில், ஊரடங்கு சூழலில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் 20 சதவீதம்பேர் மருந்துகள் அனுப்பமுடியாமல் இருக்கிறார்கள். அனைத்து, மருந்துக்கடைகளிலும் தற்போது இலவச டோர் டெலிவரி மூலம் அத்தியாவசிய மருந்துகளை அனுப்புகிறோம். அதாவது, உங்கள் அருகிலுள்ள மருந்துக் கடைக்கு ஃபோன் செய்து வாட்ஸ்-அப்பு களில் டாக்டரின் மருந் துச்கீட்டை அனுப்பினால் வீட்டிற்கே வந்து மருந்துகளைக் கொடுத்து விட்டுப்போவார்கள். 10 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்ட மாஸ்க்கின் விலை கட்டுப்படி ஆக வில்லை என்ற காரணத்தினால் தட்டுப்பாடு இருந்தது. மத்திய அரசின் விலை நிர்ணயப்படி இனிமேல் அதிகபட்ச விலையாக 16 ரூபாய்க்கு விற்கப்படும். அதேபோல், 100 எம்.எல். ஹேண்ட் சானிட்டைஸர் 50 ரூபாய்க்குமேல் விற்கமாட்டார்கள் என்றார்.

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் கிடைக்கச்செயவதோடு மக்கள் இடைவெளி விட்டு வாங்குமளவுக்கு நடவடிக்கை எடுத்து கோரானா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவேண்டும்.
 


 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.